போட்டுக்கொடுத்த பொடிப்பையன்

15 Feb 2010 · சுரேகா சுந்தர்



கலியாப்பட்டியிலிருந்து தினசரி மலையடிப்பட்டிக்கு பள்ளி செல்லும் நான் ஏதாவது கற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்று நினைத்தேனா.. வீட்டுக்கு வந்தவுடன் என்னடா சொல்லிக்குடுத்தார்கள் என்று வீட்டில் கேட்கும் கேள்விக்கு பயந்தேனா.. என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு அந்த ஆசிரியரின் மீது கடுப்பு அதிகரித்துக்கொண்டே இருந்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் எனக்கென்று எதுவுமே சொல்லிக்கொடுக்கவில்லை. ஒரே கைவீசம்மா கைவீசு, நிலா நிலா ஓடிவாவும், ஒரு சிங்கம் நாலு மாடு கதையும் எனக்கு அலுப்புத்தட்டியிருக்கவேண்டும். அவரைப்பொறுத்தவரைக்கும் நான் லிஸ்ட்டிலேயே வராத பையன். ச்சும்மானாச்சுக்கும் பள்ளி வந்து செல்பவன். முக்கியமாக கிராம சேவக் மகன்! அவர் கொடுத்த மரியாதை, சக மாணவர்களிடத்திலிருந்தும் எனக்குக்கிட்டிய மமதையில் நான் திரிந்துகொண்டிருந்தேன்.

இப்படியாகப்பட்ட காலத்தில்தான், அந்த நாளில் பள்ளிக்கு Inspection என்ற பெயரில் ஒரு அதிகாரி வந்தார். அவரும் எல்லோரிடத்திலும் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார். என்னிடத்தில் என்ன கேட்டார் என்று நினைவில்லை. ஆனால் நான் சொன்ன பதில்தான் இங்கே முக்கியம்..!

' சார்! இந்த வாத்தியார் தினமும் வரார். நல்லா தூங்குறார். பாட்டுக்கேக்குறார். குறட்டை விடுறார். ஆனா எந்தப்பாடமும் எனக்கு சொல்லித்தரமாட்டேங்குறார் ' என்று குற்றப்பத்திரிக்கையை குள்ளநரித்தனமாக வாசிக்க, அதற்குப்பிறகு நடந்ததை இன்று வரை என் பெற்றோர் சொல்கிறார்கள்.

அன்றே அவர் என்னைப்பற்றி விசாரிக்க, சக மாணவர்கள் விபரம் சொல்ல... அன்று மாலை நான் ஒன்றுமே நடவாதது போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும்போது , ஒரு பையில் பிஸ்கெட் , பழங்கள் வாங்கிக்கொண்டு அந்த அதிகாரி வீட்டுக்கே வந்துவிட்டார். அப்போதுதான் அப்பாவும் வீட்டுக்கு வர, எனக்கு உதற.. அவர் என்னைப்பற்றி மிகவும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார்.

'சார்! பையன் ரொம்ப போல்டா பேசுறான். ஸ்கூல்ல ஆசிரியரைப்பத்தி தைரியமா புகார் சொன்னான். இப்படித்தான் சார் இருக்கணும். ஏன்னா, எல்லா இடங்களிலும் வாத்தியாரே பசங்களை Inspectionக்கு தயாரா வச்சிருப்பாங்க! இப்படியே வளருங்க!! அதுதான் நல்லது! என்று ஏத்திவிட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அடுத்த அரைமணி நேரத்தில், பாதிக்கப்பட்ட ஆசிரியரும் வீட்டுக்கு வந்து ' ஹி..ஹி.. பையன் ரொம்ப தைரியமா இருக்கான் சார். இருந்தாலும் என்னைப்பத்தி, டி இ ஓ க்கிட்ட தப்பா சொல்லிட்டாப்புல. இப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்போறாங்கன்னே தெரியலை..! பையன் இப்படித்தான் ஏதாவது சொல்லுவான்னு டி இ ஓக்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க சார்! என்று தர்மசங்கடமாகச் சொல்ல...

அப்பா அவர் சாப்பிட பிஸ்கட் கொடுத்துக்கொண்டே சொன்னார். இந்தாங்க பிஸ்கட் சாப்பிடுங்க! டி இ ஓ குடுத்தது! இனிமே நீங்க கொஞ்சம் நல்லா, வேலையை மட்டும் பாருங்க! பையன் ஒண்ணும் தப்பா சொல்லியிருக்க மாட்டான். !

இப்படி...இன்றுவரை என்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் அப்பாவுக்கு... நன்றி..!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →