பொங்கல் - வாழ்த்து




ஒவ்வொரு பொங்கல் விழாவின் போதும், யாராவது பொங்கல் வாழ்த்துச் சொல்லும்போது , அதனை என்னால் வார்த்தையாக மட்டும் எண்ண இயலாது. என்னைப்பொருத்தவரையில் அது ஒரு பொருள்.

அது ஒரு அட்டை , முன்பக்கம் ஒரு அழகான படம் இருக்கும். பின்புறம், ஒரு பாதியில், யார் அனுப்பினார்களோ, அவர்களது வாழ்த்து அவர்களது கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கும். மறுபாதியில், நமது முகவரி எழுதப்பட்டிருக்கும்.

வேறொரு விதமாகவும் அது வரும். ஒரு சிறிய புத்தகம்போல மடிப்புடன் இருக்கும். முன்னட்டையிலும் பின்னட்டையிலும் படங்கள் இருக்கும். சிலவற்றில் முன்னட்டையில் மட்டும் படம் இருக்கும். உள்ளே ஒரு காகிதம் ஒட்டப்பட்டு, அதில், நமக்கான வாழ்த்து, கவிதையாகவோ, வாசகங்களாகவோ அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக்கீழே, அனுப்பியவர்களும் ஓரிரு வார்த்தைகள் எழுதியிருப்பார்கள். அந்த மொத்த வாழ்த்தும் ஒரு உறைக்குள் வைக்கப்பட்டு, முன்புறம் நமது முகவரியுடன் அனுப்பப்படும்.

பொங்கல் வாழ்த்து என்று அதற்குப் பெயர்!

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல், பொங்கல் சமயத்தில், விழாவை விட அதிகம் எதிர்பார்ப்பது அந்த அட்டைகளைத்தான். பொங்கலுக்கு ஒரு வாரம் இருக்கும்போது நம் வீட்டு முகவரிக்கு வாழ்த்துக்கள் வரத் துவங்கும். ஒவ்வொரு உறவும் தனித்தனி விதங்களில் வாழ்த்துக்களை அனுப்புவார்கள். அதில் பொதுவாக ஒரு கடவுள் படம் இருக்கும். அதிலும், பிள்ளையார், முருகன், ஏழுமலையான், மஹாலெட்சுமி, ஆகியோர்தான் அதிகமாக வருவார்கள். அல்லது இரண்டு கரும்பு, மஞ்சள் கொத்து, ஓவியம் தீட்டப்பட்ட பானையில் பொங்கும் பொங்கல், தூரத்தில் சூரியன், வணங்கும் நிலையில் ஒரு குடும்பம் என ஒரு பக்கம் முழுவதும் நிறைந்து இருக்கும். மேலே அழகான வண்ணத்தில் “பொங்கல் வாழ்த்து” என்று அச்சிடப்பட்டிருக்கும். அடடா, அந்த வழு வழு அட்டையைக் கையில் வாங்கும் சுகமே அலாதிதான்.


சிறுவயதில், பொங்கல் சமயத்தில், எங்கள் தெருவில் மதியம் 12 மணியானால், எனக்கெல்லாம் பரபரவென்றிருக்கும். போஸ்ட் மேன் தெருவுக்குள் நுழையும்போதே, க்ணிங் க்ணிங் என்ற அந்த சைக்கிள் மணி ஓசை கேட்கும். அடுத்த விநாடி, எங்கிருந்தாலும் ஓடிப்போய் ரோட்டில் நின்று, 

“எங்க வீட்டுக்கு தபால் வந்திருக்கா?” என்று கேட்டு.

”இரு பாத்துச் சொல்லுறேன்.” என்று அவர் கடிதங்களைப் பார்க்கும் வினாடிகளை இன்றைய சூப்பர் சிங்கர் முடிவு அறிவிக்கும் நேர டென்ஷனோடு ஒப்பிடலாம்.

”இருக்கு!” என்ற ஒற்றைச்சொல், என்னைக் குதூகலிக்க வைத்து, பரபரத்து கைநீட்டிக்காத்திருக்கும் நொடிகளை இப்போதும் உணர முடியும்.

பொங்கல் நெருங்க நெருங்க, போஸ்ட் மேன் நம் கையில் தரும் வாழ்த்துக்களின் எண்ணிக்கையும் கூடும்.

அதையெல்லாம் வாங்கி, வீட்டு வாசலிலிருந்து, வீட்டுக்குள் சென்று சேர்வதற்கு முன், யாரிடமிருந்தெல்லாம் வந்திருக்கிறது என்று பார்த்து, அதனைச் சத்தமிட்டுச் சொல்லி, பாட்டி அல்லது தாத்தா கையில் சேர்ப்பிக்கும்போது ஆஹா.. அது ஒரு தனி மகிழ்ச்சி பாஸ்!

பிறகு, அந்த வாழ்த்துக்கள் பிரிக்கப்படும். அட்டைகளாக இருந்தால், உடனே படித்துப் பார்ப்போம். கவருடன இருந்தால் அதனை மிகவும் கவனமாக ஒரு கத்தி வைத்து தாத்தா கிழிப்பார். ஒவ்வொரு வாழ்த்தும் அனைவரது கைகளுக்கும் சென்று வரும். யார் பெயரெல்லாம் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கப்படும். ஒரு சில காலகட்டங்களில் எங்கள் வீட்டில் 12 பேர் வரை ஒன்றாக இருந்தோம். 
அப்போதெல்லாம், அந்த வாழ்த்தில் நம் பெயரும் போட்டிருக்கிறார்களா என்று பார்ப்பதில் இரகசிய ஆசை அனைவருக்கும் இருக்கும். ஒவ்வொரு வாழ்த்திலும் என் பெயரைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ந்திருக்கிறேன்.

ஒவ்வொரு உறவும், அவரவர்கள் விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்றார்போல், அழகாக அச்சிடப்பட்ட பெரிய வாழ்த்துக்கள் வைக்கப்பட்ட கவர்கள், ஒருபக்கம் மட்டும் படம் உள்ள வாழ்த்து அட்டைகள், 15 பைசா போஸ்ட் கார்டில் , கைகளால் வரையப்பட்டு, அழகான எழுத்துக்களைத் தாங்கிவரும் வாழ்த்துக்கள், என விதவிதமாக பொங்கல் வாழ்த்துக்களை அனுப்புவார்கள். அப்பாவின் உறவினர்கள், அம்மாவின் பந்தங்கள், பாட்டிக்குத் தெரிந்தவர்கள், தாத்தாவின் சொந்தங்கள் என பலரிடமிருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவியும். வங்கியில் சில சொந்தங்கள் இருந்ததால், அந்தக் காலகட்டத்திலேயே வங்கிகளின் பொங்கல் வாழ்த்துக்கள் கூட வீட்டுக்கு வரும். 

ஒவ்வொரு வாழ்த்து வந்ததும், யாரிடமிருந்தெல்லாம் இன்னும் வரவில்லை என்று ஒரு விவாதம் நடக்கும். பொங்கலுக்கு முந்தைய கடைசி நாட்களில், அவர்களெல்லாம் அனுப்பிவிடுவார்கள். சில நேரங்களில் எதிர்பார்க்காத இடத்திலிருந்தெல்லாம் வாழ்த்துக்கள் வந்து உறவுகளை பலப்படுத்தும்.

எல்லா பொங்கல் வாழ்த்துக்களும் ஒரு மேசையின் இழுப்பறையில், வேலை விட்டு வரும் அப்பா உள்ளிட்ட பெரியவர்கள் வந்து பார்க்கும் வகையில் வைக்கப்படும். அவர்கள் பார்த்து முடித்தபின், அவற்றை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்வோம். நான் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் பொங்கல் வாழ்த்துக்களைச் சேகரித்து கறம்பக்குடி வீட்டில், ஒரு மரப்பெட்டியில் போட்டு வைத்திருந்தேன். வேலைக்காக வெளிநாடு சென்று திரும்பும்போது அந்த மரப்பெட்டியை கரையான் தின்றிருந்தது. கண்டதும் ,சில நிமிடங்கள் அழுதுவிட்டேன். அத்தனை வருட உறவுகளின் தொகுப்பின் இழப்பும், அதன் வலியும் இன்றும் உள்ளத்துக்குள் உள்ளது.

பள்ளி நாட்களில் நண்பர்களுக்குள் வாழ்த்துக்கள் அனுப்பிக்கொள்வோம். எனக்கு பல நண்பர்கள் அனுப்பும் வாழ்த்துக்களில், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோர் அதிகம் இடம்பெறுவார்கள். சதாசிவம் என்ற நண்பன் ராமராஜன் படத்தை நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தாக அனுப்பி வைத்ததற்காக , லீவு முடிந்து பள்ளி சென்றபோது அடி நொறுக்கிவிட்டோம். மேலும் சில்க், டிஸ்கோ சாந்தி, அபிலாஷா போன்ற நடிகைகள் படத்தை யாராவது வம்பிழுக்க அனுப்பிவைத்துவிடுவார்கள் வீட்டில் பதில் சொல்வதற்குள் தாவு தீர்ந்துவிடும் .எங்களுடன் படித்த ரேவதி, கனகா வெறியர்கள் தங்கள் பெயருக்கு முன்னால், பெருமையாக ரேவதி பாஸ்கர், கனகா மணிவேல் என்று போட்டே அனுப்புவார்கள். அதனால் பிழைத்தோம். இதில் மணிவேல் ஒரு ஹார்ட்கோர் கனகா வெறியன். அவன் தாவணி மட்டும்தான் கட்டியதில்லை. பாக்கி அனைத்தும் செய்துவிடுவான். அதுவும் தாலாட்டுக் கேட்குதம்மா வந்த புதிதில் அவன் படுத்திய பாடுகள்…அது ஒரு தனி நாவல் எழுதலாம். 

காதலுக்கு உதவுவதில் பொங்கல் வாழ்த்துக்கு பெரும் பங்கு உண்டு. என் வகுப்பில் ஒரு நண்பன், அவன் டாவடிக்கும் பெண்ணுக்கு ஹார்ட்டின் படம் போட்டு, இன்னொரு மாணவியின் பெயர் போட்டு பொஙகல் வாழ்த்து அனுப்பிவிட்டான். அவள் சரியாக இவன் கையெழுத்தை அடையாளம் கண்டுபிடித்து, இவன் முகவரிக்கு, தன் பெயரைக் குறிப்பிட்டு, “நன்றி” கார்டு போட்டுவிட்டாள். நம் ஆளுக்கு வீட்டில் ஆட்டம் காலி! இவனுக்கு தனியாக பொங்கல் வைத்துவிட்டார்கள். இதில் உச்சகட்டம் என்னவென்றால், அவர்கள் இருவரும் இப்போது கணவன் -மனைவி!

மேலும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் பயன்படும். அஞ்சல் துறை மூலம் அனுப்பும் வாழ்த்தில் ஸ்டாம்ப் ஒட்டாமல் அனுப்பிவிட்டால் போதும். செத்தான் எதிரி! தண்டம் கட்டி, கார்டை வாங்கி வைத்துக்கொண்டு, அனுப்பியவனிடம் வம்படியாக வசூல் செய்வார்கள் அல்லது அந்த உறவே அந்துபோய்விடும்.

பள்ளிக்காலத்தில், எல்லோருக்கும் தனியாக வாழ்த்து அனுப்பும் அளவுக்கு எனக்கு வசதி இல்லாததால், ஒரு போஸ்ட் கார்டில் என்னால் முடிந்த அளவுக்கு டிசைன் செய்து, எங்கள் வகுப்பின் பெயர் போட்டு பள்ளிக்கூடத்துக்கே அனுப்பிவிடுவேன். அதனை நானே போய் ஆஃபீஸ் ரூமில் வாங்கி வகுப்பில் கொண்டு வந்து காட்டுவேன். “கஞ்சப்பய” என்று ஓட்டினாலும், ஐடியாவை மெச்சுவார்கள். 

பதினொன்றாவது படிக்கும்போது, எனக்கு ஒரு பேனா நண்பன் இருந்தான். அவன் அனுப்பிய முயல் படத்தில் அதன் கண்களுக்கு சிவப்பு குந்துமணிகள் ஒட்டிய அந்த வாழ்த்தை பொக்கிஷமாக வைத்திருந்தேன். என் ஓவியத்திறமை(!) அனைத்தையும் காட்டி, வைக்கோலை வெட்டி ஒட்டி ஒரு வாழ்த்தும் நன்றியும் அவனுக்கு அனுப்பியிருந்தேன். காலப்போக்கில் சில நெருங்கிய நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் இருந்தது. அதுவும் இப்போது காணாமல் போய்விட்டது.


பொங்கல் வாழ்த்து அனுப்புவதற்கு அடுத்த கட்டம் ஒன்றிருந்தது. அது “நன்றி” கார்டு அனுப்பும் வழக்கம். வந்திருந்த ஒவ்வொரு பொங்கல் வாழ்த்துக்கும் , நன்றி கார்டு அனுப்பி உங்கள் வாழ்த்து வந்து சேர்ந்தது என்று உறுதிப்படுத்தவும். தங்கள் நன்றியைப் பதிவு செய்யவும் இந்தப்பழக்கம் பயன்பட்டது. அத்தகைய கார்டுகள் விதவிதமாக இருக்கும். ஏர் இந்தியா மஹாராஜா நன்றி சொல்லுவார். ஒரு பெண்ணின் கைகள் மட்டும் நன்றி சொல்லும். ஒரு குழந்தை நன்றி சொல்லும். தலவரின் சல்யூட் கூட நன்றி கார்டுக்குப் பயன்படும். பல விதங்களில் நன்றி கார்டுகள் வலம் வரும். நன்றி கார்டு என்பது எதிர் மொய் வைப்பது போன்ற கௌரவமாகப் பார்க்கப்பட்ட காலங்களெல்லாம் உண்டு. 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் , கால ஓட்டத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் வேறு தளத்துக்கு வந்து, முதலில் நம்மை அழைக்கும், தொலைபேசி வாழ்த்தாகி, பின்னர் நம் மின்னஞ்சலுக்கு வரும் மெயில் வாழ்த்தாகி, அதற்கடுத்து, மொத்தமாக குழுவுக்கு அனுப்பும் குறுஞ்செய்தி வாழ்த்தாகி, அதுவும் மாறி இணைப்பிலிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரே வார்த்தையில் வாழ்த்துச்சொல்லும் முகநூல் வாழ்த்தாக வந்திருக்கிறது. நேர சேமிப்பாகத் தெரிந்தாலும், பொங்கல் வாழ்த்து அனுப்பிய காலத்திலிருந்த ஒட்டுதல் குறைந்ததாகவே உணர்கிறேன். தபால் அனுப்பும் நேரத்தை விட முகநூலில் அதிகம் நேரம் செலவழிக்கிறோம் என்பதும் உண்மை! உணர்வுகளால் சூழப்பட்ட என்னைப்போன்ற ஆட்களுக்கு, அழகான படங்களுடனும், எழுதியவரின் கையெழுத்து இது என்று தொட்டுணரும் பொங்கல் வாழ்த்துடன் எதையும் ஒப்பிட இயலவில்லை. எண்ணங்களில் பல்வேறு கேள்விகள்!

அச்சிடப்பட்டு, விற்காமல் மீதமுள்ள பொங்கல் வாழ்த்துக்களெல்லாம் எங்கிருக்கும்?

இதை நம்பித் தொழில் செய்தவர்களெல்லாம் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?

எங்கள் ஊர் தபால்காரர் பொங்கல் நேரத்தில் எத்தனை கடிதங்களை டெலிவரி செய்வார்?

என் போன்று யாராவது பழைய பொங்கல் வாழ்த்துக்களை சேகரித்து வைத்திருப்பார்களா?

இன்றைய பள்ளிச் சிறுவர்களுக்கு அப்படி ஒரு பொருள் இருந்தது தெரியுமா?

இப்போதைய ஒவ்வொரு பொங்கலும் , அந்த ‘பொங்கல் வாழ்த்து, நன்றி கார்டு ‘ இல்லாமல்தான் கழிகிறது. அதனால்தானோ என்னவோ, பெரிய சுவாரஸ்யம் இல்லை. நமக்கென்று வயலில்லை, வரப்பில்லை, விவசாயமில்லை, கரும்புத் தோட்டமில்லை. கடைசியில் பொங்கல் வாழ்த்தும் இல்லாமல் போய்விட்டது.

இதையெல்லாம் எண்ணிப்பார்த்து, நான் மீண்டும் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பத் துவங்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். என் பேச்சை நானே கேட்கிறேனா என்று ?


டிஸ்கி: 

இந்த பதிவுக்காக பொங்கல் வாழ்த்து அட்டையின் படங்களை இணையத்தில் தேடும்போது மிக அரிதாகத்தான் புகைப்படங்கள் கிடைத்தன.

அப்படிப்பட்ட ஒரு படம்தான் இங்கு இருப்பதும்... ஆனால்,  அதை விட அரிதான கட்டுரை, இதே எண்ணத்தைப் பிரதிபலித்தது. பட உதவியும் அந்தத் தளம்தான் செய்தது.!

அதனை இங்கு பதிவதில் பெருமையடைகிறேன்.





Comments

  1. முதலில் நான் (ம்) ஆரம்பிப்போமா என்பது சந்தேகம் தான்... இருந்தாலும் அந்தக் கால இனிய ஞாபகங்கள் வந்து போனது...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வித்தியாசமா யோசிச்சு எழுதி இருக்கீங்க, நம் குழந்தைகளுக்கு இப்போ பொங்கல்'ன்னாலே என்னான்னு தெரிய மாட்டேங்குது...!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்..!! நன்றிங்க!

      Delete
  3. பொங்கல் வாழ்த்து அட்டைகளை சாதி மதம் பார்க்காமல் அனுப்பி & பெற்று மகிழ்ந்து வந்தோம். அந்த சந்தோஷங்கள் இன்று கனவுகள் ஆக மட்டுமே இருக்கிறது பழைய நினைவுகளை கிளறி மனம் கனக்க வைத்துவிட்டீர் நண்பரே....

    ReplyDelete
  4. முதலில் உங்கள் பதிவு சூப்பர் திரு சுந்தர் என்னுடயை சிறு வயதில் என் அண்ணன் மார்களுக்கு வரும் பெரும் பன்மையான அந்தகாலநடிகர்களுடைய படங்களை தாங்கிய வாழ்த்து அட்டைகளை பார்த்து மகிழ்ந்தவன் !! ம்ம்ம் !!! இதெல்லாம் அந்த காலம் !!! அடிக்கடி எழுதுங்கள் , இந்த மாதிரி ஆடிகொரு தடவை அமாசை கொருதடவை வேண்டாமே !!!

    ReplyDelete
  5. In your other blog micromagician, for the picture of vincent van gogh you have the picture of Paris Hilton.
    Please refer the net and correct it. :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !