சாருவுடன் ஒரு விமானப்பயணம்!

12 Aug 2009 · சுரேகா சுந்தர்

அந்த விமானப்பயணம் திடீரென்று நிகழ்ந்தது.
ஒரு அவசரவேலைக்காக சென்னை வரவேண்டியிருந்ததால்,
இருக்கும் 4 மணிநேர இடைவெளியில் பஸ்ஸிலோ, காரிலோ பயணிப்பது இயலாது என்பதாலும், அத்தனை அவதியாகச் சென்று அமைதியைக்குலைத்துக்கொள்ளாத ஆள் என்பதாலும், திடீரென்று திருச்சி விமான நிலையத்தில் நுழைந்தேன்.

சரியாக காலை 8.45க்கு ஒரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்புவதாக அங்கிருக்கும் நண்பர் அரவிந்த் சொல்ல, உடனே டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றேன். அது பன்னாட்டு விமானம். சென்னை சென்று, பின் சிங்கப்பூர் செல்லும் என்றார்கள். ஆரம்பகட்டச் சடங்குகளெல்லாம் முடிந்து, போர்டிங் பாஸ் வாங்கி அமர்ந்தபின் நம்முடன் பயணிக்கப்போகும் அன்பர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.

முதல்முறையாக வெளிநாட்டுக்கு தாயைக்கூட்டிவரும் மகன்!
அந்தத்தாயின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி ! (திடீரென்று
ஈரானியப்பெண்மணி நம் அப்துல்லாவை ஹஜ்ஜுக்கு அம்மாவுடன் சென்றபோது வாழ்த்தியதை நினைத்துக்கொண்டேன்.)

புதுமணப்பெண்ணாக, பெற்றோரிடம் விடைபெற்று கணவனுடன் சிங்கையில் வாழப்போகும் ஒரு பெண்! (அவள் கண்களில்தான் எத்தனை எதிர்பார்ப்புகள்! சகோதரி உன் வாழ்வு இனிதாகட்டும்)

எந்த மூட்டைமுடிச்சுகளும் இல்லாமல் ஒரே ஒரு லேப்டாப்புடன் வெளிநாடு செல்லும் இளைஞன்! ( அவன் விமான நிலையத்தின் உள்ளே நுழையும்போதே லக்கேஜ் இல்லை. இப்படியும் எல்லா நாட்டிலும் துணிமணிகளை வைத்துக்கொண்டு வாழ ஒரு கொடுப்பினை வேண்டும்..!)

4 குழந்தைகளுடன், அதிக அளவு பெட்டிகளுடனும் மிகவும் சிரமப்பட்டு உள்ளே வந்த ஒரு பெண்! ( பாவம்.. ஒருவரிடம் லக்கேஜே இல்லை...ஒரு பெண்ணிடம் இவ்வளவு லக்கேஜ்.. உலகம் சமநிலை பெறவேண்டும்...சீர்காழி கணீரென்று மைண்ட் வாய்சில் பாடிச்சென்றார்..! :) )

அனைவரையும் சந்தேகப்பார்வையுடன் பார்த்துக்கொண்டே இருந்த ஒரு பெண்மணி (அய்யோ...ஒரு இட்லியைக்கூட இவ்வளவு சந்தேகமாகச்சாப்பிட முடியுமா என்று தோன்றினாலும்..பாவம்.எங்கோ அந்த அளவு நம்பிக்கை இழந்திருக்கிறார் என்ற நியாயமும் வந்துபோனது)

வீட்டில் என்ன பிரச்னையோ...கண்கூடாக பீறிடும் அழுகையை அடக்கிக்கொண்டே ...சிரிக்க முயற்சித்து நுழைந்த ஒரு விமானப்பணிப்பெண். (இதை வைத்து ஒரு சிறுகதையே எழுதலாம்..அந்த அளவு அற்புதமான சிரிப்பு அழுகை கலந்த கலவை அது...சுஹாஸினி மேடம்..உண்மையாவே நந்தினி சிஸ்டரைப்பாத்துட்டேன்)

இவர்களெல்லாம் போக, அவசரத்தில் ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏறும் வரிசைக்குப்பதிலாக எங்கள் வரிசையில் நின்றுவிட்டு கடைசி வினாடியில் திட்டுவாங்கிக்கொண்டே குடும்பத்தை கூட்டிச்சென்ற ஒரு ரங்கமணி ! (தலைவா! பில்கேட்ஸாவே இருந்தாலும் ...தங்கமணிகளுக்கு நம்ம தகர டப்பாதான்..இதுல இப்படி ஒரு தப்பை ..எல்லாரும் கையில சிகப்பு கலர் டிக்கெட் வச்சிருக்கும்போதே செய்யலாமா?)

அவர் அங்க என்ன செஞ்சு வச்சுருக்காருன்னே தெரியலையேம்மா! வீடெல்லாம் அலங்கோலமாக் கெடக்கும்...போனவுடனே போன் பண்ணலைன்னு கத்தாத..என்று முடிந்தவரை கத்திப்பேசிக்கொண்டிருந்த ஒரு தங்கமணி! (No male is perfect in front of his wife , especially in kitchen - நல்லா அனுபவிச்சு சொல்லியிருக்காய்ங்க! டிக்கெட் எடுத்துக்குடுத்து சூனியத்தை வைத்துக்கொள்ளும் அப்பாவி ரங்கமணி..நீ செத்தடீ இன்னும் 4 மணி நேரத்துல! )

மாப்புள ஒரு அவசரவேலை ..திடீர்ன்னு ஏர்ப்போர்ட் வந்து ப்ளைட் பிடிச்சுட்டேன். இந்தா கிளம்பிரும்..நம்ப ப்ரெண்ட்ஸ்க்கிட்டயெல்லாம் சொல்லிரு...கரெக்டா ஏர்ப்போர்ட்டுக்கு வந்திருடா..! (இதைவிட வெவரமா ப்ளைட்டுல வர்றதை பீத்திக்கவே முடியாது!...கிட்டத்தட்ட நம்பளும் அப்படித்தான்!)

விமானத்தில் ஏறினேன். நினைத்தபடியே எனக்கு ஜன்னலோர இருக்கை!
அருகில் வந்து அமர்ந்தது ஒரு அழகான ஆறுவயதுச் சிறுமி!
நன்றாகப்பேசிக்கொண்டுவந்தாள்! எங்க மாமா கல்யாணத்துக்கு வந்தோம். அப்பா முன்னாடியே ஊருக்குப்போயிட்டாங்க! நாங்க இப்பதான் போறோம். சிங்கப்பூருக்கு எத்தனை மணிக்குபோகும்?...மாமாக்கு புதுப்பொண்ணு ரொம்ப நல்லவங்க! தம்பி என்கிட்ட பாசமா இருப்பான்..அக்கா சொல்லுவான் என்று கலகலவென்று என் விமானப்பயணத்தை மிகவும் சுவாரஸ்யமானதாகவும், கொண்டாட்டமானதாகவும் மாற்றிக்கொண்டிருந்தாள்!
அவளுடைய அம்மாவும், பேசாமல் எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்தபடியே, அவளது தம்பியை மடியில் வைத்துக்கொண்டே வந்தார் !
இவ்வளவு அழகாகப்பேசும் அந்தப்பெண்குழந்தையிடம் பெயர் கேட்டேன்.
தண்ணீர் குடித்துவிட்டுச்சொன்னாள்

சாரு...சாருலதா!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →