இலுப்பூர்

புதுக்கோட்டையிலிருந்து 29 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஊர்! இதுவும் நான் பள்ளிப்பருவத்தில் பார்த்த ஊர்! அப்போது தேர்வுநிலை பேரூராட்சி. இப்போது தாலுக்கா! (என்னமோ நம்ப வந்துட்டுப்போனாலே தாலுக்காவாக்கிடுறாங்க! :-) )

புதுக்கோட்டை, அன்னவாசல் வழியே ஊருக்குள் நுழையும்போது அரசு மருத்துவமனை, வலதுபுறம் அரசு மேல்நிலைப்பள்ளி, பின்னர் கடைவீதி. அதைத்தாண்டி இரண்டு ' ட ' வளைவுகளுக்குப்பிறகு நேரே சென்றால் விராலிமலை செல்லும் சாலையில் சிறிய பேருந்து நிலையம். அதன் பின்புறம் மிக நீளமான உடமான் குளம். பேருந்துநிலையம் தாண்டி கொஞ்சதூரம் சென்றால் ஊரின் கடைசி ஏரியாவான கோட்டைத்தெரு. அதை அடுத்து பிடாரி அம்மன் கோவில். அப்படியே சாலை மேடேறி விராலிமலை நோக்கிச் சென்றுவிடும்.

இலுப்பூரில் பள்ளிப்படிப்பு 3ம் வகுப்பிலிருந்து 6ம் வகுப்பு வரை... அந்த நான்கு ஆண்டுகளும் மிகச்சிறந்த படிமங்களை ஞாபக அடுக்குகளில் விட்டுச்சென்றிருக்கின்றன. ஏனெனில் எனக்கு நூலகம் அறிமுகமானது அப்போதுதான்.!

ஊரின் மிக முக்கியத்தொழில் செயற்கை வைரம் பட்டை தீட்டுவது...! 80களில் இலுப்பூர் இந்தத்தொழிலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. என் பல நண்பர்கள் பள்ளி முடிந்ததும் கல் உருட்டச் செல்கிறேன் என்பார்கள். பகலில் வீதிகளில் சென்றால் டக்சடக், டக்சடக் என்ற உருட்டு எந்திரத்தின் சத்தமும் , இடையிடையே கீச்ச்ச்ச் என்ற கல்லை சாணையில் வைக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். அவர்களது பொழுது போக்கே ரேடியோவும், டேப் ரிக்கார்டரில் ஒலிச்சித்திரமும் கேட்பதுதான். 'விதி' திரைப்படத்தின் அனைத்து வசனங்களும் இன்று கேட்டாலும் எனக்கு அத்துப்படி. அவ்வளவு முறை அதை விடுமுறை நாட்களில் கல்லுப்பட்டறைகளில் அமர்ந்து கேட்டிருக்கிறேன்.

நாங்கள் இருந்தது ஊர்க்கடைசியிலுள்ள கோட்டைத்தெருவில்..எந்த ஊர் செல்வதானாலும் வாசலில் ஓடிவந்து பஸ் ஏறலாம். எதிர் சாரியில் ஒரு மளிகைக்கடையும், டீக்கடையும் மட்டும்தான். எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு அற்புதமான பள்ளி உண்டு. (ஏன்னா அது நான் படிச்ச பள்ளி ! ஹி..ஹி) ஆர்.சி. நடுநிலைப்பள்ளி. அந்தப்பள்ளியின் மதர் சுப்பீரியரிலிருந்து எல்லா சிஸ்டரும் அன்பொழுகப் பாடம் நடத்துவார்கள். கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி! படிப்பிலும் நற்பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தது. நல்லொழுக்கப்பாடம் (Moral Studies) என்ற பாடமும் அதனடிப்படையில் மதிப்பெண்களும் வழங்கும் வழக்கம் அந்தப்பள்ளியில் இருந்தது. இப்பெல்லாம் அது இருக்கா? கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க பாஸு!

அங்குதான் நான் மேடைப்பேச்சு பழகினேன். சந்தியாகு டீச்சர், ரத்னாபாய் டீச்சர், கஸ்தூரி டீச்சர், மங்களா டீச்சர், டெய்ஸி சிஸ்டர், மரியம் சிஸ்டர் என்று பல அன்பான ஆசிரியைகள், எங்களுக்கு அழகாக மேக்கப் போட்டு, அந்தக்காலகட்டத்திலேயே மிகவும் சரியாக உடைகளைத்தேர்வு செய்து பல நாடகங்களை கர்ம சிரத்தையாக எங்களை வைத்து அரங்கேற்றுவார்கள். ஓதேல்லோ, ஷைலாக் என ஆங்கிலத்தில் பேசிய நாடகங்களும், சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், கோலியாத், என தமிழில் பேசிய நாடகங்களும், பாடப்புத்தகத்தை மீறி கற்றுக்கொள்ள வெளியில் நிறைய இருக்கிறது என்ற படிப்பினையை எனக்கு வழங்கின. இந்த டீச்சர்களில் ஒருவருக்கு திருமணம் ஆன அன்று உலகமே இடிந்து விழுந்ததுபோல் உணர்ந்தேன். கொஞ்சம் வெய்ட் பண்ணியிருந்தா நாம் கல்யாணம் பண்ணியிருக்கலாமே என்று மறுகினேன்.

என் அம்மாவுக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு ஊருக்குப்போனவுடன் அவர்கள் செய்யும் முதல் செயல் அந்த ஊரின் நூலகத்தில் உறுப்பினராவதுதான். அப்படித்தான் அங்கும் ஆனார்கள். அவர்கள் எடுக்கச்சொல்லும் புத்தகத்தை கொண்டுவந்து தரும் பணியில் நான்!

அப்படி எடுக்கச்செல்லும்போது சின்னச்சின்ன சிறுவர் பத்திரிகைக்களைப்படிக்கும் பழக்கம், பின்னர் அம்மா படிக்கும் ஆனந்தவிகடன், கல்கண்டு, குங்குமம், தாய் என வளர்ந்து லஷ்மி, சிவசங்கரி,அனுராதா ரமணன், தி.ஜானகிராமன், ஜாவர், சாவி, கல்கி, சுஜாதா, பாலகுமாரன்,என படர்ந்தது. பின்னர் படமில்லாத பத்திரிக்கைகளும் கவர ஆரம்பித்தன.

மஞ்சரி, குண்டூசி, அமுதசுரபி போன்றவற்றில் வெளிவரும் புரிந்தும் புரியாமலிருந்த கதைகளை வலியப்படித்த வயது அது! பின்னர் எனக்கும் சேர்த்து புத்தகம் எடுக்க ஆரம்பித்தேன். இது நடக்கும்போது நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எந்த உள்நோக்கமுமில்லாத தாகம் இருந்தது. வாசிக்கும் எல்லைகள் விரிந்துகொண்டே சென்றன.

அந்த விதை, பத்தாம் வகுப்பு படிக்கும்போது,திருட்டுத்தனமாக கிரைம் நாவல், நாவல் லீடர், உங்கள் ஜூனியர் ஆகிவற்றை ஐம்பது பைசாவுக்கு பழைய புத்தகமாக, வாங்கிப்படித்துவிட்டு தூக்கிப்போடும் வரைக்கும் விருட்சமானது. அப்படித்தூக்கிப்போட்ட நாவல்களை வைத்தே ஒரு லெண்டிங் லைப்ரேரி வச்சுப்பொழச்சிருக்கலாம்.

அங்குதான் எனக்கு ஒரு நண்பன் கிடைத்தான். கூடவே அவன் வில்லத்தனமிக்க அண்ணனும்...என்ன ஆச்சுன்னா....

(தொடரும்)

Comments

  1. சஸ்பென்ஸோட தொடருமா???

    தாங்க முடியல அடுத்த பதிவு சீக்கிரம்

    ReplyDelete
  2. //
    டீச்சர்களில் ஒருவருக்கு திருமணம் ஆன அன்று உலகமே இடிந்து விழுந்ததுபோல் உணர்ந்தேன். கொஞ்சம் வெய்ட் பண்ணியிருந்தா நாம் கல்யாணம் பண்ணியிருக்கலாமே என்று மறுகினேன்.
    //
    ரசிக்கும்படிக்கு இவ்வளோ விஷயம் எழுதியிருக்கீங்க..
    என் கண்ணுல எது மாட்டுது பாருங்க?? ஹ்ம்ம்.... அதெல்லாம் ஒரு காலம்.. ;)

    இருந்தாலும் ஒரு திரைப்படத்தில் மாணவரான வடிவேலு, டீச்சர் ஒருவரை காதல் செய்யும் காமெடி கவனத்துக்கு வருவதை தவிர்க்க முடியல...

    ReplyDelete
  3. வாங்க புதுகைத்தென்றல்..

    நீங்க வர்றதுதான் நம்ம சொந்தக்காரங்க வீட்டுக்கு வர்ற உணர்வு வருது!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  4. வாங்க அன்புடன் மணிகண்டன்..

    அது ஒரு கல்யாணக்காலம்...!
    :)

    நன்றிப்பா!

    ReplyDelete
  5. நட்சத்திர வாரம்ம்ம்ம் கலக்கலாகப் போய்க்கொண்டிருக்கிறது..வாழ்த்துக்கள் சுரேகா..

    ReplyDelete
  6. மிக்க நன்றி நர்சிம் ஜி!

    நம்ம டீல் ஒண்ணு இருக்கில்ல!
    எங்க ஊர் மிளகாய் தராம போகமாட்டேன்.! :)

    புரிஞ்சிடுச்சா! :))

    ReplyDelete
  7. //நட்சத்திர வாரம்ம்ம்ம் கலக்கலாகப் போய்க்கொண்டிருக்கிறது..//

    repeattu

    ReplyDelete
  8. இலுப்பூர் பள்ளிக்கால வாழ்க்கை, பாடப்புத்தகத்தை மீறி கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் என பல்வேறு நிகழ்வுகளையும் அறியக் கூடியதாக இருந்தது.

    ReplyDelete
  9. மிக்க நன்றி பாபு!

    ReplyDelete
  10. வாங்க மாதேவி!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  11. நட்சத்திர வாரத்தில நிறைய கொசுவர்த்தி யா இருக்கே..?:)

    ReplyDelete
  12. இதுலயும் தொடரும்ன்னு போட்டிங்களே !!!

    ReplyDelete
  13. //புதுக்கோட்டை, அன்னவாசல் வழியே ஊருக்குள் நுழையும்போது அரசு மருத்துவமனை, வலதுபுறம் அரசு மேல்நிலைப்பள்ளி, பின்னர் கடைவீதி. அதைத்தாண்டி இரண்டு ' ட ' வளைவுகளுக்குப்பிறகு நேரே சென்றால் விராலிமலை செல்லும் சாலையில் சிறிய பேருந்து நிலையம். அதன் பின்புறம் மிக நீளமான உடமான் குளம். பேருந்துநிலையம் தாண்டி கொஞ்சதூரம் சென்றால் ஊரின் கடைசி ஏரியாவான கோட்டைத்தெரு. அதை அடுத்து பிடாரி அம்மன் கோவில். அப்படியே சாலை மேடேறி விராலிமலை நோக்கிச் சென்றுவிடும் //


    யோவ் அண்ணாத்த, இதெல்லாம் ரொம்ப ஓவரு. அந்த ஊரோட மொத்த நீளமே 300 மீட்டர்தான். நீங்க குடுத்துருக்குற வர்ணனையைப் பார்த்தா ஏதோ நகராட்சி ரேஞ்சுக்கு இருக்கு :)

    ReplyDelete
  14. வாங்க கேபிள் ஜி!

    கொசுவத்திலதான் எதிர்வினை இருக்காது...அதேன்! ஹி..ஹி!


    சில அறிமுகங்களும், சில அறிவுரைகளும் இருக்கு! வெய்ட்! :)

    ReplyDelete
  15. வாங்க ரோமியோ!

    முழு வருகைப்பதிவுக்கு நன்றியும் வாழ்த்தும்..! :)

    ReplyDelete
  16. வாங்க அப்துல்லா! :))

    உண்மை ஊரைவிடப்பெரிசா இருந்தா நான் என்ன பண்றது? :)

    எல்லாம் நம்ம இருந்த ஊரைப்பத்தி சொல்ற சந்தோஷம்தான்! லூஸுல விடுங்க! :))

    ReplyDelete
  17. Unga ooru pakkaththile..
    siththanna vaasal paththi sollunga..

    ReplyDelete
  18. என் அம்மாவுக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு ஊருக்குப்போனவுடன் அவர்கள் செய்யும் முதல் செயல் அந்த ஊரின் நூலகத்தில் உறுப்பினராவதுதான். அப்படித்தான் அங்கும் ஆனார்கள். அவர்கள் எடுக்கச்சொல்லும் புத்தகத்தை கொண்டுவந்து தரும் பணியில் நான்!
    athane parthen!
    congrats to amma too
    sau.

    ReplyDelete
  19. ஓஓஓ புதுக்கோட்டை - அது வழியா பல தடவை போய் இருக்கிறேன் - ம்ம்ம்

    கொசுவத்தி அருமை

    அத்தனையும் பொம்பள டீச்சர்தானா - ஆம்பள வாத்தியார் பேரு ஒண்ணு கூட நினைவில்லையாக்கும். நன்று

    புஸ்தகம் படிக்கற பழக்கம் தான் இன்னிக்கு கை குடுக்குதாக்கும்

    வழ்ழ்த்துகள் சுரேகா

    ReplyDelete
  20. நானும் அந்த பசுமை நிறைந்த பள்ளியோடு பழகி திரிந்த பாலன் தான்..இன்று நினைக்கும் போதும் கண்ணில் ஏனோ நீர் வழிந்தோடுகிறது..(பசுமை நிறைந்த நினைவுகளே...பாடி திரிந்த பறவைகலே...)

    ReplyDelete
  21. அய்யா தமிழ் புலவரே வாழ்க பல்லாண்டு...நான் அடியேன் விஜயகுமார்.ராஜா
    See Me On : www.vijayakumarraja.wordpress.com,
    E-Mail id : prv.it57@gmail.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !