கடைசி விருந்தாளி !




சென்ற வாரம் ஒரு நாள் மிகச்சாதாரணமாய்த்தான் விடிந்தது.

என் அன்பு நண்பர் ஷேக் அப்துல்லா...ஊரில் ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார். புதுக்கோட்டை போன்ற ஒரு பின் தங்கிய மாவட்டத்திற்கு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தைக் கொண்டு வரவேண்டுமென்று முயன்று , அதில் வெற்றியும் பெற்று—கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏற்றுமதி நிறுவனத்த்தைத் தன் சகோதரர்களுடன் சேர்ந்து தொடங்கி , மிகவும் வெற்றிகரமான நிறுவனமாக்கி அந்தப்பகுதியில் சுமார் 120 பேருக்கு வேலையும் அளித்து கலக்கிக்கொண்டிருக்கிறார்.

வயது 32தான் ஆகிறது. எல்லாச்செயல்களிலும் ஒரு தெளிவு, பண விஷயத்தில் மிகவும் நேர்மை ஆகியவை நான் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் கண்கூடாகக்கண்டது. யாருக்கும் பயப்படாமல் தன் மனதுக்குத்தோன்றியதை அப்படியே கூறும் விஷயத்தில் நாங்கள் இருவருமே ஒத்துப்போனதால் எங்கள் நட்பு நீடித்தது.

குடும்பத்திலும் மிகவும் அக்கறை கொண்டவர்..! அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் ....மனைவியிடம் மிகவும் பிரியமாக இருப்பார். அண்ணன்களிடம் மிகவும் மரியாதையாக , அன்பாக நடந்துகொளவார்... நல்ல வீடு ஒன்று தனக்காகக் கட்டவேண்டுமென்று நினைத்து ஆறு மாதத்துக்கு முன்னால் மிகுந்த பொருட்செலவில் ஒரு மாளிகையைக்கட்டியிருக்கிறார். இவரது நிதி நி்ர்வாகத்திறனைப்பார்த்து அந்த மொத்தக்குடும்பமும் குடும்ப நிதி நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறது.

யாரிடம் எப்போது பணம் வாங்கினாலும், சொன்ன நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னதாக கொடுத்துவிட்டு கம்பீரமாக நடை போடுவார்.

தொலைபேசியில் மிகவும் தெளிவாக, சுருக்கமாகப்பேச இவரைப் பார்த்து கற்றுக்கொள்ள முயன்று வருகிறேன்.

'புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டும் வரவே மாட்டேங்குது சார்...! நீங்கதான் சின்னப்புள்ள மாதிரி புத்தகமும் கையுமா அலையிறீங்களே அதான் உங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசுறேன் என்று சிரித்துக்கொண்டே கூறுவார்.

என்னால எல்லாம் எதுக்கும் பொறுத்துக்கிட்டிருக்க முடியாது சார்! எல்லாம் உடனுக்குடனே நடந்தாகணும் என்று அடிக்கடிக்கூறுவார்.

யாரிடம் என்ன பேசினாலும், அவர்களிடமே நேராகச் சொல்லிவிடுவார். ஒருவரைப்பற்றி பின்னால் பேசி நான் கண்டதே இல்லை!

வசீகரமான சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்துவிடுவார்..!

அந்த அளவு என் நண்பர்கள் வரிசையில் நீங்கா இடம்பிடித்த அன்பு நண்பர் ஷேக் அப்துல்லா சென்ற வாரத்தில் ஒரு நாள் மிகவும் அசாதாரணமாய் இறந்துபோனார்...!

மனைவியை பிரசவத்திற்கு ஊருக்கு அனுப்பிவிட்டு, குற்றாலம் செல்லலாம் என நண்பர்களுடன் சென்று, கூட வந்த நண்பர்களில்

ஒருவரே சுமோவை ஓட்ட அதிகாலை 3 மணியளவில் ராஜபாளையம் அருகே ஒரு லாரி மீது நேருக்கு நேர் மோதி அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

அந்த நாள் எனக்கு சாதாரணமாய் முடியவில்லை!

அவருக்கு...நேற்றுத்தான் மூன்றாவதாக அழகான ஒரு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது...

இன்று வரை மரணத்தை ஒரு கடைசி விருந்தாளியாக நினைத்து, அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாத என்னை, மிகவும் காயப்படுத்தி , இன்றுவரை அதிலிருந்து மீளமுடியாமல் செய்த ஷேக் அப்துல்லா ....! ?




யாருக்கு, என்ன கற்றுக்கொடுக்க இந்த மரணம்.!? கடைசி விருந்தாளியையும் உடனுக்குடன் வரவழைத்துவிட்டீர்களே ஏன்?

Comments

  1. :-( My deep condolences! It is too soon to wrap up a person's life at 32...

    ReplyDelete
  2. ஆமாம் அண்ணா...! அதுதான் மிகவும் வருத்தத்துக்குரியதாக்குகிறது.
    இன்னும் நாம் சரியா வாழலையோ?

    என்று யோசிக்க வைக்கிறது.

    விபத்துக்களின் பயங்கரமும்..ஓட்டுநர்களின் அலட்சியமும்.
    எந்த அளவு ஆபத்தை விளைவிக்கிறது பாருங்கள்!?

    ReplyDelete
  3. மிகவும் வருத்தமாக இருக்கிறது.... அப்துல்லாவுக்கு எனது அஞ்சலிகள்....:-((((

    ReplyDelete
  4. மனம் கனத்துப் போகிறது..
    அதுவும் அந்தப் புதிய உயிரினை நினைக்கையில்!!

    ReplyDelete
  5. //ச்சின்னப் பையன் said...

    மிகவும் வருத்தமாக இருக்கிறது.... அப்துல்லாவுக்கு எனது அஞ்சலிகள்....:-((((//

    வாங்க!
    :(

    ReplyDelete
  6. //சந்தனமுல்லை said...

    மனம் கனத்துப் போகிறது..
    அதுவும் அந்தப் புதிய உயிரினை நினைக்கையில்!!//

    ஆமாங்க ! அதுதான் என் பெரிய கவலை!

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாருக்கு மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பித்து வைக்க துஆ செய்கின்றோம்

    ReplyDelete
  8. மிக வருத்தமான செய்தி.
    :((((

    ReplyDelete
  9. சுரேகாண்ணே! அந்த ஷேக் அப்துல்லாவும் நானும் பாலையாப் பள்ளியில் 1 வதில் இருந்து 8 வது வரை ஒன்றாகப் படித்தோம். என்னைவிட கீழ 3 வீதியைச் சேர்ந்த இராஜேந்தீரன் அவனுக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். பள்ளி காலத்தில் இருந்தே யாருடனும் அதிகம் பேச மாட்டான். எங்களைப் போல மிகவும் சிறப்பாக படிப்பான் என்றெல்லாம் சொல்ல முடியாது.ஆனால் ஃபெயில் ஆகாமல் படிப்பான். ஆனால் என்னுடன் படித்தவர்களில் இந்த வயதில் அதிகம் சம்பாதித்தவன் அவன் தான். எங்களைப் போல முதல் ராங்க் எடுத்தவர்கள் அல்ல.இங்கு சென்னையில் தின்கரன் பேப்பரைப் பார்த்துதான் முதலில் விஷயம் தெரிந்து கொண்டேன். இறைவன் அவனுக்கு இம்மையில் வைத்த குறையை மறுமையில் நிவர்த்தி செய்யட்டும்.

    ReplyDelete
  10. இறைவன் அவனுக்கு இம்மையில் வைத்த குறையை மறுமையில் நிவர்த்தி செய்யட்டும்.

    ஆழ்ந்த அனுதாபங்களுடன் வழிமொழிகிறேன்.

    :(

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !