பெயருக்குப் பின்னால்






            பள்ளி செல்ல ஆரம்பித்து, கொஞ்சம் விபரம் தெரிந்த வயதில்,  பெயருக்குப்பின்னால் படித்த பட்டம் போட்டுக்கொள்ளும் ஆசிரியர்களைக்கண்டு, பிரமிப்பாக இருக்கும். அவர்கள் வீட்டுக்கதவில் பெயர் எழுதி, பின்னால். M.A. என்று போட்டுக்கொள்வதை மிகவும் ஆச்சர்யமாவும், மரியாதையாகவும் பார்ப்பேன்.

      நண்பர்களிடையே, ஒருவரைப்பற்றி பேசும்போது, அவரது படிப்பையும் சேர்த்துத்தான் பேசுவோம். அவுங்க மாமா இளங்கோ பி.எஸ்ஸி தெரியுமுல்ல! என்போம். அந்த இரண்டு அல்லது மூன்று எழுத்தைப்பெறுவது மிகவும் கடினம் என்று கவலைப்படுவோம். நாமெல்லாம் இப்படிப் படித்துவிடுவோமா என்று ஏங்குவோம்.

        எங்கள் பள்ளி தட்டச்சு ஆசிரியர் கன்னாபின்னாவென்று படித்து, அவர் பெயர்ப்பலகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பட்டத்தை சேர்த்துக்கொண்டே போவார்.

      ’இந்த ஆளு எப்பதான் படிக்கிறாரு? எப்படி இவ்ளோ பட்டம் வாங்கினாரு?’ என்று பேசிக்கொண்டே அவரது வீட்டைக் கடந்திருக்கிறேன்.

      என் தோழி ஒருத்திக்கு, தன் பெயருக்குப்பின்னால், ஆங்கில எழுத்துக்கள் எல்லாவற்றிலும் பட்டம் இருக்கவேண்டும் என்று வெறிகொண்டு திரிவாள். தனக்கான பெயர்ப்பலகையின் நீட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் என்னைக் கொல்லுவாள்.
      
       சில வீடுகளின் வாசலில் பெயரை சிறியதாகப்போட்டுவிட்டு படிப்பை பெரியதாகப்போட்டிருப்பார்கள். அதிலும்.. M.Sc(Hons) என்று இருக்கும். அது என்ன துறை என்று தெரியாமல் தவித்திருக்கிறேன். ஹானர்ஸ் என்பது தனித்துறை இல்லை, அதிக மதிப்பெண்கள் எடுத்தால் கொடுப்பது என்று தெரியவந்தபோது, பிரமிப்பை விட கடுப்புதான் கிளம்பியது.

   ஒரு சில குடும்பங்களில், திருமணப்பத்திரிகையில் பெயருக்குப்பின்னால் போடுவதற்கென்று படிக்கச்சொல்லி ஆண்களைக் கல்லூரிக்கு அனுப்புவார்கள். பெண்களாக இருந்தால் தொலைதூரக் கல்வி இயக்ககத்துக்கு விண்ணப்பம் பறக்கும்.
  
  எனக்குத்தெரிந்து ஒரு அரசியல்வாதி நண்பன். கையெழுத்துப்போட்டுவிட்டு அதன் கீழ் பெயர் எழுதவேண்டிய கட்டாயம் வந்தால், பெயர்..படித்த பட்டம் இரண்டையும் எழுதுவான். ஏனென்று கேட்டால், ‘நம்பளை கைநாட்டுன்னு நினைச்சுறக்கூடாது மச்சான்’ ! என்பான்.
  
  திருமணப்பத்திரிகைகள், போஸ்டர்கள் இவற்றில் பெயருக்குப்பின்னால்,பட்டம் போடாவிட்டால்,பெரிய களேபரங்கள் நடக்கும். என் நண்பன் ஒருவனுக்கு கல்லூரி முடித்தவுடன் ஓரிரு வருடங்களில் திருமணமானது. இவன் B.E., மணமகள் B.Sc,PGDCA. கடுப்பாகிவிட்டான். தன் படிப்பைவிட அவள் படிப்புதான் பெரிதென்று மற்றவர்கள் எண்ணுவார்கள் என்று சொல்லி, அவள் படிப்பில் PGDCA வை எடுக்கச்சொன்னான். அவர்கள் வீட்டில் முடியாது என்றார்கள்.

அவன் வருங்கால மாமனார்,
காசு செலவு பண்ணி படிச்ச படிப்பை எப்படித் தம்பி போடாம விடுறது? என்று என்னிடம் புலம்பினார்.

சின்னகோடு,பெரியகோடு முறையில், நான் ஒரு யுக்தி சொன்னேன். இவன் பெயருக்குப்பின்னால் .B.E (Computer Science) என்று போட்டுவிட்டால், இவனுடையது நிறைய எழுத்துக்கள் வந்துவிடும் என்றேன். அதையே ஒத்துக்கொண்டார்கள்.

பின்னர் பத்திரிக்கை இப்படி வந்தது.

Er. சாமிநாதன் B.E (Computer Science Engineering)
கௌரி .B.Sc. PGDCA

இரு குடும்பத்தாரின் மகிழ்வுடன் திருமணம் நடந்தேறியது.

     இதற்கெல்லாம் பயந்தே, என் திருமணப்பத்திரிகையில் இருவரது படிப்பும் போடவில்லை. நம் படிப்பைப்பார்த்து யாரும் திருமணத்துக்கு வரவோ, நிராகரிக்கவோ போவதில்லை. நம் குணம், பழகும் விதம் இவை தவிர, அதிகபட்சமாக, அவர்கள் வீட்டு விழாக்களுக்கு கூப்பிட்டபோது நாம் சென்றிருக்கிறோமா என்று பார்ப்பார்கள் என்பதுதான் என் வாதம். எங்கள் வீட்டில் படிப்பு போடுவதா, வேண்டாமா என்ற பேச்சு வந்தபோதே நான் மறுத்ததால் பெயர்கள் மட்டும் தாங்கி பத்திரிகை வந்தது. என் மாமனார் வீட்டுப்பத்திரிகையில் அடம் பிடித்துப் போட்டார்கள். நான் மறுத்ததற்கு அவர்..
      படிப்பு போடவேண்டாம்னு நல்லவிதமா நீங்க நினைக்கிறீங்க! ஆனா, படிக்காத மாப்பிள்ளை போலிருக்குன்னு என் சொந்தக்காரனும், ஊர்க்காரனும் நினைப்பான் என்றார்.

      விழா போஸ்டர்கள் இன்னும் பெரும்பாடு படும். வாழ்த்துத் தெரிவிக்கும் 35 பெயர்களில் ஒருவரது படிப்பு தவறாகவோ, இல்லாமலோ வந்துவிட்டால் போஸ்டர் செலவுக்கு அவர் தரவேண்டிய பங்கு கட்!
போஸ்டரில் படிப்பைப் போடாததால், விழாவுக்கே போகாத மனிதர்களெல்லாம் உண்டு.
    அதுவும் அச்சகத்தின் கணிப்பொறியில், தட்டச்சுபவருக்கும், விழாவினருக்கும் ஏதாவது ஏடாகூடம் நடந்தவாறே இருக்கும். ஒன்று..இவரே ஏதாவது தவறு செய்திருப்பார். கமலநாதன் B.Tech என்று அடித்துவிட்டு, மற்றவர்களுக்கும் அதே எழுத்து வடிவம் வருவதற்காக காப்பி,பேஸ்ட் செய்துவிடுவார்.
     அவசரத்தில், கமலநாதன் படிப்பு, சாகக்கிடக்கும் மணமகள் பாட்டிக்கும் செல்லாயி B.Tech  - என்று வந்து நிற்கும்.  இதுவாவது பரவாயில்லை. உண்மையில் M.Com.B.Ed படித்தவரை வெறும் பெயராக விட்டுவிட்டு, நான்கு வயதாகும், மணமகனின் அக்காள் மகனுக்கு பட்டம் கொடுத்துப் பாட்டு வாங்கிய அச்சகங்களைத் தெரியும்.
    
    இன்னொன்று, இவர்களே தவறாக எழுதிக்கொடுத்துவிட்டு, அச்சகத்தின் மேல் குறை கூறிவிடுவார்கள். எனக்குத்தெரிந்த அச்சக உரிமையாளர் ஒருவர் படிப்பு ப்ரூஃப் பார்ப்பதை ஒரு வேலையாகச் செய்வார். 
        இவுங்க காசு குறைக்கிறதுக்கு, இதை குறையாகச் சொல்லுவாங்க! பேருக்குப்பின்னால படிப்பு போட ஆரம்பிச்சவனைக் கண்டேன்….செத்தான் என்று குமுறுவார்.

     இந்தப்பழக்கம் எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இது நமது கௌரவ அடையாளமாக ஆகிவிட்டது. பெயருக்குப்பின்னால் படிப்பு போட்டிருப்பதை வைத்து அவரது நம்பகத்தன்மையை ஆராயாமல் ஏற்கும் கலாச்சாரம் இன்னும் குறையவில்லை. அதனால்தான் தனியார் மருத்துவமனை மருத்துவர்களில் MBBS படித்தவர் கொஞ்சமாகக் கொள்ளையடிப்பார். MD படித்தவர் அதிகமாகக் கொள்ளையடிப்பார் என்று கிராமத்தார்களே பேசும் அளவுக்கு வந்திருக்கிறது.

     பெயருக்குப்பின்னால் பட்டம் போட்டுக்கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறதாக நினைக்கிறேன். நான் சென்ற நாடுகளில் இதுவரை அப்படிப்பார்த்ததாக நினைவில்லை.

நம்மிடம் பழகுபவர் என்ன படித்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருப்பது தவறில்லை. அதை அவர் விசிட்டிங் கார்டில் தேடுவது ஆச்சர்யமாக இருக்கும். கேட்கும்போது, தேவை இருக்கும் இடத்தில், அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, இன்ன படித்திருக்கிறேன் என்று சொல்வதிலோ , அச்சிட்டுக்கொடுப்பதிலோ தவறில்லை. ஆனால் பெயருக்குப்பின்னால் என்பது….

இப்போதெல்லாம், படிப்பை பெயருக்குப்பின்னால் போட்டுக்கொள்பவர்களைத்தான், நான் படிக்காதவர்களாகப் பார்க்கிறேன். படிக்கப் படிக்க, அறிவு வளரும். அறிவு வளர வளர பணிவு வளரும். பணிவு வளர்ந்தால், பெயருக்குப்பின்னால் எதுவும் போடத்தோன்றாது.

ஒரு படப்பிடிப்புக்காக பசுமையான வயல் தேவைப்பட்டது. அதன் உரிமையாளரைத்தெரிந்துகொள்ள, வயலில் நின்றிருந்த ஒரு அரையாடைப் பெரியவரை அணுகி, பேச ஆரம்பித்தோம்.

எடத்துக்காரரை ஏன் பாக்கணும்?

ஒரு படப்பிடிப்பு விசயமா?

என்ன படம்?

விளம்பரப்படம்!

”ஓ..அப்புடியா? இப்ப சம்பா போட்டிருக்கு, இன்னும் ஏழெட்டு நாளுல உரம் தெளிப்போம். நீங்க கூட்டமா வந்தீங்கன்னா உங்க மேல தெளிக்கும். ’இன்பெக்‌ஷன்’ ஆகும்!” என்றார்.

தெரிந்த ஆங்கிலத்தை அள்ளிவிடுகிறார் என்று நினைத்து, நாங்களும் ஆங்கிலம் கலந்து பேசினோம்.

அவரும் தெளிவான ஆங்கிலத்தில் பதில் சொன்னார். கொஞ்சம் ஜெர்க்கானாலும்..
”சரி! ஓனர் வீட்டைக்காட்டுங்க” என்றோம்.

”நானே வரேன்” என்று அழைத்துச்சென்றார்.

பண்ணை வீடு சுத்தமாக, தெளிவாக இருந்தது. வாசலில் பெயர் மட்டும் போட்டிருந்தது.

உள்ளே சென்றால், வரவேற்பரையில் , கோட் போட்டுக்கொண்டு எங்களுடன் வந்த பெரியவர் உரையாற்றும் புகைப்படம் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தோம்.

உடனே..
”நீங்கதான் ஓனரா? ஸாரி சார்! உருவம் பாத்து மதிப்பிட்டே பழகிட்டோம். மன்னிச்சுருங்க!  நீங்க நல்லா ஆங்கிலம் பேசுனீங்களே! என்ன படிச்சிருக்கீங்க?”

”சும்மா M.Sc Agri. Ph.D தான் தம்பீ!”

Comments

  1. நல்ல விஷயம் பற்றி தான் எழுதிருக்கீங்க. பேருக்கு பின் பட்டம் போடுவதா கூடாதா என பட்டி மன்றம் வச்சே விவாதம் பண்ணலாம் !! கடைசி மேட்டர் சுவாரஸ்யம்

    ReplyDelete
  2. மிக்க நன்றி இந்த வார யுடான்ஸ் நட்சத்திரமே!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !