இரண்டு மகிழ்வுரைகளும் ஒரு புத்தகமும்

.



எஸ்கேப் - என்று ஆங்கிலப்பெயர் வைக்கப்பட்டு , என்னால் எழுதப்பட்ட, பிஸினஸ் நாவல் வகையைச் சேர்ந்த புத்தகத்துக்கு தனது அழகான மகிழ்வுரையைத்தந்த்தவர். டாக்டர்.பால சாண்டில்யன் அவர்கள்.. .அவருக்கு அன்புநிறை நன்றியுடன் அந்த மகிழ்வுரை இதோ!



மகிழ்வுரை

எப்போதும் பரபரப்பாக சுறுசுறுப்பாக இருக்கும் நண்பர் சுரேகா அவர்கள் தொலைபேசியில் ஒரு விண்ணப்பம் வைத்தார். அவரது "எஸ்கேப்" என்கிற நூலினைப் படித்து விட்டு மதிப்புரை வழங்க வேண்டும் என்று.

சுரேகா அவர்கள் நூல்களை ஏற்கனவே படித்தவன் என்கிற அடிப்படையில் ஒப்புக்கொண்டேன் ...ஆனால் ஒரு கண்டிஷன் போட்டு ...அதாவது அது என் மதிப்புரை அல்ல மகிழ்வுரை என்று சொல்லி...!

நூலாசிரியர் சுரேகா மட்டும் பரபரப்பானவர் சுறுசுறுப்பானவர் என்றல்ல. அவர் எழுதுகின்ற நூல்களும் விறுவிறுப்பானவை தான்.

சிங்கம் 2, காஞ்சனா 2, சிறுத்தை 2 என்று திரைப்படம் வரலாம் ...புத்தகங்கள் வரக்கூடாதா ..? அந்த இரண்டாம் பாகத்தை வேறு பெயரிலும் வெளியிடலாமே .. என்ன தவறு ...என்ற அடிப்படையில் coaching, mentoring சம்பந்தமான இந்த நூலுக்கு "மீண்டும் தலைவா" எனப் பெயர் சூட்டாமல் மிக அழகாக "எஸ்கேப்என்று வைத்திருப்பது ரியலி சூப்பர்.

"வேட்கையோடு வெறியோடு விருப்பமோடு வேலை பாரு
வீரமான நடையைப் போடு...நீ வெற்றி எனும் துதியைப் பாடு" ...எனும் தாரக மந்திரம் தான் இந்த நூலின் தனிச்சிறப்பு அல்லது USP.

இது தவிர நண்பர் சுரேகா அவர்கள் ஒரு கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா என்பதை நினைவூட்டும் வகையில் இந்த நூலில் இடம் பெற்றுள்ள சில வரிகள் நிச்சயம் சாட்சி.
அப்படிப்பட்ட வரிகள் இதோ :
  • கற்றல் கதவு அகலமாத் திறந்திருக்கும்
  • மெய் மறந்து…இல்லை இல்லை.. கைமறந்து,  கைதட்டினார்கள்.
  • வளர்ச்சிக்கான வாசலை
  • நல்லவேளை.. வேலையை விடவில்லை.
  • பிடிபடாமல் இருந்த சூட்சுமம் பிடிபட்டிருக்கிறது.
  • வெற்றியாளர்களோட அறிவுப் பகிர்தல்
  • சொத்தா மாறுவதன் சூட்சுமம்
  • ஐந்து நிமிடங்களை யாரோ கயிறுகட்டி வைத்ததுபோல்
  • வளர்ச்சிக்கான வேர்களுக்கும் சேர்த்து வெந்நீர் ஊற்றிவிட்டது
இவரது  "தலைவா வா" நூல் படித்தவர்களுக்கு தெரியும் ஒரு விஷயம் : "குருபெயர்ச்சி' எனும் பயிற்சி நடத்திய குரு சந்திரமௌலி மற்றும் அவரது நேரடி சீடன் விக்னேஷ் ...அவர் எப்படி தனது சொந்த மற்றும் பணி வாழ்வில் முன்னேறி இன்று "777" பயிற்சி நடத்தும் குருவாக வந்துள்ளார் - அதாவது இந்த நூலின் கதாநாயகன்..!

"wow"
என்ன ஒரு ஐடியா ...?  இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் வரும் பாடலை ரேடியோவில் "இந்த பாடலுக்கு இசை இளையராஜா" என்று வரும்படியாக ஒரு காட்சி வைத்தது நினைவுக்கு வருகிறது ..(அந்தப் புத்தகத்தை பற்றி ஒரு வசனம் இந்த நூலின் கதாநாயகன் சொல்லுவது போல் எழுதி இருப்பது)

"குருப்பெயர்ச்சி" பெற பல ஆயிரங்கள் பீஸ் ஆக கட்ட வேண்டும். ஆனால் அதனை ஒரு டிபன் காபி செலவுக்கு தந்தது பாராட்டத் தக்கது

 "777" பயிற்சி 7 பேர் மட்டும் பெறவில்லை. இந்த நூலைப் படிக்கின்ற ஒவ்வொரு வாசகரும் தான். ஏழு நாள் ஒரு சிறப்புப் பயிற்சி பெறுவதற்கு நிறைய செலவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதுவே அந்த அரிய அற்புத அறிவார்ந்த விஷயங்களை 112 பக்கங்களில் விறுவிறுப்பாக ஒரு நாவல் போல நூலாசிரியர் வழங்கி இருப்பது - நூலில் சொல்லப்பட்டுள்ள நிர்வாக மேலாண்மை நுணுக்கங்களை இவர் கரைத்துக் குடித்திருக்கிறார்..அதனைப் பின்பற்றி தன வாழ்வில் முன்னேறி வருகிறார் என்பதனை பறைசாற்றுகிறது.

இன்று சந்தையில் கடைகளில் நூலகங்களில் நாம் காண்கின்ற பெரும்பாலான மேலாண்மை நூல்கள் மூன்று வகைப்பட்டவை : சுய சரிதம், மேல் நாட்டு நூல்களின் மொழிபெயர்ப்பு, மேலாண்மை பற்றி கொஞ்சமே தெரிந்து கொண்டு எல்லாம் தெரிந்தது போல அவரைப் பார், இவரைப் பார் என்றெல்லாம் சொல்கின்ற நூல்கள்.

ஆனால், (ஆனால் எனும் வார்த்தைக்கு பிறகு வருகின்ற விஷயம் பெரும்பாலும் நெகடிவ் ஆக இருக்கும் என்பதால் "ஆனால்" என்கிற வார்த்தை வேண்டாமே என்று நூலின் மாஸ்டர் விக்னேஷ் மூலம் எடுத்து சொன்னாலும் - இது வேற..!) ஒரு மேலாண்மை நூலினை எப்படி ஒரு முறை எடுத்தால் (விறுவிறு கிரைம் நூல் போல, சஸ்பென்ஸ் நூல் போல) கீழே வைக்காமல் படிக்க வைக்க முடியும் ?

வியந்து நயந்து பயந்து பார்க்கிறேன் சுரேகா எனும் ஒரு மேலாண்மை நிபுணரை ..!

எல்லா நூல்களுக்குமே அதன் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா ? அதன் காகிதச் செலவு, அச்சுக்கூலி மற்றும் சிறிது லாபம் சேர்த்து தான். அந்த வகையில் அந்த நூலிலிருந்து நமக்கு கிடைக்கும் விஷயம் ரொம்ப "ஆர்டினரி" யாகத்தான் இருக்கும். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. (மீண்டும்) - ஆனால் இந்த நூல் அப்படி அல்ல ..கொடுக்கிற விலைக்கு நூறு அல்லது ஆயிரம் மடங்கு மதிப்புள்ள விஷயங்கள் கிடைக்கிறது என்பதைப் படித்து முடித்தவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

பெறுவதெல்லாம் வழங்கத்தான் என்கிற அடிப்படை விஷயத்தை நமக்கு சொல்லிக் கொடுப்பதே ஒரு சிறு புல் தான். நீரும், ஒளியும், மண்ணின் எருவும் பெற்று வளர்கின்ற புல் - ஆடு மற்றும் மாடு மேய்ந்து திங்கத்தானே

அது போல தான் கற்றுத் தெரிந்ததை, தெளிந்ததை மற்றவருக்கு மாண்புடன், அறிவுடன், பெருந்தன்மையுடன் வழங்கி உள்ளார் இந்த நூல் மூலமாக திரு சுரேகா அவர்கள்.

555 என்றால் ப்ரெஸ்டீஜ். 777 என்றால் ஜாக்பாட்.
இந்த நூல் உங்களுக்கு ஒரு அதியற்புதமான சுகானுபவத்தையும் வெற்றி சூத்திரங்களையும், சூட்சுமங்களையும் அள்ளி வழங்கி உள்ளது.

இதனைப் படித்து முடித்த வாசகர்கள்  எவருமே சுரேகா அவர்களின் சீடர்கள் தான். மறுக்க முடியாது. படித்த விஷயங்கள் மறக்க முடியாது ...மறக்க முடியாதது ...! பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்க வேண்டிய நூல் மட்டும் அல்ல. தம் வாழ்வில் பயன் பெற்று வெற்றி உச்சிக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் காணும் உங்கள் உறவினர், நண்பர் இவர்களுக்கு இந்த நூலினை வாங்கிப் பரிசளியுங்கள். உங்களை தனது வாழ்நாள் உள்ளவரை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்.
கதாநாயகன் விக்னேஷ் - மனிதன், குரு மட்டும் அல்ல உங்களுக்கான  அபரிமித வாழ்வை வழங்குகின்ற உன்னதக்கடவுள் ...!

இந்தப்பயிற்சியினைப் பெற்ற , முக்கியக் கதாபாத்திரம் நரேந்திரனுக்குள் ஒரு விவேகானந்தரை நாம் விரைவில் பார்க்கத்தான் போகிறோம். அவனின் விவேகமான சிந்தனைகளையும் படிக்கப்போகிறோம் அடுத்த நூல் வாயிலாக படிக்கப்போகிறோம் என்று தோன்றுகிறது எனக்கு!

எஸ்கேப் வேலைக்காரர்கள் மட்டும் படிக்க வேண்டிய நூல் இது அல்ல. ஈரமுள்ள,  ஈரம் உள்ள முதலாளிகள் கூடப் படிக்கலாம். அத்தனை வியாபர நுணுக்கங்கள் அடங்கிய ஒரு சிறிய ...சீரிய நூல்...!

தவறாது படியுங்கள். தவறின்றி வாழுங்கள். தடையின்றி வெல்லுங்கள்.
இந்த நூல் மூலம் அட்வான்ஸ் வாழ்த்து சொல்ல நீட்டுகிறேன் என் கரங்களை ..!

பணிவன்புடன்
Dr பாலசாண்டில்யன்



புத்தகத்தைப் படித்துவிட்டு, மகிழ்வுடன் மின்னஞ்சல் அனுப்பினார் நண்பர் பிரசன்ன வெங்கடேசன் . அந்த மடல்...


எஸ்கேப் - ஒரு மனக்கழுவி

அன்பு நண்பருக்கு,


தங்களுடைய தலைவா வா! போல, எஸ்கேப்-ம் ஒரு மகிழ்ச்சியான அனுபவம். திறனுக்கும், உழைப்புக்கும் ஒரு சல்யூட்..

எழுத்து நடை, எழுத்தாழம், கருத்தாழம் அற்புதமாக பளிச்சிடுகிறது. உங்களுடைய நோக்கம் எந்த இடத்திலும் பிறழாமல் பளிச்சிடுகிறது..

உங்கள் மனதுள் இருக்கும் ஒரு சினிமேடிக் கதாசிரியர் இந்த புத்தகம் முழுவதும் பரவி இருக்கிறார்.. படையப்பாவின் நீலாம்பரி கூட உங்கள் கதையில் நல்லவளாகிப்போகிறாள்.

எதார்த்தம் என்பது சற்று வேறு மாதிரி இருந்தாலும், controversial விஷயங்களை தவிர்த்ததும் ஒருவகையில் நல்லதுதான்.

கார்பரேட் ஊழலில் 16 வருடங்கள் இருந்து பழகிய என் பார்வையை ஒரு சராசரி வாசகனோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாதுதான்.

ஆனாலும் என்னிடம் வேலை செய்யும்போது இருந்த தவறான குணங்களும், அவை என் பதவி உயர்வுக்கு தடையாக இருந்ததையும் உணர முடிந்தது.

பெட் கல்சர், ஹீரோ ஒர்ஷிப், சுயநலப் பெருச்சாளிகள், ஒன்டே ஹீரோ, substandard leadership, தரமில்லாத பெர்பார்மென்ஸ், week hr system இப்படி பல நியூசன்ஸ்கள் கார்பரேட் உலகில் இருந்தாலும், அவற்றிற்கு ஒரே பாராவில் பதிலளித்தது சாமர்த்தியம்..

பாராட்டுக்கள்

அன்புடன்,
பிரசன்னா..



இந்த நிலையில்,எனது அடுத்த நூலை வெளியிட்ட மதி நிலையத்தாருக்கும், அன்புநிறை குருநாதர் பா.ராகவன் அவர்களுக்கும்,எப்பொழுதும் எனை ஊக்குவிக்கும் நண்பர்கள் கேபிள் சங்கர், கே.ஆர்.பி. செந்தில் ஆகியோருக்கும் நன்றி சொல்ல விழைகிறேன்

Comments

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !