இரு திருமணங்கள்

இரு திருமணங்கள்


நேற்று முகூர்த்த நாள்..
ஊருக்குள் பலப்பல விழாக்கள்.. நானும் சில விழாக்களில் கலந்துகொண்டேன்.

அது ஒரு மருத்துவர் குடும்ப திருமணம்.! அவரது மகனுக்கு ஈரோட்டில் உள்ள பிரபலமான தொழிலதிபர் குடும்பத்துப்பெண்ணை மணம் முடிக்கிறார்கள். நல்ல கூட்டம். சுமார் ஆயிரம்பேர் அமரக்கூடிய மண்டபம். ஆயிரம் பேர் அமர்ந்தும் இருந்தோம். முகூர்த்த வேளை நெருங்கியது. யாருக்கும் அட்சதை கொண்டு தரப்படவே இல்லை. ஏன் இப்படி செய்கிறார்கள்? மறந்துவிட்டார்களோ? என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். அந்த விஷயம் மணமகனின் தந்தை (மருத்துவர்) காதுக்குப்போனது. அவர் மேடையில் இருந்தே ' நான் இருக்கிறேன்' என்பதுபோல் ஒரு பாவனை செய்தார்.

முகூர்த்த நேரமும் வந்தது. தாலியும் கட்டியாகிவிட்டது. எல்லோரும் எழுந்து அமர்ந்தார்கள். அதற்குப்பிறகுதான் அந்த மருத்துவர் (மணமகனின் தந்தை)
ஒரு அற்புதமான காரியம் செய்தார். மணமக்களை கீழே அழைத்துவந்தார். ஒவ்வொரு வரிசை நாற்காலிகளுக்கு அருகிலும் , அவர்களை நிறுத்தினார்.
அட்சதை தட்டை எடுத்துவரச்செய்து, அந்த வரிசைக்காரர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கச்செய்தார். அதேபோல் மண்டபத்தில் இருந்த
ஒவ்வொருவரும் வாழ்த்தும்படிச்செய்தார். உண்மையிலேயே மனநிறைவாகவும், 'அட! இது நல்லா இருக்கே!' என்று நினைக்கும்படியும் செய்தார்.
தாலிகட்டும்போது , என் பின் வரிசைக்காரர்களின் அட்சதையும், வாழ்த்தும் என் தலைக்கு வருவது தவிர்க்கப்பட்டது. இதை இனிமேல் நம் குடும்ப திருமணங்களில் பின்பற்றுவது என்று சபதமே எடுத்துக்கொண்டேன்.

**************************************************************************

அடுத்த திருமணம்... என் ஒன்றுவிட்ட அண்ணன் மகளுக்கு!

அவர் என் ஆதர்ச கம்யூனிச குரு! எங்கள் குடும்பங்களில் பக்தி முத்திப்போய் இருந்தபோது அவர் சர்வசாதாரணமாக மார்க்ஸையும், லெனினையும்
வீட்டுக்குள் உலவ விட்டவர். கடவுள் ஒரு ஏமாற்றுவேலை என்று எனக்கு போதித்தவர்.எண்பதுகளின் ஆரம்பத்தில் அவருக்கு திருமணமானபோது எந்த
சம்பிரதாயங்களும் செய்யாமல், புரோகிதர் இல்லாமல், சாதாரணமாக நண்பர்கள் வாழ்த்த தாலி கட்டியவர்.
கம்யூனிசத்தின் மேல் எனக்கு ஏற்பட்ட பற்றுக்கு அவரும் ஒரு காரணம். ஆனால் அதில் நான் தீவிரமாக இல்லை என்பதில் அவருக்கு என் மேல் இப்போதும் வருத்தம் உண்டு. சிறுவயதிலேயே மூலதனம் என்ற தலையணை அளவு புத்தகத்தை என்னைப்படிக்கவைத்த பெருமை அவருக்கு உண்டு! ( அப்போது பல புரியாத தகவல்களை எளிய நடையில் எனக்குப்புரிய வைத்தவர்) ! மனைவியை தோழர் என்று அழைத்துப்பழகியவர்....மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டங்களில்
தெளிவாக முழங்கியவர். தொழிற்சங்க வாதிகள் அனேகம்பேர் எப்போதும் அவர் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.
இடையில் பல வருடங்கள் அவருடன் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. நானும் உலகமெல்லாம் சுற்றிவிட்டு ஊருக்குள் வந்தபோது எங்காவது திடீர் சந்திப்புகள் நிகழ்வதுண்டு. நல்லா இருக்கீங்களா? எல்லாரும் நலமா? என்ற சின்ன உரையாடல்களுடன் எங்கள் சந்திப்புகள் முடிந்துவிடும். அவர் மகளுக்குத்தான் திருமணம்.

மண்டபத்துக்குச்சென்றபின் தான் தெரிந்தது. திருமணம் முழுமையான சாஸ்திர சம்பிரதாயங்களுடன் நடைபெறுவது! பெரிய திருப்பதி வெங்கடாஜலபதி படத்துக்கு முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்து கொண்டி ருந்தார்.மனைவியை அழுத்தமாக பெயர் சொல்லி அழைத்தார்.முழுக்க முழுக்க
ஒரு ஆதர்ச அப்பாவாக மாறி இருந்தார். அனைத்து கம்யூனிஸ்ட் நண்பர்களையும் அழைத்திருந்தார். நம்ப கொள்கையெல்லாம் என்கிட்ட இப்ப எதிர்பார்க்காதீங்க என்று சத்தம்போட்டு சிரித்து சொல்லிக்கொண்டிருந்தார்.
அடடா வாழ்க்கை எப்படியெல்லாம் கொள்கை மாற்றம் கொள்ளவைக்கிறது? நல்லவேளை நமக்கெல்லாம் இந்தமாதிரி கொள்கை எதுவும் இல்லை :-)


யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.
40 வயது வரை கம்யூனிசம் விரும்பாதவன் மண் !
40 வயதுக்கு மேல் கம்யூனிசம் விரும்புபவன் முட்டாள் !


Comments

  1. இரண்டுமே அட்டகாசமான அனுபவம் தான்,சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  2. இந்த வார ஓ பக்கங்கள் படிச்சி பாருங்க. கிட்டத்தட்ட ரெண்டு பேரும் ஒரே சப்ஜெக்ட் பேசியிருக்கிங்க.

    ReplyDelete
  3. //யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.
    40 வயது வரை கம்யூனிசம் விரும்பாதவன் மண் !
    40 வயதுக்கு மேல் கம்யூனிசம் விரும்புபவன் முட்டாள் !//
    அது 40 அல்ல.20 என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. /
    அடடா வாழ்க்கை எப்படியெல்லாம் கொள்கை மாற்றம் கொள்ளவைக்கிறது? நல்லவேளை நமக்கெல்லாம் இந்தமாதிரி கொள்கை எதுவும் இல்லை :-)
    /

    சூப்பரு!!

    ReplyDelete
  5. /
    யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.
    40 வயது வரை கம்யூனிசம் விரும்பாதவன் மண் !
    40 வயதுக்கு மேல் கம்யூனிசம் விரும்புபவன் முட்டாள் !
    /

    நான் மண்ணாவே இருந்திக்கிறேன்பா !!

    ReplyDelete
  6. திருமணத்தில் அட்சதை பற்றி எழுதிய முதல் தகவல் அருமை.

    ReplyDelete
  7. என் மாமா ஒருத்தர் தி.க. காரர். அவரோட 70 வயசு நிறைவுக்கு வீட்டுல ஹோமம் வளத்தி ஏன் கேக்கறீங்க. நிறைய பேர் அப்படித்தான். குடும்பத்துக்காக கொள்கைகள விட்டுக்குடுக்கறவங்களும் உண்டு.

    ReplyDelete
  8. //வடுவூர் குமார் said...

    இரண்டுமே அட்டகாசமான அனுபவம் தான்,சந்தேகமே இல்லை.//

    வாங்க !

    அன்றைக்கே இன்னும் நிறைய அனுபவம் கிடைச்சது.!

    :)

    ReplyDelete
  9. //தம்பி said...

    இந்த வார ஓ பக்கங்கள் படிச்சி பாருங்க. கிட்டத்தட்ட ரெண்டு பேரும் ஒரே சப்ஜெக்ட் பேசியிருக்கிங்க.//

    வாங்க வாங்க தம்பி!

    ரெண்டு சம்பவத்துக்கும் இடையில் கோடு போடும்போது...தம்பி மாதிரி பண்றோமோன்னு நினைச்சுக்கிட்டேன்.

    வந்துட்டீங்க!

    ஓ.பக்கங்கள் படிக்கலையே!
    சரி..குமுதம் வாங்கி படிச்சுருவோம்.

    ReplyDelete
  10. //கோவை சிபி said...


    அது 40 அல்ல.20 என்று நினைக்கிறேன்.//

    அப்படியா? தெரியலையே!

    20 வயசுக்குள்ள கம்யூனிசம் தெரிஞ்சுருமா?

    ReplyDelete
  11. //மங்களூர் சிவா said...


    நான் மண்ணாவே இருந்திக்கிறேன்பா !!//

    அட...ஆமா..அதான் நிறைய ரோஜாச்செடி முளைக்கிது!

    :)

    ReplyDelete
  12. //மங்களூர் சிவா said...

    திருமணத்தில் அட்சதை பற்றி எழுதிய முதல் தகவல் அருமை.//

    முதல் சோதனையே உங்க கல்யாணத்தில்தான்..!

    :) செஞ்சுருவோம்..!

    ReplyDelete
  13. //சின்ன அம்மிணி said...

    என் மாமா ஒருத்தர் தி.க. காரர். அவரோட 70 வயசு நிறைவுக்கு வீட்டுல ஹோமம் வளத்தி ஏன் கேக்கறீங்க. நிறைய பேர் அப்படித்தான். குடும்பத்துக்காக கொள்கைகள விட்டுக்குடுக்கறவங்களும் உண்டு.//

    வாங்க..வாங்க!

    ஆத்திகர்களை விட...தி.க காரங்களுக்கு
    பக்தி அதிகமாத்தான் இருக்கும்.
    இல்லைன்னா சிலைவழிபாட்டை கிண்டல்பண்ணின
    பெரியார் 'சிலை' க்கு மாலை போடுவாங்களா?

    தி.க. கொள்கையே தனிதான் போங்க!!

    :))

    ReplyDelete
  14. அவுங்க அகராதில...
    அதுமட்டும் மூடப்பழக்கம் இல்லை!

    அவுங்களுக்கு
    முழுமையா பெரியாரையும் தெரியாது.
    பெருமாளையும் தெரியாது...

    என்ன ஒரு ரைமிங் ஆஹா! :)

    ReplyDelete
  15. கம்யூனிசத்தை கடைபிடித்தவரை மனைவியை தோழர் என அழைத்தவர்............???? கவனிக்க

    ReplyDelete
  16. நல்ல தகவல்...முரணையும் சேர்த்துதான்.
    வயதும்,அனுபவமும் கூடக் கூட கொள்கைகள் மாறிக்கொண்டே போகும்.

    அந்த‌ அட்சதை போடும் முறை என் திருமணத்திலும் கடைபிடிக்கப் பட்டது

    ReplyDelete
  17. //சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

    Incident 1. nallaarukku
    Incident 2. =)))//


    வாங்க சார்! நன்றி!

    ReplyDelete
  18. //ரமணன் said...

    கம்யூனிசத்தை கடைபிடித்தவரை மனைவியை தோழர் என அழைத்தவர்............???? கவனிக்க//

    வாங்க ரமணன்! வருகைக்கு நன்றி!

    அதைத்தான் கவனமாகப்பார்த்தேன். இப்போதெல்லாம் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்.

    ReplyDelete
  19. //uma kumar said...

    நல்ல தகவல்...முரணையும் சேர்த்துதான்.
    வயதும்,அனுபவமும் கூடக் கூட கொள்கைகள் மாறிக்கொண்டே போகும்.//

    வாங்க ! ஆமா ...கண்டிப்பா!

    //அந்த‌ அட்சதை போடும் முறை என் திருமணத்திலும் கடைபிடிக்கப் பட்டது//

    அடடே! வாழ்த்துக்கள்! இவ்வளவு நாளா இந்த முறை எனக்கு தெரியாம இருந்தது. அதான்...!

    ReplyDelete
  20. நீங்கள் இரண்டாவதாகக் குறிப்பிடும் அந்த 'முன்னாள் தோழரை' வைத்துப் பொதுப்ப்டையான ஒரு அனுபவத்தை உருவாக்கிவிடமுடியாது அல்லவா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !