ஓமப்பொடி # 4

22 Mar 2012 · சுரேகா சுந்தர்


               
         மின்வெட்டின் தாக்கம் காரணமாக, ஜெனரேட்டர் , இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. 


         எனது நெருங்கிய நண்பர் ஒருவர் ஜெனரேட்டர் வாங்க ஏற்பாடு செய்தார். அப்போது என் நண்பரான ஒரு ஜெனரேட்டர் நிறுவன மேலாளர் சொன்ன தகவல்கள் :

        சென்னையில் மட்டும் சென்ற ஆண்டை விட 340% ஜெனரேட்டர் விற்பனை அதிகரித்திருக்கிறது.

        அதற்கான துணைப்பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

        முன்னெரெல்லாம் ஆர்டர் எடுக்க போராடுவார்கள். இப்போது, அழைப்புகளை நிராகரிக்கும் அளவுக்கு அதிக ஆர்டர்கள்.

        போட்டியில், லாபம் குறைவாக்கிக்கொண்டாலும் ஒரு சில நிறுவனங்களே களத்தில் இருப்பதால், அது விற்பனையாளர் சந்தைதான். !

        எனக்கு ஒரு யோசனை வந்தது. : தமிழக அரசே ஜெனரேட்டர் விற்றால் என்ன? செஞ்ச பாவத்துக்கு பரிகாரமும் ஆச்சு! வியாபரத்தில் லாபமும் ஆச்சு!

        கடவுளை நினைத்துப் பார்த்தேன் : சென்னைக்கு மேலே அனந்த சயனத்தில் இருப்பவருக்கு.. திடீரென்று ஒரு பகுதியில் இருந்து, இரண்டு மணிநேரம் ’வ்ர்ர்ரூம்’ என்று இரைச்சல் வரும். அடுத்த வினாடியே.. இன்னொரு பகுதியிலிருந்து இரைச்சல்… எங்களைப் படைச்சு, இப்படியா இம்சிக்கிற.. நீ தூங்கவே கூடாது…! என்று நாம் கடவுளுக்குக் கொடுக்கும் பதிலடிதான்..ஜெனரேட்டர் சத்தம்.!!

        உண்மையில் இதனால் ஏற்படும் ஒலி மாசு நம்மை எவ்வளவு பாதிக்கும் என்று யாருக்குத் தெரியப்போகிறது.?
       ************************************************************************************************************

        புவனேஸ்வருக்கு,  ஒரு தமிழக நிறுவனத்தின் மேலாளர்களுக்கான மேலாண்மைப் பயிற்சியாளராகச் சென்றேன். அந்த நிறுவனத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அங்கு சென்றபின் தான் , எவ்வளவு சிறப்பான மனிதர்கள் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.


        அந்த நிறுவனத்தின் சேர்மன், தன்னிடம் சிறப்பாக வேலை பார்த்த இளைஞர்கள் இருவரை நிறுவன இயக்குநர்களாக்கி இருக்கிறார். வாரிசுகளை விட , திறமையுள்ளவர்களை முன்னேற்றியிருக்கிறார்.

        இங்கிருந்து 2005 ல் 30 ஊழியர்களுடன் புவனேஸ்வர் சென்று இறங்கிய அந்த நிறுவனத்தில் இன்று 3000 ஊழியர்கள்.

        அங்கு வேலைபார்க்கும் அனைவரும் , நிறுவனத்தின்மீது ஒரு உணர்வுப்பூர்வமான பந்தத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

        நிறுவனத்தின் இயக்குநருடன் அனைவரும் மிகுந்த அக்கறையும், அன்பும் வைத்திருக்கிறார்கள்.

        கனவு நிறுவனமாக அது வளர்ந்து நிற்கிறது. அவர்களை உற்சாகப் படுத்தச் சென்ற நான், உற்சாகமடைந்து வந்திருக்கிறேன்.


        அந்த நிறுவனம் Chennai Radha Engineering Works . www.crewpl.com இணைய தளத்தில் DAY CON என்ற ஒரு இதழ் வெளியிடுகிறார்கள். தினசரி அதனை புதுப்பிக்கிறார்கள்.

இதுபோன்ற உழைப்பு, நேர்மை, ஒழுக்கம் ,பணிவு நிறைந்தவர்களால்தான் ஒரு தேசத்தை முன்னேற்ற முடியும்.


************************************************************************************************************
        சென்ற வார ஆனந்த விகடனின் (21.03.2012) என் விகடன் சென்னைப் பதிப்பில் எனது வலைப்பூவைப் பற்றி வந்திருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு நிறைய நண்பர்கள் அழைத்து வாழ்த்தினார்கள். அனைவருக்கும் நன்றி..!!ஒருவரை ஒரே நாளில் இவ்வளவு மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று நிரூபித்த விகடனுக்கும், வலையோசை குழுவுக்கும் உளமார்ந்த நன்றிகள்!






        என் பள்ளி நண்பன் ஒருவன் தேடிக் கண்டுபிடித்து, வாழ்த்தினான்.அது இன்னும் மகிழ்ச்சியைத் தந்தது. அவன் பெயர் ஞானவடிவேல்.அவன் என்னைவிட நன்றாகப் படிப்பான். எழுத்து மிகவும் அழகாக இருக்கும். நல்ல சிந்தனாவாதி. அவனது தந்தை தீவிர மார்க்ஸிஸ்ட். இப்போது அவன் ஒரு மருந்து நிறுவனத்தில் பெரிய பதவியிலிருக்கிறான். அவன் இவ்வளவு அழகாகக் கவிதை எழுதுவான் என்று தெரியாது. அவனது கவிதை ஒன்றை இங்கே தருவதில் பெருமிதம் கொள்கிறேன்.

எதிர்கால  இந்தியா

என்னாகும்  இந்தியா எதிர்காலத்தில் ?-எதில்
முன்னேறும்   இந்நாடு  வருங்காலத்தில்?

அதிகாலைத் தேநீரும் அந்திக்குப்பின் மதுநீரும்
பொதுவான பானமாகிப் போகும்-இனி
இளைஞரினம் கிழவரினம் ஆகும்.

கானல்வரிக் காவியங்கள் கோணல்வரி ஓவியங்கள்
நாணல்இணை  நாட்டியங்கள் சாகும்.-நம்
நுண்கலைகள் முன்கலைகள் ஆகும்.

தண்பரிதிமுன் எழுந்து செம்புழுதிமண் உழுது
தரணிக்கே உணவளித்த தேசம்-இனித்
தன்பசிக்கே தள்ளாடி மாயும்.

கடல்முகத்தைக் காண்பதற்கே  கடுகிவரும் ஆறனைத்தும்
அணை அடுக்கில் அடைபட்டுப் போகும்.-அதை
விடுவிக்க மாநிலப்போர் மூளும்.

கற்றவர்கள் கூட்டமிகும் .வேலையின்மை ஏற்றம்பெறும்
விற்கும் பொருள் ஏற்றுமதி ஒழியும் -இங்கு
விற்பன்னர்  ஏற்றுமதி நிகழும்.

ஊழலெனும்  நஞ்சுநன்றாய்   ஊறியுள்ள   நெஞ்சுமட்டும்
வாழையடி வாழையென வாழும். -இங்கு
ஏழைநிலை மென்மேலும் தாழும்.

ஆதிமுதல் நாம்வளர்த்த அன்பழிந்து அறிவொழிந்து
சாதிகளால்  இந்தியர்கள் பிரிந்து-ஒரு
தேதியினில் தானழிவார் விரைந்து.

நாளும்நிகழ் காரியங்கள்  நடுக்கம்தரும் சூழலிலே
நாளைஎன்ன ஆகும் இந்த நாடு?
என்ற வினா கண்டகனா இஃது.

அத்தனையும் பொய்த்திடலாம் சொர்க்கமென வைத்திடலாம்
சத்தனைத்தும் நமக்குண்டு பாரீர்!- இங்கு
சகலருக்கும் சமஉரிமை தாரீர்!  

சொத்தனைய பண்பாடு வித்தைதொழில்  விருத்தி செய்து 
வித்துக்களே   விழிமலர்த்தி வாரீர்!-இந்த
வையகத்தை  வழிநடத்தி வாழ்வீர்!


***********************************************************************************************************
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →