வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் 1

29 Aug 2012 · சுரேகா சுந்தர்




சென்னை வலைப்பதிவர் திருவிழா இனிதே நிறைவுற்றிருக்கிறது. அதனை திறம்பட நடத்தி , வெற்றிகண்டிருக்கிற அத்துனை உள்ளங்களுக்கும் நம் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்வு பதிவூடகம் கொஞ்சம் மேலதான்  (க்ளிக்கிப் பாருங்கள்...காரணம் தெரியும்..) என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது.

     பதிவர் திருவிழா, ஒரு குடும்ப விழாவின் நேர்த்தியோடு நடந்தது.

ஒரு பாடலாசிரியர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்.
ஒரு மூத்த புலவர் வழிநடத்துகிறார்
ஒரு மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒத்துழைத்து, ஒருங்கிணைக்கிறார்.
சில கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்கள் நிகழ்ச்சி அமைப்பின் முக்கியப்பங்கு வகிக்கின்றனர்.
ஒரு மென்பொருள் நிறுவன அதிபர் வந்தோரை வரவேற்கிறார்.
ஒரு பெண் கவிஞர் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உறுதுணையாக இருக்கிறார்.
ஒரு கணக்காளர் தொடர்புகளை வலுப்படுத்துகிறார். சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்கிறார்.
ஒரு தனியார் நிறுவன அதிகாரி மேடையைப் பார்த்துக்கொள்கிறார்.
ஒரு திரைப்பட இயக்குநர் , சகஜமாக பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார்.
ஒரு ஒளிப்பதிவாளர் , இயல்பாக எல்லோரிடமும் பழகி, மேடையை அலங்கரிக்கிறார்.
ஒரு பதிப்பாளர், விளம்பரப்பட இயக்குநர், எழுத்தாளர் ஆகியோர் மிகச் சாதரணர்களாக அரங்கில் வந்து அமர்ந்திருக்கிறார்கள்.
ஒரு புத்தக விற்பனையாளர் நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக இருக்கிறார்.
ஒரு மருத்துவர் சிறப்பாகக் கவிதை பாடுகிறார்.
ஒரு மனிதவளப் பயிற்சியாளர் நிகழ்ச்சியைத் தொகுக்கிறார்.
ஒரு மூத்த கணக்காளர், கவிதை வாசிக்கிறார்.
ஒரு புகைப்படக்கலைஞர் புன்னகையுடன் உபசரிக்கிறார்.
ஒரு உணவக நிறுவனர் உணவு ஏற்பாடு செய்கிறார்.
ஒரு மேலாண் அதிகாரி இருக்கை எடுத்துப்போடுகிறார்.
ஒரு மென்பொருள் வித்தகர் உணவு பரிமாறுகிறார்.
ஒரு கல்லூரிப்பேராசிரியை கவிதை வழங்குகிறார்.
ஒரு கதைசொல்லும் பாட்டி பாராட்டுப்பெறுகிறார்.
ஒரு முதுபெரும் எழுத்தாளர் கௌரவிக்கப்படுகிறார்.
ஒரு போக்குவரத்து நிறுவன நிர்வாகி நன்றி கூறுகிறார்.

     இது, ஒரு ஒற்றுமையான குடும்பத்தில் மட்டும்தான் நடக்கும். அப்பா,அண்ணன், தம்பிகள், மாமன்,மச்சான் என்று வெவ்வேறு பதவிகளில் இருந்தாலும் ஈகோ துறந்து, அனைவரும் இறங்கி வேலைபார்ப்பார்கள். அதுவும் இப்போது மறைந்துவிட்டது. அனைத்தையும் ஒரு கேட்டரிங் கம்பெனியிடம் கொடுத்துவிட்டு ஜாலியாக வந்துசெல்கிறார்கள். ஆனால், இந்தப்பதிவர் சந்திப்புத் திருவிழா மிகவும் நேர்த்தியாக, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் தன் பங்களிப்பை கொஞ்சம்கூட ஈகோ இன்றி தந்ததுதான் இந்த நிகழ்வின் மிகப்பெரிய வெற்றி என்பேன்.

சரி.. எல்லோரும் ஒன்று கூடிவிட்டோம். நன்றாக விழா நடத்திவிட்டோம். எல்லோரையும் அறிமுகப்படுத்திவிட்டோம். மீண்டும் அடுத்த ஆண்டும் விழா நடத்துவோம். அதிலும் கவிதைகளை அரங்கேற்றுவோம். அற்புதமாகக் கொண்டாடுவோம். எல்லாம் சரிதான்.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சொன்னதுபோல், பதிவூடகம் மட்டுமன்றி இன்னும் பல ஊடகங்கள் நம்மைப் பார்த்துக்கொண்டுள்ளார்கள். நம் போக்கு எப்படி இருக்கிறது என்று நாடிபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக மட்டுமன்றி, இந்தச் சமூகத்துக்கோ, குறைந்தபட்சம் நமக்கோ என்ன செய்யப்போகிறோம்? செய்துகொள்ளப்போகிறோம்.?

     நாம் அனைவரும் குறைந்தபட்ச அறிமுகம் ஆகியிருக்கிறோம். என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்று எல்லோரையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருக்கிறோம். எழுதும் கருத்தை வைத்து, ஆட்களை நாமே கற்பனை செய்துவிட்டு, எதிரில் பார்த்தவுடன், வியந்திருக்கிறோம். ஏமாந்திருக்கிறோம். சிரித்திருக்கிறோம். ( எடுத்துக்காட்டு – சேட்டைக்காரனைப் பார்த்துவிட்டு மெர்சலாகியவர்கள் . சேட்டை நாஞ்சில் வேணு அண்ணனை நான் கற்பனையே செய்துவைக்காததால், அவரை அப்படியே ரசித்தேன்)

     இவையெல்லாம் மீறி, இந்த அறிமுகங்களும், இந்தக் குழு நடவடிக்கைகளும் என்ன செய்யப்போகிறது? என்று கொஞ்சம் யோசிப்பது அவசியம் என்று எண்ணுகிறேன். ஏனெனில், பதிவர் சமூகம் மட்டும்தான், வெவ்வேறு தளத்தில், வேலையிலும், திறமையிலும் பல நிலைகளில் உள்ளவர்கள் வலைப்பூ என்ற ஒற்றை ரசனையில் ஒன்றுபட்டு, நட்புகளாய், உறவுகளாய் மாறி நின்று, ஒரு வலிமையான அமைப்பாக உருவாகிக்கொண்டிருக்கிறது.


 இவற்றைப் பயன்படுத்தி நாம் என்னன்ன சாதிக்கலாம்..?

     அலசுவோம் வாருங்கள்….           (தொடரும்)





நிகழ்வைப்பற்றி நிறைய பேர் மிகவும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.
அவைகளில் சில...


http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_27.html

http://www.valaimanai.in/2012/08/blog-post.html

http://www.rahimgazzali.com/2012/08/blogger-meeting_27.html

http://kudanthaiyur.blogspot.in/2012/08/blog-post_27.html

http://www.tamilvaasi.com/2012/08/tamil-bloggers-meet-2012-at-chennai.html

                  


← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →