டெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 2

காட்சி 3 அந்தப்புரம்



( மன்னரின் மனைவி லினக்சி, மகள் விண்டோ மகாலெட்சுமி, தோழி ஐபாட் அம்புஜம்)

மகாராணி
: மகளே விண்டோ மகாலெட்சுமி ! எப்போது பார்த்தாலும் கணிப்பொறி முன்னாலேயே அமர்ந்திருக்கிறாயே..! அப்படி என்னதான் பார்த்துக்கொண்டிருக்கிறாய்!

மகள் விண்டோ மகாலெட்சுமி : அம்மா ! நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று இணையத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

மகாராணி அப்படி எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்!?

இளவரசி : அப்போது பல விஷயங்கள் மிகவும் அதிகமாகக்கிடைத்திருக்கின்றன அன்னையே!

மகாராணி
என்னனென்ன அதிகமாகக்கிடைத்திருக்கின்றன?

இளவரசி இப்போது நமது அருங்காட்சியகத்தில் உள்ளனவே மரங்கள் என்பவை! அவை அதிகமாக இருந்திருக்கின்றன. அடுத்து நீர் ! நாம் கூட சென்ற ஆண்டு அண்டை நாட்டிடம் போரிட்டு வென்றோமே!

மகாராணி ஆம்..ஆம். ஆனால் அதில் நாம் போரிட்டது ஒரு அண்டா குடிநீருக்காக..அவர்கள் பதுக்கிவைத்திருந்து ஏய்த்துவிட்டார்கள். போரின் முடிவில் ஒரு குடம்தான் கிடைத்தது.அதிலும் அரைக்குடம் தண்ணீர்தான் இருந்தது.

இளவரசி ஆம்..அம்மா..அந்த நீர் அதிகமாக இருந்திருக்கிறது. மேலும் விளைநிலங்கள் எனப்படும் நிலப்பரப்பு அதிகமாக இருக்கிறது. அவை அனைத்தும் பசுமையாக இருந்திருக்கிறது.

மகாராணி : ஆமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் நம் மூதாதையர் செய்த பெருந்தவறுகளினால், உலகமே பாலையாகிவிட்டதே! என்ன ஒன்று....நாம் டெக்னாலஜியை வைத்து பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறோம்.

இளவரசி : அம்மா! ஆம்...பிலிம் என்றதும் நினைவுக்கு வருகிறது.அந்தக்காலத்தில் மக்கள் தொலைக்காட்சி என்ற பெட்டியிலேயே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்கள்.

தோழி அது எப்படி ஒரு பெட்டியில் வாழ்க்கையை ஓட்டியிருக்கமுடியும்..?

இளவரசி வாடீ ஐபாட் அம்புஜம்! எப்படி இருக்கிறாய்? எப்படிப்போய்க்கொண்டிருக்கிறது உனது ரோபா மேனேஜ்மெண்ட் வாழ்க்கை?

தோழி நாளொரு டேட்டா லாஸும், பொழுதொரு ப்ரோக்ராம் எரருமாக அமோகமாகப்போய்க்கொண்டிருக்கிறது இளவரசி! ஆமாம்...ஏதோ பெட்டியைப்பற்றி சொன்னீர்களே! அது என்ன?

இளவரசி நமது மூதாதையர் வாழ்வின் பெரும்பகுதியை தொலைக்காட்சி எனும் பெட்டியைப் பார்ப்பதிலேயே கழித்திருக்கிறார்கள். அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தோழி ஓ..அப்படியா? இப்போதுதான் அது உருமாறி...டிஜிட்டல் டிவியாகி விபாட் என கையடக்கமாக வந்துவிட்டதே! என் அன்னையார் கூட பல நூறாண்டுகளாக அதில் வந்துகொண்டிருக்கும் ஒரு மெகா சீரியலைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இளவரசி
ஆமாம். ஐபாட்.! நம் மூதாதையர் விட்டுச்சென்ற ஒரே விஷயம் மெகா சீரியல்தான்! என் அன்னையும் ஒரு மெகாசீரியல் பிரியைதான். இரவு 9 மணிக்கு அவர் யாரிடமும் பேச மாட்டார். அவருண்டு அவர் வி பாட் உண்டென்று இருந்துவிடுவார்.

தோழி அதெப்படி மகாராணி! நீங்கள் பிறப்பதற்கு முன்னால் வந்த ஒரு மெகா சீரியலின் கதையை தெரிந்துகொள்கிறீர்கள் ?

மகாராணி என்ன இப்படி கேட்டுவிட்டாய்? என் அன்னையார் நான் வளரும்போது அமுதுடன் சேர்த்து மெகா சீரியலின் கதையையும் சேர்த்து ஊட்டிவிட்டார். நான் உன் தோழிக்கு சிறுவயது முதலே கதை சொல்ல முற்படும்போதெல்லாம் ஓடிவிடுகிறாள்.

இளவரசி
அதில்லை ஐபாட் அம்புஜம்! இந்த வகை சீரியல்களை எந்த நூற்றாண்டில் பார்த்தாலும் கதை சுலபமாகப்புரிந்துவிடும். இதை ஏதோ இதிகாச புராணங்களைக்கற்றுக்கொள்வதுபோல் பார்க்கவைப்பது என்னால் சகிக்கமுடியவில்லை.

மகாராணி
சரி சரி என்னை கிண்டல் செய்யாதீர்கள்...இன்னும் சில நூற்றாண்டுகளில் அந்த மெகா சீரியல் முடிந்துவிடுமே என்று கவலையாக நான் இருக்கிறேன். சரி! விண்டோ மகாலெஷ்மி! உனக்கு உன் தோழி கிடைத்துவிட்டாள்! நான் கிளம்பட்டுமா? நமது அரண்மனைப் பைலட்டை வரச்சொல்லியிருந்தேன். விமானத்தில் பக்கத்து நாடு வரை சென்று சிகையலங்காரம் செய்துகொள்ளவேண்டும். சீரியல் மிச்சத்தை விமானத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொள்கிறேன்.

தோழி நம் நாட்டில் இப்போது அடுத்ததாக ஒரு செயற்கைக்கோள் விடப்போகிறார்கள் தெரியுமா?

இளவரசி எதற்கு?

தோழி நாட்டில் வேலைக்கார ரோபாட்டுகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. மேலும் அவை மனிதர்களிடமிருந்து வேலை ஏய்ப்பதையும் கற்றுக்கொண்டுவிட்டன. சென்ற வாரம்கூட இரண்டு ரோபாட்டுகள் வேலயிலிருந்து காணாமல் போய்விட்டன. இரண்டு மணிநேரம் கழித்து வந்திருக்கின்றன. எங்கே சென்றீர்கள் என்று கேட்டாலும் திமிராக பதில் சொல்கின்றனவாம்.

இளவரசி மனிதர்கள் போலவே இயந்திர மனிதர்களை உருவாக்குகிறேன் என்று உங்கள் பொறியாளர்கள் கூறிக்கொண்டிருந்தது உண்மையாகிவிட்டது. ஹாஹா....(சிரிப்பு) ஆக..அவற்றைக்கண்காணிக்க செயற்கைக்கோள் அனுப்புகிறார்கள் என்று சொல்!

தோழி அதெப்படி..பளிச்சென்று சொல்லிவிட்டீர்கள்!

இளவரசி இதென்ன பிரமாதம்..உன்னிடம் பேசிக்கொண்டே என் லேப்டாப்பில் , இன்றைய செய்திகளில் தேடினேன். கிடைத்துவிட்டது.

தோழி டெக்னாலஜி குலோத்துங்கனின் மகளா ? சும்மாவா?

இளவரசி
கேலி செய்யாதே! என் அன்னைக்கு மெகா சீரியல்போல், எனக்கு இணையம்..! இது மட்டும் இருந்தால் எனக்கு உணவே தேவையில்லை!

தோழி பார்த்து...உங்களை மணக்கப்போகும் இளவரசர் இணையம் வழி வந்து இதயத்தில் அமர்ந்துவிடப்போகிறார்.!

இளவரசி
: ச்சீ போடி..எப்போதும் ஏதாவது கிண்டல் செய்துகொண்டு...இதோபார் எவ்வளவு விதமான வரலாற்றுத்தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன என் மடிக்கணிணியில்...

தோழி எங்கே காட்டுங்கள்

இளவரசி
இதோ பார் ! எவ்வளவு அபாரமான தகவலக்ள்....அய்யஹோ...என்னது இது ? எல்லாம் அப்படியே நிற்கிறதே. எதை க்ளிக் செய்தாலும் ஒன்றும் நிகழவில்லையே! லேப்டாப் பழுதாகிவிட்டதே... என்ன செய்வேன்..!?


காட்சி 4— அரண்மனை வளாகம்

( மன்னர் , மந்திரி, இளவரசி ,அரண்மனை சமையல்காரர் பாஸ்ட் புட் பரமன்)

மன்னர் : மந்திரி ! என்னய்யா இது! பல நாடுகளில் கேட்டாயிற்று ! அரண்மனை உபயோகத்திற்கென்று கொஞ்சம் பொன்னி அரிசி கேட்டேன். எகத்தாளமாகப்பேசுகிறார்கள்.

மந்திரி ஏன் மன்னா ? சென்ற ஆண்டு இறக்குமதி செய்த அரிசி என்னாயிற்று?

மன்னர் நாந்தான் கொஞ்சம் கூட சிக்கனமில்லாமல்...எச்சில் கையாலேயே பலமுறை காக்காய் ஓட்டிவிட்டேன். அதிலேயே பல கிலோ அரிசி போய்விட்டது.

மந்திரி சரி! கவலைப்படாதீர்கள் மன்னா ! செவ்வாய்க்கிரகத்திலிருந்தாவது அரிசியை வரவழைத்துவிடுவோம். ஆமாம்...கேட்பதற்காக கோபித்துக்கொள்ளக்கூடாது! அரசவையில் சொன்னீர்களே ! அதுபோல் நீங்களும் ஏன் பீஸா ,பர்கர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.?

மன்னர் அதை ஏன் கேட்கிறீர்? நானும் அவற்றை அள்ளி அடித்துக்கொண்டுதான் இருந்தேன். அதனால் ஏதோ ஒபிசிட்டியாம் அது வந்துவிட்டதாம்.அரண்மனை பிரதான மருத்துவர்தான் பொன்னி அரிசிச்சோறு சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.!

மந்திரி ஓ..அப்படியா?

மன்னர் என்ன நொப்படியா? நான் என்ன கதையா சொல்லிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வந்த நோயைப்பற்றி கவலையோடு கூறிக்கொண்டிருக்கிறேன். கதை கேட்பதுபோல் மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டிருக்கிறீர் !

மந்திரி இல்லை மன்னா! பொன்னி அரிசியை எப்படி ,,,எந்த நாட்டிலிருந்து தருவிப்பது என்பது பற்றி யோசித்துக்கொண்டிடிருக்கிறேன்.

மன்னர் நீர் யோசிக்கவே வாய்ப்பில்லையே! உமக்குத்தான் மூளையே கிடையாதே!

மந்திரி என்ன மன்னா! சிறிது நேரத்துக்குமுன் தான் ரோபோ என்றெல்லாம் கூறினீர்கள்!

மன்னர் அது ஒரு ஃப்ளோவில் கூறிவிட்டேன்...!

மந்திரி
ஆ !

மன்னர் அது கிடக்கட்டும்..! அரிசியின் ஆதாரமான நெல்லாவது அண்டை நாடுகளில் கிடைக்கிறதா என்று பாருமய்யா!

மந்திரி ஒரே ஒரு நாட்டில் மட்டும் கிடைக்கிறது மன்னா..! அது அக்ரிபுரி என்ற நாடு. ! என்ன ஒரு கொடுமையென்றால் அவர்கள் நெல்லாக யாருக்கும் தரமாட்டார்கள். ஏனெனில் நெல்லாகக்கொடுத்தால் நாம் அதை பயிரிட்டு விடுவோம் என்று அரிசியாக்கிதான் அண்டை நாடுகளுக்கு சப்ளை செய்கிறார்கள்.

மன்னர் அப்போது அவர்களிடம் அரிசியை வாங்கிவிட வேண்டியதுதானே!

மந்திரி அதில்தான் மன்னா சிக்கலே இருக்கிறது! அந்த நாட்டு மன்னன் விவசாய வேந்தனுக்கு தங்கள் மீது அடங்காத கோபம்..! அதனால் எந்த உணவுப்பொருளும் நம் நாட்டுக்கு மட்டும் தரக்கூடாது என்று வியாபாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறான்.

மன்னர் ஏனாம்...!?

மந்திரி அதையும் கேட்டேன் மன்னாஅந்த மன்னனைப்போல் நாம் விவசாயத்தில் நாட்டம் கொள்ளாமல் டெக்னாலஜியை மட்டுமே வளர்த்து நாட்டின் அடிப்படைத்தேவைகளில் கோட்டை விட்டுவிட்டோமாம்!

மன்னர் : நான் என்னத்த்ய்யா கண்டேன்..! தொழில்நுட்ப உற்பத்தியைப்பெருக்கினால் நாட்டின் பொருளாதாரம் வளரும்..!
அதன் மூலம் மக்கள் எந்தப்பொருளை வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைத்தேன். அது ஒரு குற்றமா?

மந்திரி நான் அப்படிக்கூறவில்லை மன்னா! ஆனால் நாம் பாட்டுக்கும் கணிப்பொறி, செல்போன், டிஜிட்டல் உபகரணங்கள் மற்றும் இன்னபிற பொருட்கள் செய்யும் தொழி்ற்சாலைகளை விளைநிலங்களில் கட்டித்தள்ளினோம். அப்போதே நாட்டு விவசாய வல்லுநர்களும், அறிஞர்களும் தடுத்தார்கள். விமர்சித்தார்கள். ஆனால் நீங்கள்தான் அவர்கள் எல்லோருக்கும் விதவிதமாக தண்டனை கொடுத்தீர்கள்.

மன்னர் சரி..சரி..அவையெல்லாம் நடந்து முடிந்த கதை! பேசிக்கொண்டே உணவு உண்ணும் பகுதிக்கு வந்துவிட்டோம். நான் சாப்பிடப்போகிறேன். நீர்?

மந்திரி
நீங்கள் சொன்னால் மறுக்கவா முடியும் ? சாப்பிடுகிறேன் மன்னா!

மன்னர்
ம்.க்கும்.. அரண்மனை உணவில் அவதி அவதியாய்க் கைவைத்துவிட்டு அரசர் கம்ப்பெல் செய்தார் என்று ஊருக்குள் சென்று சொல்லத்தான் போகிறீர். வந்து தொலையும்..சாப்பிடலாம்.

மந்திரி
ஹி..ஹி...நீங்கள்தான் மக்கள் மனமறிந்த மன்னர் !

மன்னர் சரி ..சரி..இதை அரசவையில் சொல்லும்..இங்கே தனியறையில் சொல்லி என்ன பிரயோஜனம்.! .யாரங்கே ? எவ்வளவு டெக்னாலஜி இருந்தாலும்...இந்த யாரங்கே வை மட்டும் விடமுடியவில்லையே!!

தலைமை சமையல்காரர் ஃபாஸ்ட் ஃபுட் பரமன் :
வந்தேன் மன்னா! உள்ளே இன்று வந்த உணவுப்பெட்டிகளை ப்ரிட்ஜில் வைத்த்துக்கொண்டிருந்தேன்.

மன்னர் :ஓ..புதிய தலைமை சமையல்காரர் ஃபாஸ்ட் ஃபுட் பரமனா.. அது சரி ! இப்போது, எனக்கு என்ன உணவு இருக்கிறது?

பரமன் : எல்லாவிதமான பாஸ்ட்புட் ஐட்டங்களும் உள்ளது மன்னா!

மன்னர்
: அதைவிட்டால் வேறு எதுவுமே இல்லையா?

பரமன் இல்லை மன்னா! அரண்மனை அக்கவுண்ட்ஸ் ஆபீஸரிடம் சில காய்கறிகள் வாங்கச்சொல்லி பரிந்துரைத்திருந்தேன். ஆனால் அவற்றை வாங்குவது மிகவும் கடினம் என்று கூறிவிட்டார் மன்னா!

மன்னர் அப்படியா...! மந்திரியாரே ! அது என்னவென்று விசாரியும்!

மந்திரி
ஆம் மன்னா..அவர் என்னிடம் இது பற்றி டிஸ்கஸ் செய்தார். காய்கறிகளும் அக்ரிபுரியிலிருந்துதான் இறக்குமதி செய்தாக வேண்டும். அது இயலாத காரியம் என்று பேசிக்கொண்டிருந்தோம்.

மன்னர்
என்னய்யா இது ! பெரிய ரோதனையாகப்போய்விட்டது! சரி உமக்கு என்னன்ன சமைக்கத்தெரியும்?

பரமன்
ஹி..ஹி...எல்லா பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் நன்றாக சுடவைப்பேன். எல்லா விதமான பாஸ்ட் புட்களூம் உடனுக்குடன் வதக்கித்தருவேன். இறக்குமதியான உணவுப்பெட்டிகளை பதமாக ப்ரிட்ஜில் வைப்பேன். பல்வேறு நாடுகளில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஓவன் குக்கிங் மாஸ்டர் என்று பெயர் வாங்கியிருக்கிறேன் மன்னா!

மன்னர் மொத்தத்தில் ஒன்றும் சொந்தமாக சமைக்கத்தெரியாது! இதற்கு இவ்வளவு பீற்றல்!

பரமன் அதில்லை மன்னா ! எங்கள் பாட்டனாரெல்லாம் அரிசி , காய்கறிகள் வைத்து நிறைய உணவுவகைகளை சமைத்திருக்கிறார்கள்.

மந்திரி பழம்பெருமை இப்போது எதற்கு? இப்போது மன்னர் உண்ண என்ன இருக்கிறது ? அதைக்கூறுங்கள் முதலில்..

பரமன்
வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட குளிர்பானங்கள், ரொட்டி, நூடுல்ஸ், ஆகியவை உள்ளன அய்யா!

மன்னர்
: சரி ..இப்போதைக்கு எங்கள் இருவருக்கும் நூடுல்ஸ் கொண்டுவாருங்கள்.பரமன் சரி மன்னா!

மன்னர்
அமைச்சரே..! சாப்பாடு கிடைப்பது பற்றி நினைத்தாலே எனக்கு டென்ஷனாகிறது ! பேசாமல் அக்ரிபுரி மீது படையெடுத்தால் என்ன?

மந்திரி
அதற்கு வாய்ப்பே இல்லை மன்னா! அந்த நாட்டு மன்னனுக்கு படைபலமும், மக்கள் செல்வாக்கும் அதிகம்.

மன்னர்
நம்மிடம்தான் அதைவிட பலம் வாய்ந்த ரோபோ படடை உள்ளதே அய்யா!


மந்திரி அதில் ஒரு சிக்கலும் உள்ளது மன்னா! நமது ரோபோ படையின் பேட்டரியைப் பிடுங்கும் சூட்சுமத்தை அந்த வீரர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஈஸியாக அவற்றை சாய்த்து விடுவார்கள்.

மன்னர் ஆக, ஒன்றும் செய்யமுடியாது என்பதை, சுற்றிவளைத்துக்கூறுகிறீர்.

மந்திரி ஹி..ஹி..

மன்னர் இதோ நூடுல்ஸ் வந்துவிட்டது. நன்றாக சாப்பிடும்..! நானே ஏதாவது யோசித்து முடிவெடுக்கிறேன். என்ன ஒரு தவறு இழைத்துவிட்டேன். விவசாய வல்லுனர்கள் பேச்சைக்கேட்டு கொஞ்சம் நிலத்தையாவது விட்டுவைத்திருக்கலாம். சரி நடந்ததைப்பற்றி பேசி பலனில்லை.! பரமா!
பரமன் மன்னா!


மன்னர் நூடுல்ஸுக்கு தொட்டுக்கொள்ள சாஸ் இருந்தால் கொண்டுவாரும்.!

பரமன் ஓக்கே மன்னா!

(இளவரசி ஓடி வருகிறாள்)


இளவரசி : தந்தையே ! தந்தையே!

மன்னர் : வாம்மா விண்டோ மகாலெஷ்மி..! என்னம்மா?

இளவரசி : எனது லேப்டாப் திடீரென பழுதாகிவிட்டது. எனக்கு அதிமுக்கிய மெயில் அனுப்பவேண்டிய வேலை இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை!

மன்னர் : உடனே அதை சப்ளை செய்த நிறுவனத்தின் கஸ்டமர் கேரில் கேட்கவேண்டியதுதானே!

இளவரசி : கேட்டேனே! நமக்கு வாரண்ட்டி முடிந்துவிட்டதாம். இனிமேல் சரிசெய்வதானால் பணம் கேட்கிறார்கள். அதுவும் நாளைதான் அவர்களது சர்வீஸ் எஞ்சினியரை அனுப்புவார்களாம்.

மன்னர் : அரண்மனையிலிருந்து இந்த டெக்னாலஜி குலோத்துங்கனின் மகள் பேசுகிறேன் என்று சொன்னாலுமா அப்படிச் சொன்னார்கள்!?

இளவரசி : ஆம்..! நான் அப்படிச்சொன்னபின்னால்தான் மிகவும் கொடூரமாகப்பேசினார்கள். ஆனால் இளவரசி என்பதால்,நாளை அனுப்புகிறோம். வேறொருவர் என்றால் ஒரு மாதம் கழித்துதான் சரி செய்வோம் என்றார்கள்.

மன்னர் : யோவ் மந்திரி ! என்னய்யா இது ? எவனுமே நம்மை மதிக்கமாட்டேன் என்கிறான்.

மந்திரி
: மன்னா! அது அயல்நாட்டுக்காரன் நிறுவனம்! நாம் அவனிடம் ஒரு பெரிய தொகையை சேவை வரியாக வசூலித்துவிட்டோம். ஆகவே அவன் கொடுக்கும் கணிப்பொறிகளுக்கு அவன் தான் முதலாளி.. அவன் கூறியபடிதான் கஸ்டமர்கள் கேட்கவேண்டும். நாம் ஒன்றும் செய்யமுடியாது மன்னா! அதான் நாளை வந்துவிடுவதாகக்கூறியிருக்கிறார்களே!

இளவரசி அப்படியெனில்..இதற்கு வேறு வழியே இல்லையா?

மன்னர் :அமைச்சரே! உம்மைத்தான் ...என்ன விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர் !

மந்திரி : ஒரு யோசனை மன்னா!

மன்னர் : என்ன அது? கூறித்தொலையும்!

மந்திரி : இன்று காலை நாம் ஒரு கணிப்பொறியாளருக்கு தண்டனை கொடுத்தோமே!

மன்னர் என்னது? நாமா?


மந்திரி : ஸாரி மன்னா! நீங்கள் தண்டனை கொடுத்தீர்களே!

மன்னர் : ம்...ஆமாம..ஆமாம்.. அந்த வருமானவரி பார்ட்டி..! பெயர் ஏதோ...

மந்திரி :அவன் பெயர் புவன் மன்னா! அவனை அழைத்து இளவரசியின் லேப்டாப்பை ரிப்பேர் செய்யச்சொன்னால் என்ன?

மன்னர் : ஆஹா..அபாரமான யோசனை! மொபைல் மணிவாசகத்தை நான் மந்திரியாக்கியது வீண்போகவில்லை! சரி! அவனையே அழைத்து இளவரசியின் லேப்டாப்பை சரி செய்யச்சொல்லுங்கள்!

இளவ்ரசி மிக்க நன்றி தந்தையே!


(வேற வழியே இல்லை..! கண்டிப்பா தொடர்ந்தே தீரும்..!)

Comments

  1. இம்புட்டு பெரிய பதிவா?

    ReplyDelete
  2. அந்த அரைகுடம் தண்ணிய எனக்கு கொடுக்க சொல்லுங்க...மூச்சு வாங்குது:)))

    ReplyDelete
  3. வாங்க நிஜமா நல்லவரே!

    இதுதான் என் பதிவுகளிலேயே மிகப்பெரிய பதிவு!

    வேற வழி தெரியலை!

    வேணும்னா சுருக்கிடவா?

    ReplyDelete
  4. பொன்னி அரிசி நிலைமை ரொம்ப மோசமா தான் இருக்கு:(

    ReplyDelete
  5. அருமை, கொஞ்சம் கொஞ்சமாக போடுங்க, டவுசர் கிழியுது:)

    ReplyDelete
  6. / சுரேகா.. said...

    வாங்க நிஜமா நல்லவரே!

    இதுதான் என் பதிவுகளிலேயே மிகப்பெரிய பதிவு!

    வேற வழி தெரியலை!

    வேணும்னா சுருக்கிடவா?/

    வேணாம்...வேணாம்...சூப்பரா இருக்கு!

    ReplyDelete
  7. will be there be love between bhuvan and princess

    ReplyDelete
  8. அன்பின் சுரேகா

    நடப்பு நிலைமையை வைத்து நாடகம் - நீஈஈஈஈண்ட நாடகம் - நன்றாகவே இருக்கு

    புவன் சந்திக்கிறானா - கதா நாயகனும் நாயகியுமா

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. /
    மகாராணி என்ன இப்படி கேட்டுவிட்டாய்? என் அன்னையார் நான் வளரும்போது அமுதுடன் சேர்த்து மெகா சீரியலின் கதையையும் சேர்த்து ஊட்டிவிட்டார்.
    /

    என்ன ஒரு கொலவெறி :)))))))))))))))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !