விஸ்வரூபம், எக்ஸ்பிரஸ் மால்..இன்ன பிற..



     
    விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னையை கமல் மிகச்சரியாகத்தான் கையாண்டுகொண்டிருக்கிறார். அவரது DTH ஒளிபரப்பு சிந்தனை மிகவும் சிறப்பானது. தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாகப் பயன்படுத்திக்கொண்டால்தான், ஒரு கலை மட்டுமல்ல… ஒரு சமூகமே நன்கு வளரும். அதைப் புரிந்துகொள்ளாமல் குய்யோ முறையோ என்று கதறும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு விரலை கமலை நோக்கிக் காட்டும்போது மற்ற விரல்கள் தங்களை நோக்கித்தான் இருக்கின்றன என்று மறுப்பதற்கில்லை.

    உண்மையிலேயே, தமிழ் சினிமாவின் இப்போதைய வியாபார ரோலர் கோஸ்டர் நிலைக்கு, திரையரங்குகள்தான் காரணம்.! அவர்களது நியாயமற்ற டிக்கட் விலைதான் , இரசிகனை தியேட்டருக்கு வராமல் செய்கிறது. மேலும், அரசும் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நிச்சயம் ஆபத்தை வரவழைக்கும். இப்போது கமல் எடுத்திருக்கும் முடிவை, மிகவும் நைஸாக மற்ற தயாரிப்பாளர்களும் எடுத்துவிடும் தூரம் அதிகமில்லை. ஒருபக்கம் திரையரங்குகள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள், மறுபக்கம் திரையரங்குகள் தங்கள் அடாவடி டிக்கெட் கட்டணத்தால் இரசிகர்களை உள்ளே வரவிடாமல் திண்டாடவைக்கிறார்கள். இது தொடர்ந்துகொண்டேயிருந்தால், ஒரு படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் யுக்திகள் அனைத்தையும் தயாரிப்பாளர்கள் எடுக்கவேண்டியதுதான் காலத்தின் கட்டாயம்.

    திரையரங்கு உரிமையாளர்கள், தங்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது என்பதற்காக, நீ வேறு எங்கும் படத்தை ஒளிபரப்பக்கூடாது என்று வம்பிழுப்பது முட்டாள்தனம். திருட்டு டிவிடிக்குக் காரணமே இவர்கள்தான். தியேட்டர்களிலிருந்துதான் பிரிண்ட் எடுக்கப்படுகிறது என்பதை மறுக்கவே முடியாது. அதுவும், கேமராவில் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துவிட்டு, ஒலியை மட்டும் நேரடியாக DTS மிக்ஸரிலிருந்து திருடித்தான் டிவிடி வருகிறது. அந்தத் திருட்டை ஒழிக்க வக்கில்லாத திரையரங்கு உரிமையாளர்கள், நேர்மையாக ஒரு மனிதன் வேறு முறையில் மக்களிடம் தன் படைப்பைக் கொண்டு சேர்த்தால், குதிப்பதில் நியாயமே இல்லை. திரையரங்கு உரிமையாளர்கள் திருட்டு டிவிடி வராது என்று உறுதி அளிக்க இயலாத பட்சத்தில் , கமலின் வியாபரத்தில் தலையிட அருகதையே கிடையாது.

    உண்மையில், இன்றைய சூழலில், தமிழ் சினிமாவை வீழ்த்துவதில் திரையரங்குகளுக்குத்தான் பங்கு அதிகமாயிருக்கிறது. கமல் மட்டுமே, தயாரிப்பாளர்களுக்கு புதிய வியாபார யுக்திகளை பல்வேறு காலகட்டங்களில் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறார். தமிழ்த் திரையுலகை, கமலை, திரை சார்ந்த வியாபாரத்தை நேசிப்பவர்கள் அனைவரும், அதை ஆதரிப்பதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

கமல் சார் நீங்க செய்வது சரிதான்..! நீங்க முன்னாடி போங்க! …பின்னாடியே வரோம். அவங்களும் வருவாங்க!
_______________________________________________________________

     எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஒரு விளையாட்டு உலகம் இருக்கிறதாம். அங்கும் கார்டு சிஸ்டத்தைக் கொண்டுவந்து அதில் 20 ரூபாய் வசூலித்து அடாவடி செய்துகொண்டிருக்கிறார்களாம். இந்திய உணவு அல்லது பொழுதுபோக்குச் சட்டத்தில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை. இவர்களது உள்கணக்கு வசதிகளுக்காக வாடிக்கையாளர்களை அடாவடி செய்கிறார்கள். இந்த முறை மொத்தமாகப் போய் கேட்கலாம் என்று எண்ணம். இவர்கள் செய்யும் அநியாயத்தை நாம்தான் தட்டிக்கேட்கவேண்டும். இதற்காக தேவதூதன் யாரும் பிறந்து வந்துவிடமாட்டான். இது போன்ற சாத்தான்களுக்கு நாமே போதும்.!! கரம் கோர்க்க விரும்புபவர்கள் kettaalkidaikkum@gmail.com க்கு ஒரு மெயிலைத் தட்டிவிடுங்கள். தேதியும் நேரமும் தனியே அறிவிக்கப்படும்.


ஒன்று மட்டும் நிச்சயம்.. தன்னெதிரே நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்காத சமுதாயம் நாசமாய்ப் போவதை யாராலும் தடுக்க முடியாது.
___________________________________________________________________________


       ஜெயா ப்ளஸ்ஸில் கற்றல் அழகு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதில். ஒவ்வொரு மேற்படிப்புத் துறைகளின் உண்மையான தன்மையை ஆராய இருக்கிறது. உதாரணமாக, ஏரோநாட்டிக் பொறியியல் படித்தால், பைலட் ஆகலாம் என்று பரவலாக எண்ணம் இருக்கிறது. ஆனால், அது படித்தால், விமான உற்பத்தி அல்லது பழுதுபார்த்தலில்தான் வேலை கிடைக்கும். அதுவும் அதனுள் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. ஏரோ ஸ்பேஸ் டெக்னாலஜி என்று ஒன்று உள்ளது. அது படித்தால், செயற்கைக்கோள் தயாரிப்பில் பங்குபெறலாம். அதுதவிர ஏவியானிக்ஸ் என்ற படிப்பு இருக்கிறது. அது படித்தால் மட்டுமே, விமான கட்டுப்பாட்டுக் கருவிகள்  தயாரிப்பில் பங்கெடுக்கமுடியும். இதில் முதுகலைப் படிப்புகள் முடித்தவர்கள் பல்வேறு சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்று பல்வேறு படிப்புகளைப் பற்றியும், அதன் பாடத்திட்டங்கள், வேலை வாய்ப்பு, ஆராய்ச்சி வாய்ப்பு பற்றிய உண்மைத் தகவல்களை அந்தக் கல்லூரிகளுக்கே சென்று , செயல்முறை விளக்கத்துடன் புரியவைப்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கம். ஒளிபரப்பு நாளும், நேரமும் விரைவில்…


வரும் திங்களிலிருந்து, மக்கள் தொலைக்காட்சியில், காலை 8:48க்கு ஒளிபரப்பாகும் ஊருக்கு உரைப்போம் என்ற நிகழ்ச்சியில், சில நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கன்ஃப்யூஷியஸ், லியோ டால்ஸ்டாய் புத்தகங்கள், வீரத்தேவன் வரலாறு போன்றவை அடக்கம்..  அது அறிமுகமா,? படுத்தலா? என்று பார்த்தபிறகுதான் தெரியும்.

Comments

  1. சுரேகாஜி,

    //அவர்களது நியாயமற்ற டிக்கட் விலைதான் , இரசிகனை தியேட்டருக்கு வராமல் செய்கிறது.//

    நீங்க சொல்வது மிகச்சரியானது, ஆனால் விலை ஏற்றத்துக்கு காரணம் தியேட்டர்காரங்க மட்டுமில்லை, ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும், படத்தினை அதிக பொருட்செலவில் தயாரித்துவிட்டு ,அதிக எம்ஜி கேட்பதால் கட்டணம் உயர்ந்தது.

    இத்தனை நாளாக எம்ஜியில் படம் வெளியிட்டப்போது லோகநாயகர் தியேட்டர் கட்டணம் உயர்ந்துவிட்டது என குறைப்பட்டாரா? இன்னும் சொல்லப்போனால் கட்டணத்தை ஏற்ற வேண்டும் என சொன்னார்.

    எம்.ஜி வாங்குற கேலிக்கூத்து உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான் உண்டு, மற்ற இடங்களில் எல்லாம் படம் வெளியிட விநியோகஸ்தரோ, தயாரிப்பாளரோ தான் தியேட்டர்காரங்களுக்கு முன் கூட்டியே அட்வான்ஸ் கொடுக்கணும்.



    // இப்போது கமல் எடுத்திருக்கும் முடிவை, மிகவும் நைஸாக மற்ற தயாரிப்பாளர்களும் எடுத்துவிடும் தூரம் அதிகமில்லை.//

    தியேட்டர் கட்டணம் அநியாயம்னு பொங்குறவங்களுக்கு கூட டிடிஎச் கட்டணம் 1000 ரூபா ரொம்ப கொறைச்சலா இருக்கே :-))

    இதுல வேற எல்லா தயாரிப்பாளர்களும் இதையே செய்வாங்கன்னு ஜோசியமும் சொல்லுறிங்க,அப்போ டிடிஎச் இல் போட்டுவிட்டு 1000 ரூபா பிடுங்குவது உலகத்தரமான தொழில்நுட்பமா :-))

    தியேட்டருன்னு ஒன்னு இருப்பதால் தான் ,தியேட்டர் ரிலீஸுக்கு முன்னர் என சொல்லி டிடிஎச் இல் கல்லா கட்ட முடியும், தியேட்டரிலேயே ரிலீஸ் ஆகாத படம் எனில் டிடிஎச்சில் பார்க்க ஆர்வம் போய் யாரும் பார்க்க மாட்டார்கள்.

    டிடிஎச் இல் படம் வெளியிடுவது , ஒரு வியாபார யுக்தி தான் ஆனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கானது அதை புரிந்து கொள்ளாமல் புதுசா ஒன்று செய்கிறேன் என சொதப்புவது எல்லாம் செம காமெடி.

    எல்லாரும் டிடிஎச்சிலேயே படம் வெளியிடும் நிலை வந்தால் எந்த படமும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியாது, ஹீரோக்களின் கோடிக்கணக்கான சம்பளமும் கோவிந்தா தான் :-))

    main revenue,auxilary revenue என இருக்கு, சினிமாவை பொறுத்தவரை தியேட்டர்களே மெயின் ,டிடிஎச், சேட்டலைட்,டிவிடி எல்லாம் துணை வருவாய் அதை வைத்து மட்டுமே ஒரு படத்தின் முதலீட்டை முழுக்க எடுக்க இயலாது.

    ஹாலிவுட்டில் லாப சதவிகிதத்தில் டிவிடி, சேட்டலைட்ஸ் ரைட்ஸின் பங்கு அதிகம், ஆனால் பாக்ஸ் ஆபீஸில் படம் தேறினால் தான் மேற்கண்டவற்றின் மூலம் லாபம் வரும், பாக்ஸ் ஆபிசில் சரியாக கலெக்‌ஷன் இல்லை எனில் ,சேட்டலைட்ஸ், டிவிடி மூலம் வரும் வருவாயும் அடிபடும்.

    ஒரே ஒரு தியேட்டரிலாவது ரிலீஸ் ஆனால் தான் ,ரிலீசுக்கு முன்னர் டிடிஎச் இல் பிரிமியர் என சொல்லலாம், தியேட்டரையே எட்டிப்பார்க்காத படத்தினை டிடிஎச் இல் போட்டால் அதற்கு பெயர் டெலி ஃபில்ம் :-))

    ReplyDelete
  2. "கமல் மட்டுமே, தயாரிப்பாளர்களுக்கு புதிய வியாபார யுக்திகளை பல்வேறு காலகட்டங்களில் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறார்."
    உண்மையை உரக்கச் சொன்னீர்கள்,வாழ்த்துக்கள் சுரேகா சார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !