விபரம் தெரிந்து
விளையாடும்போதெல்லாம்
வீரத்துக்கு
உன்னைதான்நினைப்பேன் !
எதிரிகளை
எப்படி கையாள்வது என்று
உன் யுக்தி கண்டு
ஊரெங்கும் சொல்லுவேன்!
தங்க இடமின்றி
தடுமாறியதலைமுறைக்கே
தலைவன் நீயென
தற்பெருமை கொள்ளுவேன்!
உன் எல்லாச்செயலிலும்
நியாயம் கண்டுபிடித்து
உனக்கே சொன்னால்
மகிழ்வாய் என்றெண்ணுவேன்!
நீ செய்தது
தவறாகவே இருந்தாலும்
செய்தது நீ என்பதால்
சரியென்று வாதிடுவேன்.
துன்பியல் சம்பவமென்று
துணிவுடன் கூறியதற்கு
என்ன ஒரு தமிழ் வார்த்தை
என்று எக்காளம் பேசிடுவேன்!
எப்படி ஊடுருவினாய்
அண்ணனே!
எல்லா இதயங்களிலும்
எந்தவிதச் சிரமமுமின்றி!?
நீ இறந்துவிட்டாய்
என்று வரும்
ஏராள வதந்திகளில்
இதுவும் ஒன்றாய் இருக்காதா?
உன்னை
நாங்கள் எங்கள்
இயலாமையால்
கொன்றுவிட்டோம்!
எங்களை
நாங்களே
எதிர்க்காமல்
தின்றுவிட்டோம்.
கையாலாகாத அயோக்கியன்
கவிதை எழுதுகிறேன்.
கண்ணீர் என்னமோ
கொட்டிக்கொண்டுதானிருக்கிறது!