உன்னைக் காணாது நானிங்கு..



     



எதை மனதில் வைத்து இந்தப்பாட்டை எழுதினார்களோ தெரியவில்லை. விஸ்வரூபம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாதபோது நம் அனைவருக்கும் ஏற்பட்ட உணர்வு அதுதான்.!!

“ உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே” ! ”

பக்கத்து மாநிலத்துக்குச் சென்று பார்க்கும் அளவுக்கு நமக்கு ஆவலைத்தூண்டியிருந்தது இங்கு இருந்த தடையும், படத்தின் மேலிருந்த நமது எதிர்பார்ப்பும்!

     கமலஹாசன் (எனக்கு கமல் சார்) அவர்களின் படங்களும், பாடல்களும் சமீப வருடங்களில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. தேவர் மகன்  வந்த புதிது! நானும் எனது நண்பர்களும் வேளாங்கண்ணியிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தோம். அதில்தான் முதலில்  ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் கேட்டேன்.  கேட்டவுடன் பச்சக் என்று ஒட்டிக்கொண்டது. அதில் இருந்த எளிமையும், வார்த்தைகளில் இருந்த வாஞ்சையும், இசையராஜாவின் ஆட்சியும் கலந்து எல்லோரையும் விரும்ப வைத்தது. அந்தப்பாடலை பாடிப்பார்த்து, பாடிப்பார்த்து, மெருகேற்றிக்கொள்ள, அதுவே  நண்பர்களிடையே என்னைப் பிரபலமாக்கியது.

பிறகு.. மாசறு பொன்னே வருக! எனக்கு மிகவும் பிடித்த பாடலானது. அதைக் காட்சியாகப் பார்க்கும்போது தேர்த் திருவிழாவிற்கு ஆகப்பொருத்தமான பாடலாக அமைந்திருந்தது. அதுவும் ’நீலியென, சூலியென தமிழ்மறை தொழும்…என்று முடித்து மீண்டும் மாசறு பொன்னே வருக என்று தொடங்கும் இடம் நம்மை ஒரு அருவியில் குளிப்பாட்டி, தலையும் துவட்டி விடும்.

     பிறகு இடையில் பல படங்கள் வந்திருந்தாலும், ‘சண்டியர்’ எனப்பட்ட விருமாண்டியில்.. ‘உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை’ !! அது.. ‘இஞ்சி இடுப்பழகா’ வின் தம்பி போல் இருந்தது. அதிலும் இசையராஜாவின் ஆதிக்கம்தான். அதிக வாத்தியங்கள் இல்லாமல் ரசனையான வார்த்தைகளால் செதுக்கிய பாட்டு அது! அந்தப்படத்திலும் ’காண்டாமணி ஓசையில’ என்ற சுடலைமாடனுக்கான பாடல் ஒருவித கிராமியத்துடன் பக்தியும் இணைந்து ஈர்ப்பைக்கொடுத்திருந்தது.

     தசாவதாரத்தில் , இரண்டு பக்திப் பாடல்கள். ‘கல்லை மட்டும் கண்டால் மற்றும் முகுந்தா , முகுந்தா… இரண்டுமே அருமையாக இருந்தது. அந்தப்பாடல்கள் பொதுவெளியில் உலா வருவதற்கு முன்னரே நான் கேட்டிருக்கிறேன். கல்லை மட்டும் கண்டால் கேட்டவுடனேயே வேறெங்கோ இந்த இசையைக் கேட்ட நினைவு வந்தது. பின்னர் இணையத்தில் தேடியதில், இதே ராகத்தில் ஒரு மலையாளப்பாடல் வந்திருந்தது. கமல் சாருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தேதான் அனுமதித்திருப்பார் என்று பேசிக்கொண்டிருந்தோம்.  ஆனாலும் , ‘ராஜல்ஷ்மி நாயகன் சீனுவாசன் தான்.. சீனுவாசன் சேய் இவன் விஷ்ணுதாசன் தான்.. நாட்டிலுண்டு ஆயிரம் ராஜராஜன் தான் ,..ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்’ என்று கவிஞர் வாலி சூசகமாக கமலையும் சொல்லி, தன்னையும் பெருமைப்படுத்திக்கொண்டதை எண்ணி சிலாகித்துக்கொண்டோம்.

     முகுந்தா..முகுந்தா..எல்லோரையும் மயக்கிய பாடல்.! அதைக் காட்சிப்படுத்திய விதத்திலும் கலக்கியிருந்தார்கள். தசாவதாரம் வெளியான பிறகு  கிருஷ்ண ஜெயந்திகளில், வானொலியில் அந்தப்பாடலும் ஒலிபரப்புகிறோம். ‘உன் அவ தாரம் ஒவ்வொன்றிலும் நான் உன் தாரம் ஆனேன்’ என்று தமிழை உடைத்துப் பயன்படுத்தி மிகவும் வியக்கவைக்கும் பாடலாக அது அமைந்துவிட்டது.

     உன்னைப்போல் ஒருவன் படத்தில் ‘அல்லா ஜானே’! உயிரை உருக்கியது. அதில் கமலின் குரலும் , வார்த்தைகளின் ஆழமும் உண்மையிலேயே கேட்கும் மனதுக்குள் சிலீர்க் கத்தியாக ஊடுருவியது. தன் குரலையே கொஞ்சம் கரகரவென நசுக்கிக்கொண்டு , சுவாசக்குழாய் வழியாகப் பாடியிருப்பார். Prelude எனப்படும் முன்னிசையும், Interlude எனப்படும் இடை இசையிலும் வயலின், புல்லாங்குழல் என்று கொஞ்சம் மேற்கத்திய சாயலுடன் இரசிக்க வைத்திருப்பார்கள். ‘வெல்பவர் இல்லா போர்களும்..’ என்ற வரியை கவனித்தால், தன் குரலில் எத்தனை வித்தைகளை இந்த மனிதர் காட்டுகிறார் என்று தெரியும். இது பக்திப்பாடலாக இல்லாவிட்டாலும், வார்த்தைகளால் வசப்படுத்தியது உண்மை!

     விஸ்வரூபம் பாடல்கள் வெளியானபோது ‘துப்பாக்கி எங்கள் கையில்’ பாடலின் வரிகள் மிகவும் ஆழமாக இருந்தது. பிறகு.. விஸ்வரூபம்..ரூபம் என்ற பாடலில் ‘ஆளவந்தாஆஆஆன்’… என்று பாடப்பட்ட வரிகளின் சாயல் கொஞ்சம் இருந்ததாக உணர்ந்தேன். ஆனால், அந்தப்பாடலின் PRELUDE ல் வரும் பைப் சத்தம் ஏதோ காட்சியை மனதில் வைத்து இசைத்திருக்கிறார்கள் என்று எண்ணினேன். அது சரியாக இருந்தது. ‘உன்னை காணாது நானிங்கு’ கேட்டபோது பிடித்திருந்தது. ஆனால் அதனை மிகவும் ஈடுபாட்டுடன் முதலில் கேட்கவில்லை.


     
ஆனால், ஒரு பயிற்சி வகுப்புக்காக தடா செல்லும்போது, நண்பர் டாக்டர்.பாலா அவர்கள் ஃபோனில் கேட்டோம். அன்று கார் ஓட்டிக்கொண்டே இரசிக்க ஆரம்பித்ததுதான். இதுவரை 200 முறையாவது கேட்டிருப்பேன். அன்றே திரும்பத்திரும்ப அந்தப்பாட்டைக் கேட்கத்தொடங்கி, வரி வரியாக இரசிக்கத் தொடங்கினால்..ஒவ்வொரு வரியிலும் தமிழை வளைத்து, நெளித்து, குழைத்து ஒரு சிற்பமாகவே உருவாக்கியிருக்கிறார். சங்கர் மகாதேவனின் குரல் ஒரு தேன் தோய்த்த மயிலிறகாக ச்சிலீரென்று வருடிச்செல்கிறது. இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல…! எனும் வரிகளில் சிலிர்க்க வைத்து… உனைக் காணாது என்று மீண்டும் மீண்டும் சொல்லுமிடங்களில்.. கலைஞனய்யா நீர் என்று கன்னம் கிள்ளத் தோன்றுகிறது. கமலும் சளைக்காமல்… ‘சரி வர தூங்கா து வாடும் பல மு றை உனக்கா க ஏங் கும்…என்று சந்தத்துடன் வார்த்தை பொருத்தி விளையாடியிருக்கிறார். இந்தப் பாடலின் மேக்கிங்கைப் பார்த்தால், கமல் அதில் எவ்வளவு லயித்து இருக்கிறார் என்பது விளங்குகிறது.

 


     முன்னர் சொன்னதுபோல், விஸ்வரூபத்தில் இந்தப்பாடலை பக்திக்காகவோ, காட்சிக்காகவோ வைத்திருந்தாலும், ஏகப்பட்ட பிரச்னைகளுக்கிடையில், படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களுக்குத் தூண்டியவகையிலும், உண்மையிலேயே ஒரு பிரம்மாண்டமான படத்தைக் கொடுத்தவரையிலும்.. அந்தப் பாடல் சொன்னது உண்மைதான்.! ‘உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே! என்று ஒவ்வொருவரையும் நினைக்க வைத்துவிட்டார்.

படத்தில் ”நான் முஸ்லீம்தான் ..ஆனால் நல்ல கலைஞனும்கூட… பாத்திரத்துல ஐக்கியமாகிட்டேன்” என்று கமலே சொல்வதுபோல், அவருக்கு கடவுள் இல்லைதான்.. ஆனால்.. பக்தி இலக்கியம் மற்றும் இசையில் எப்போதுமே பக்தி உள்ளதால்தான்.. இத்தகைய பாடல்களை அவரால் நமக்குத் தர முடிகிறது.!

இதை..இசைக் கமல் நீ செய்த அரும் சாதனை என்றும் சொல்லலாம்.!



Comments

  1. அற்புதம் சார்... தினமும் பலமுறை கேட்கும் பாடல்... கமல் பட பாடல் வரிகளுக்கு என்றே தனி கவுரவம் இருக்கத் தான் செய்கிறது

    ReplyDelete
  2. rரசனையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. மிக அருமையான பகிர்வு.....பாராட்டுக்கள்.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. தனக்கு பிடிக்கும் வரையில் மெனக்கெட்டு பலவற்றை செய்வதில் கமலுக்கு நிகர் அவரே...

    ReplyDelete
  5. சுரேகாஜி,

    படம் ஏமாத்திடுச்சு போல,பாட்டை மட்டும் சிலாகிச்சுட்டு விட்டுடிங்க :-))

    சொன்னாப்போல பாட்டு நல்ல பாட்டு தான் ஆனால் படம்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க வவ்வால்!

      எல்லாரும் படத்தைப் பத்தி எழுதிட்டாங்க.. மேலும் நான் 2ம் பாகம் பாத்துட்டு எழுதலாம்னு நினைச்சிருக்கேன்.

      பாட்டைச் சொல்லணும் தோணிச்சு!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !