அடைக்கலக் காதல்




'அடைக்கலம்?'

'என்ன மாப்புள?'

'இந்தவாட்டி 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல ஜெயிக்கிற!'

'கண்டிப்பா! எனக்காக இல்லாட்டியும், மல்லிகாவுக்காக ஜெயிப்பேன்.'

அடைக்கலத்துக்கும் எனக்குமான உரையாடல் இப்படித்தான் தொடங்கியது அன்று!

அதேபோல், அந்த விளையாட்டுப் போட்டியில் அவன் பெயரை நான்குபேர் கொடுத்தோம். அந்த அளவுக்கு அவனது ஓட்டத்தின் மீது நம்பிக்கை!

மல்லிகாவைக் கடுமையாகக் காதலித்த அடைக்கலம், எங்களிடம் சொல்லிய கண்டிஷன் ஒன்றுதான்.!

1500 மீட்டர் போட்டியில் ஓடும்போது உற்சாகப்படுத்த மல்லிகாவும் சேர்ந்து கத்தவேண்டும். ஓடிக்கொண்டிருப்பவனிடம் , குளுக்கோஸ் பவுடர் அல்லது பாதியாக வெட்டப்பட்ட எலுமிச்சையை அடுத்தடுத்த சுற்றுக்களில் கொடுக்கவேண்டும். அது அந்த நேரத்தில் பெரிய சவாலாகத் தோன்றவில்லை.

நான் மல்லிகாவிடம் தூது போனேன். விபரம் சொன்னேன்.

’மல்லி! அடைக்கலத்துக்கு அடைக்கலம் குடேன்!’

‘இதப்பாரு பீட்டரு! அவன நான் காமெடிப் பீசாத்தான் பாக்குறேன். காதலிக்கிற அளவுக்கு அவனும் ஹீரோ இல்லை. எனக்கும் நேரமில்லை’ என்று இந்திரா நூயியின் எதிர்வீட்டுக்காரி போல் பேசினாள்.

'சரி! லவ் பண்ணவேணாம். ஒரு சக மாணவன் ஓடுறதை உற்சாகப்படுத்துறதா நெனைச்சுக்க!

'நெனச்சுக்குறதா? லேசா சிரிச்சாலே, மல்லிகாவை மடக்கிட்டேன்னு மாநாடே நடத்திருவான்.'

'இல்லப்பா! நான் பாத்துக்குறேன். அவன் ஒரு ஓட்டப்பந்தய வீரன் ! நீ ஒரு மாணவி! அவ்வளவுதான்.. இதுக்குமேல எதுவுமே இல்லை ! போதுமா?'
அவன் காதல் எக்கேடு கெட்டால் என்ன? பரிசு கிடைத்தால், பார்ட்டி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அவளுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசினேன்.
அவள் எளிதில் ஒத்துக்கொள்ளவே இல்லை. 

'நம்ப காலேஜ் மானத்தை நீதான் காப்பாத்தணும்!

'ஓடுறது அவன்! நான் ஏன் காப்பாத்தணும்!'

'உனக்குத்தான் தெரியுமே! ஊக்குவிப்பவர்கள் ஊக்குவித்தால், ஊக்கு விற்பவன்கூட தேக்கு விற்பான்.!' –அவள் கவிதை அறிவில் கைவைத்தேன்.
அரைகுறை எரிச்சலுடன்…'ஸ்ஸ்சரி! அவனுக்காக இல்லை! அவன் ஜெயிக்கணும்னு நினைக்கிற உன் ஃப்ரெண்ட்ஷிப்புக்காக!' என்று முடித்தாள்.

'ரொம்ப தேங்க்ஸ்ப்பா!!' –சொல்லி மறுநிமிடம் அடைக்கலத்தைப் பார்க்க பறந்தேன்.

அடைக்கலம் ஒல்லியாக, உயரமாக, கொஞ்சம் வெளுப்பாக, ராவணன் பிருதிவிராஜ் போல் இல்லாமல், ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணா போல் இருப்பான். மல்லிகா குள்ளமென்றாலும், இருக்கும் உடையை அழகாக அணிந்து வந்து, அலைபாயுதே ஷாலினி போல் இல்லாமல், அஞ்சாதே  விஜயலட்சுமி போல் இருப்பாள்.

இருவருக்கும், ஒரு சாதாரண குடும்பப்பின்னணிதான்! அடைக்கலத்துக்கு , படிப்பைவிட ஓட்டம் நன்றாக வரும் என்பதால், பள்ளியிலிருந்து ஓட்டப்பந்தயங்களில் முதல் பரிசு வென்று வருகிறான். மல்லிகா, நன்கு படிப்பாள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவாள். நல்ல பெண்!

அடைக்கலத்திடம் விபரம் சொன்னவுடன், துள்ளினான். என்னைத் தூக்க முயன்று,  இருமுறை கீழே போட்டான்.

‘அடச்சீ! இப்ப எதுக்கு இப்புடிக் குதிக்கிற? நீ நல்லா ஓடணும்னு ஒத்துக்கிட்டிருக்கா!’

'அதில்ல மச்சி அவளுக்குள்ளயும் லவ் இருக்கு! அதான் லேசா வெளிய காட்டுறா!'
'அது என்ன கருமாந்திரமோ? நீ உன் ஓட்டத்திறமையை வெளில காட்டு!

சரி மச்சி! நாளைக்குக் காலைலேருந்து ப்ராக்டிஸ் பண்ணுறேன்.

போட்டிகள் நடக்க ஆரம்பித்தன. 1500 மீட்டர், ஏழரை சுற்றுக்கள்.!
     மல்லிகா ,கொஞ்சம் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அழகாக உடையணிந்து, மிகவும் அழகான முகத்துடன் வந்திருந்தாள். கூடியிருந்தவர்கள் எல்லோரும் அவளை ஒருமுறை திரும்பிப்பார்த்தார்கள். அவளைத் தாஜா செய்து, வேறு சில தோழிகளுடன் மைதானத்தின், ஒரு இடத்தில் நிற்க வைத்து நாங்களும் அருகில், நின்றுகொண்டோம். வாய் நிறையச் சிரிப்புடன் அடைக்கலம் தன் 7ம் எண் பனியனை, ரேமண்ட் கோட்டைச் சரிசெய்யும் லாவகத்துடன் இழுத்துவிட்டுக்கொண்டு, எங்கள் பகுதியையே பார்த்துக்கொண்டு நின்றான்.

ஓட ஆரம்பித்தான். மைதானத்தின் எந்தப்பகுதியில் ஓடினாலும், எங்களை…இல்லை..இல்லை…மல்லிகாவைப் பார்த்துக்கொண்டே ஓடினான்.. 

நாங்களும் ‘அடைக்கலம்’ அடைக்கலம், அடைக்க்க்க்கலம்..! அன்று அதிர அதிரக் கத்தினோம்.  அவன் எங்கள் பகுதியைக் கடக்கும்போது, அடைக்கலம்…என்று ஆரம்பித்துவிட்டு நாங்கள் நிறுத்தி…மல்லிகா குரல் மட்டும் அவனுக்குக் கேட்குமாறு பார்த்துக்கொண்டோம். படுவேகமாக ஓடினான்.
      மல்லிகா கையில் பாதி எலுமிச்சையைக் கொடுத்தேன். அவன் அருகில் வரும்போது நீட்டு! அவனே வந்து வாங்கிக்கொள்வான் என்று சொல்லியிருந்தேன். அவளும் மில்லிமீட்டர் புன்னகையுடன் மைதானம் நோக்கி நீட்டினாள். எதிர்பார்த்துக்காத்திருந்தவன் கையை நீட்டிக்கொண்டே, டைட்டானிக் டி காப்ரியோ போல் ஓடி வந்தான். அவள் கையிலிருந்து வாங்கும்போது, கண்மூடித்திறந்தான். அடுத்த சுற்றில், மல்லிகாவின் புன்னகையின் நீளம் செண்ட்டி மீட்டரானது. மீண்டும் உற்சாகக் கத்தல்!
     கடைசிச்சுற்றுகளில், எங்கள் கத்தல் அதிகமானது! அதுவும் மல்லிகா, வீறுகொண்டுக் கத்தினாள்.
‘அடைக்கலம்…அப்..அப்! அடைக்கலம்! அப்..அப்! அடைக்க்க்கலம்ம்…அப்..அப்!
     மைதானத்தின் எதிர்ப்பகுதியில் அவன் வரும்போதே, எலுமிச்சை நீட்டினாள். குளுக்கோஸை அள்ளிக்கொடுத்தாள். அங்கு கடந்துசெல்லும் வேறு வீரர்களும் வாங்கிச் சென்றார்கள்.  நாங்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடைக்கலம் ஒரு மாயமான் போல் ஓடிக்கொண்டிருந்தான்.

இவ்வளவு முயற்சிக்குப்பின்னும், அடைக்கலம் இரண்டாவதுதான் வந்தான். தன் கடமை முடிந்ததுபோல், மல்லிகா, கூட்டத்திலிருந்து நகர ஆரம்பித்தாள்.

வெற்றிபெற்றவர்களை 1,2,3 என்ற படிகளில் நிற்கவைத்தாரகள். முதல் பரிசு 11ம் எண், இரண்டு 7, மூன்று 23 என்று நின்றார்கள்.
அறிவிப்பு ஆரம்பித்தது.

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்றவர்கள் விபரம்.
முதல் பரிசு கே. அடைக்கல ராஜ்
இரண்டாம் பரிசு எஸ்.அடைக்கலம்.
மூன்றாம் பரிசு பி.அடைக்கல ஜான்ஸன்.

லவ் பண்ணுங்க பாஸு ! கூட ஓடறவனையும் சேத்து ஜெயிக்கவைக்கலாம்.!


இரண்டாவதாக வந்தாலும், காதல் போதையில், அடைக்கலத்தின் வசனம் இது!!

Comments

  1. எதிர்பாராத climax. சூப்பர் பாஸு!!!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி நல்லவன்!

    ReplyDelete
  3. வாங்க நாஞ்சில் மனோ!

    மிக்க நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !