அய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்குறிப்பு!


ஒரு சிறுகதைத்தொகுதியிலோ, ஒரு மாத, வாரப்பத்திரிக்கையிலோ புரட்டிக்கொண்டே வரும்போது ஒரு கதையைப்படிக்கிறோம். அது மிகவும் சுவையாக இருக்கிறது. உடனே அந்த எழுத்தாளர் யார் என்று பார்ப்போம். அவரைப்பற்றி நண்பர்களிடம் கேட்போம். அவர்களுக்கும் அவரைப்பற்றித்தெரிந்திருந்தால், அவர் எழுதிய மற்ற கதைகளைப்பற்றி தெரியவரும். அவற்றைத்தேடிப் படிக்க ஆரம்பிப்போம்.

பின்னர் அவர் எந்தப்புத்தகத்தில் எழுதினாலும், எதைப்புத்தகமாக எழுதினாலும் விரும்பி வாங்குவோம். அவரது படைப்புகளின் நடையைப்பற்றி சிலாகிப்போம். அவரை ஒரு நாள் சந்தித்து அவரது படைப்புகளைப்பற்றி பாராட்டியும் , கொஞ்சமாக விமர்சித்தும் பேசவேண்டும் என்று திட்டமிட்டு, அதே போல் ஒரு நாள் அவரைச் சந்தித்து, சிந்தித்ததில் பாதியளவாவது அவரிடம் பேசிவிட்டு, அந்த
எழுத்தாளரை நேரில் சந்தித்தேன் என்று நண்பர்களிடம் கூறுவோம். பின்னர் (அவருக்கோ, நமக்கோ) பிடித்திருந்தால் அந்தச் சந்திப்பு நட்பாகத்தொடரும். இதுதான் பொதுவாக எல்லா வாசகர்களுக்கும் நடப்பது!

பதிவுலகில் அது அப்படியே வேறு கோணம்! முதலில் ஒரு பதிவைப்படித்து, அது பிடித்ததால், அந்தப்பதிவருடன் நட்புக்கொண்டு, அந்த அன்பின் வெளிப்பாடாய் அவரது படைப்புகள் எந்த அச்சு ஊடகத்தில் வந்தாலும் வாழ்த்துத்தெரிவித்து மகிழ்வோம். அதுவே இன்னும் கொஞ்சம் உயர்ந்து, அவர் ஒரு படைப்பை நூலாக வெளியிடுகிறார் என்றால், அதற்கு சக பதிவராக, நண்பராக எல்லா ஊக்கங்களும்
கொடுத்து, அந்தப் படைப்பை உலகறியச்செய்வோம். அதனால் அவர்கள் சுமாரான படைப்புகளைத் தந்துவிடவும் முடியாது.அப்படி ஒரு நட்புச்சாரலில் பூத்த மனோரஞ்சிதப்பூக்கள்தான் இந்தப் புத்தகங்கள்!

நண்பர்கள் நிறையப்பேர் அலசியிருந்தாலும்...என்னிடமுள்ள நகல்கள் சொன்னவற்றை... இதோ!

நர்சிம்மின் அய்யனார் கம்மாவில் ஒரு கலவையான உணர்ச்சித்தாண்டவம் ஆடியிருக்கிறார்.

தலைப்புக்கதையின் கடைசி இரு வரிகள் - நெடுஞ்சாலைத்திருப்பத்தில் திடீரென வரும் தண்ணீர் லாரி!

தாயுமானவன் - //சுடுகாட்டுக்குத் தெலுகு வார்த்தைக்கு எங்கே போவேன் என்று கண்களில் வழிந்த நீரைத்துடைத்துக்கொண்டே ..நாக்கை வெளியே நீட்டி இறந்ததுபோல் காட்டி, புதைப்பதற்கு என்று செய்கையில்....// அழுதேவிட்டேன் அய்யா!

திகட்டத்திகட்டக் காதலி - காதலில் இவ்வளவு திறமையாக வெல்லமுடிவது வரம்! எஸ் எம் எஸ் ரகசியங்கள் நிறைய வெளிவந்திருக்கிறது.

செம்பட்டைக்கிழவி - // முக்கியமாய், வாட்சு கட்டிக்கொண்டிருக்கும் கையை உடலைவிட்டு சற்றுத்தள்ளி வைத்துக்கொண்டும் நடக்கும் அன்றாட மக்கள் // காட்சிப்படுத்தினால் சிரிப்பு வரவழைக்கும், அவர் கவனம் தெரிகிறது.

ஞாபகமாய் ஒரு உதவி - யாருக்கெல்லாம் இப்படி வாக்குக்கொடுத்தோம் , அவர்கள் என்ன ஆனார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

ம'ரணம்' - // கார்த்திக் கிளினிக். சற்று சுத்தமாக இருந்தது. சத்தமாகவும் தான் // வார்த்தை விளையாட்டு அழகு!

சந்தர்ப்பவதம் - // திலீப் எப்படி இருப்பான் என்று ஒரு பாரா வர்ணிப்பதைவிட ஏதாவது ஒரு டிவி சீரியலில் ஒரே ஒரு மனைவியுடன் மட்டும் வாழும் ஏதாவது ஒரு கதாநாயகனை நினைத்துக்கொள்ளுங்கள் // - என்னா ஒரு லந்து! கொஞ்சம் சுஜாதாவும், நிறைய நர்சிம்மும் வந்துபோகிறார்கள்.

தலைவர்கள் - சூழல் சித்தரிப்பும், தயாரிப்பும் செய்து கலக்கியிருக்கிறார்.

மனக்குரங்கு , தொடரும் முடிவுகள், மாநரகம், வெத்தலப்பொட்டி என வெவ்வேறு களங்களில் கிராமம், நகரம் என்று வாழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார்.

இதில் நான் எதிர்பார்த்து..இல்லாமல் போன கதை ஒன்றுண்டு.. மோட்டிவ் இல்லாமல் கொல்லும் மோட்டிவ் கொண்ட கொலைக் கதை! ஆ.வியில் வந்தது. ஏன் பாஸ் விட்டுட்டீங்க?

பொதுவாக இந்தக்கதைகளில் ஒரு சில வர்ணனைகள் அந்த காட்சியை ஒரு திரையில் ஓடவிட்டுக்காட்டுகின்றன. ஒரு சில வார்த்தை விளையாட்டுகளான வசனங்கள் அவரது இயல்பான நகையுணர்வை மீட்டுகின்றன. எல்லாவிதமான கதைகளிலும் தன்னால் களம் அமைக்கமுடியும் என்று நிரூபித்திருக்கிறார். 'நறுக்' என்ற நர்சிம்..!

அய்யனார் கம்மாவில் நிழல் தருவதற்காக ஒதுங்கியதுதான் இந்த சங்கர் நாராயணின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்!

காமத்தை கொல்ல நினைத்தாலே அது இன்னும் பல்கிப்பெருகும் என்பதுதான் உண்மை! அதுபாட்டுக்கும் கெடந்துட்டுப்போகுது கழுதை என்றோ, அதுவும் மகிழ்வான தருணங்களைத்தரும் ஒரு உணர்வே என்றோ மதித்தோமென்றால், அதுவும் சும்மா இருக்கும்! நமது வேலையும் கெடாது.

எனக்குத்தெரிந்த ஒரு அன்பான இயக்குநர் எழுதிய கவிதையின் சாரம் இது...

கலவியால்தான்
எல்லோரும் பிறந்தோம் என்று
நண்பன் சொன்னபோது
எங்கள் பெற்றோர் மட்டும்
நல்லவர்கள் என
எண்ணியிருந்தேன்
அடுத்த குழந்தை வீட்டில்
பிறக்க அவர்கள்
எடுத்த முயற்சியை
அன்றொரு இரவில்
கண்டபோது
அதிர்ந்தேபோனேன்.

யாருடைய காமம், எங்கு விதைக்கப்படுகிறது. எங்கு அறுக்கப்படுகிறது என்று சில கதைகளில் சங்கர் நாராயண் கதாபாத்திரங்கள் மூலமாக விளாசியிருக்கிறார். முத்தத்தில் ஆரம்பித்து ,தலைப்புக்கதை வரையில் பல இடங்களில் பெண்ணும் , மதுவும் கதாபாத்திரங்களுக்கு போதையளிக்கிறார்கள். சில இடங்களில் போதனை அளிக்கிறார்கள்.

துரை..நான்..ரமேஷ் சார்! சூப்பர்! ராஜியை ஒரு நாள் வீட்டுக்கு அழைச்சு மனைவி கையால தலைவாழை இலைபோட்டு சாப்பாடு போடணும் ஜி!

என்னைப்பிடிக்கலையா? - அதிர்ச்சியாகவும், கோபமாகவும், படித்தவர்கள் உணர்ந்தாலும், சமூக ஆர்வலனாகவும் , குடும்பநல ஆலோசகனாகவும் இருக்கும் எனக்கு நன்றாகத் தெரியும். இன்று இது பல்கிப்பெருகியிருக்கிறது. இந்துஸ்தான் லீவர் உயரதிகாரியின் மனைவிக்கு இண்டேன் கேஸ் சிலிண்டர் பாய் போதும்! கடைசிவரிகள் யதார்த்த சிந்தனையின் வீச்சு!

தலைப்புக்கதையில் சொல்லப்படும் பாடல்களை சும்மா எழுதியிருக்க வாய்ப்பில்லை. தன் திறன் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார்.!

காமம் கொல்! - சூப்பரான கதை! சாமியாரின் மனநிலைக்கு யார் காரணம்! இதைத்தான் ஓஷோ சொல்றாரு! அவரைப்போய்......!

மாம்பழ வாசனையின் தீவிரம் ஒரு ரகமென்றால், நண்டின் , கணவன் மனைவி அன்பு ' நான் அவனில்லை' என்று ஆசிரியரைக் கத்த வைத்திருக்கிறது.

மொத்தத்தில் கேபிள் சங்கர் என்று உலகத்தாரால் அறியப்படும், வருங்கால சூப்பர் ஹிட் திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் நாராயணின் லெமன் ட்ரீயில் வீசிய எல்லா வாசனைகளும் வாழ்க்கை பொதுவாக எல்லோருக்கும் கொடுத்திருப்பதுதான்.! சிலருக்கு நுகர மட்டும் விருப்பம்! சிலருக்கு நுகர்ந்ததை மறுக்க! இவருக்கு நுகர்ந்ததைப் பரப்ப!.....

இப்படியாக நான் எழுதுவதே டைரிக்குறிப்புதான்....என்னுள் நட்பாகத்தோன்றி நானாகவே மாறிவிட்ட பரிசலின் தொகுப்பை முதலில் படித்த கர்வம் எனக்கு ஏறியிருப்பதால்..அனைவரும் அதற்கான என் பார்வையை...புத்தகம் வாங்கி முன்னுரையில் படியுங்களேன்....நான் எப்படி எழுதினாலும்..என்னை நானே வாழ்த்திக்கொள்வதுபோல் தோன்றும். அப்படித்தானே பரிசல்?

ஒரே ஒரு திருத்தம் அதில் :
//ஒவ்வொரு கதையிலும் தன் பரிமாணத்தையும், வாசிப்பின் ஆழத்தையும் நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர். தனிமை-கொலை-தற்கொலை , தலைப்பே கவிதையாக இருக்க, தனிமை இரு மனிதர்களை எப்படி முடிவெடுக்க வைக்கிறது என்று அழகுபடக்கூறியிருக்கிறார். இந்தக்கதையில்..
'தாமரை மலர்வதை யாராவது வீடியோ எடுத்திருக்கிறார்களா? அப்படியே எடுத்திருந்தாலும் மெ து வா க அது மலர்வதில் என்ன சுவாரஸ்யமிருக்கும்? ' என்று ஒரு இடம் வருகிறது. சில விஷயங்களை எழுத்தில் கொண்டுவரமுடியாது என்ற எண்ணத்தை உடைத்திருக்கிறது இந்த 'மெ து வா க ' என்ற வார்த்தை ! இதைப்படிக்கும்போதே தாமரை மலர்வதை நாம் மெதுவாக உணரலாம். வார்த்தைகளில் காட்சியமைக்கும் திறன் மிகவும் அற்புதம்!//

இந்த வரிகளில் ...மெ து வா க என்பது மெதுவாக என்று அச்சிடப்பட்டுவிட்டது. அதனால் நான் சொன்னதன் அர்த்தம் புரியாமல் போகலாம். பிழை பொறுத்து படித்துச்சொல்லுங்கள்!

வாழ்த்துக்கள் நூலாசிரியர்களே...! நன்றிகள் பதிப்பகத்தாரே!

Comments

  1. //சிலருக்கு நுகர மட்டும் விருப்பம்! சிலருக்கு நுகர்ந்ததை மறுக்க! இவருக்கு நுகர்ந்ததைப் பரப்ப!.....//

    உங்க விமர்சனம் அருமை சுரேகா இது ஒன்றே போதும்.. அவருடைய மொத்த புத்தகத்துக்கான விமர்சனம் ..!!!

    ReplyDelete
  2. வாங்க தேனம்மை ஜி!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  3. மிக அருமையான பகிர்வு,சுரேகா.

    நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

    உங்களுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள் மக்கா!

    ReplyDelete
  4. அன்பின் சுரேகா

    அருமையான விமர்சனம் - புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன - நேரமும் மன நிலையும் இன்னும் வரவில்லை. விரைவினில் படித்து விடுகிறேன்

    வாழ்த்துகள் சுரேகா

    ReplyDelete
  5. இதுவரை வந்த விமர்சனங்களில் இதைத்தான் டாப்பு என்பேன்.

    ReplyDelete
  6. அருமையான பார்வை. நூலாசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தி பெஸ்ட் சார்..
    என் விமர்சனம் பாருங்க..
    http://anbudan-mani.blogspot.com/2010/02/blog-post_17.html

    ReplyDelete
  8. /சிலருக்கு நுகர மட்டும் விருப்பம்! சிலருக்கு நுகர்ந்ததை மறுக்க! இவருக்கு நுகர்ந்ததைப் பரப்ப!.....//

    எப்பிடி இப்படி.. சும்மா கலக்கிறீங்களே..:)

    ReplyDelete
  9. புத்தகங்களைப் பற்றிய உங்கள் ரசனையான பகிர்தல் அருமை. நன்றியும்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  10. வாங்க பா.ராஜாராம்.!
    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  11. வாங்க சீனா சார்!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  12. வாங்க ராஜு!

    மிக்க நன்றிங்க ! எனக்குத்தோணினதை எழுதினேன் அவ்வளவுதான்!

    ReplyDelete
  13. வாங்க அன்புடன் மணிகண்டன்..!

    மிக்க நன்றிம்மா! பாத்துடுவோம்.

    ReplyDelete
  14. வாங்க நூலாசிரியரே..!

    இரண்டுதடவை படிச்சதுக்கப்புறம் ஒரு தெளிவோட எழுதின பார்வை இது!

    நல்லாருந்தா அந்தப்புகழனைத்தும் உங்களுக்கே கேபிள் ஜி!

    ReplyDelete
  15. வாங்க இராமசாமி!
    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  16. வாங்க செ.சரவணக்குமார்!
    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  17. வாங்க வாசு சார்!

    மிக்க நன்றி சார்! நீங்க பதிப்பகக்கடமைகள் பத்தி பேசினது சுருக்கமாகவும், அழகாகவும் இருந்தது. நீங்க சூப்பர்!

    ReplyDelete
  18. இந்த வாரம் முழுதுமே வாசித்தாலும் இன்று தான் பின்னூட்டம் இட முடிந்தது; இந்த வாரத்தில் பல நல்ல பதிவுகள் தந்தீர்கள். குறிப்பாய் இந்த இரு புத்தக அலசல் அட்டகாசம்

    ReplyDelete
  19. வாங்க டி.வி.ராதாகிருஷ்ணன் சார்!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  20. வாங்க மோகன்குமார்.!
    மிக்க நன்றிங்க!
    உங்கள் வருகையும் , வாழ்த்தும் வரம்!

    ReplyDelete
  21. வித்தியாசமான விமர்சனம். புத்தகம் எங்கு கிடைக்கிறது?

    ReplyDelete
  22. வாங்க தண்டோரா ஜி!
    உங்களிடம் பேசவேண்டுமென்ற ஆவல் இரண்டுமுறை தள்ளிப்போய்விட்டது.

    என்னாது...காந்தியை சுடணுமா? :))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !