காட்சியமைப்புகளில் ஜப்பானியத்திரைப்படங்களையும், ஜெர்மானியப்படங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி, ஒரு உள்ளூர் திரைக்கதையில் மக்களை அமரவைப்பதில் மிஷ்கின் வெற்றி கண்டிருக்கிறார்.
சேரனொரு
சிறந்த காவலர்!
புலனாய்வில்
தேர்ந்த ஆர்வலர்!
பொது இடங்களில்
வெட்டப்பட்டகைகள் கிடக்க,
இவ்வழக்கை எடுத்து ஆய்கிறார்!
காணாமல் போன தன்
தங்கையையும் தேடி நோகிறார்!
கைகள் கிடந்த வழக்கில்
கட்டம் கட்டமாய் நகர
பொய்கள் கூறும் போலீஸை
புலனாய்ந்து இவரே பகர
துணிக்கடை அதிபரின்
துச்சாதன லீலை விளங்க
அதனால் பாதித்த
மருத்துவர் குடும்பமே நொறுங்க,
அவர்களின் தற்கொலையே
அடிநாதமாய்த் துலங்க,
சேரனுக்கு தங்கையின்
இருப்பிடம் தெரிய
குற்றத்தின் கொடுமையான
காரணமும் புரிய
நேர்மையான காவலனும்,
நீதிபெறா கொலையாளியும்
நின்றாடும் சதிராட்டத்தில்
இரத்தம் பெய்கிறது.
தீமை கண்டு கொதித்தெழும்
யுத்தம் செய்கிறது!!
சேரனுக்கு ஒரு அமர்த்தலான ஆக்ஷன் படம்.!
அதுவும் அந்த இடைவேளை சண்டைக்காட்சியில் விசில் பறக்கிறது!
இசையும், ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. கே, சத்யா இருவருமே மிஷ்கினின் தேர்வில் தவறில்லை என்று நிரூபித்திருக்கிறார்கள்.
நம்மைப்பார்த்து ஜெயப்பிரகாஷ் கூறும் வசனங்கள் உண்மை ஊசியாய்க் குத்துவதை தவிர்க்கமுடியாது. போலீஸாக வரும் கண்ணும்,கண்ணும் இயக்குநர் மாரிமுத்து மிக நன்றாக நடித்திருக்கிறார். கொலைசெய்யபப்ட்டவனை லாட்ஜில் கண்டவுடன் சேரன் ஓட ஆரம்பிப்பது, போலீஸ் ஸ்டேஷனில் ப்ளாஷ்பேக் ஆரம்பித்து, வாசலுக்குச் சென்றுவிட்டு, அப்படியே டீ வாங்கிவரும் காவலரில் முடிவது என சின்னச்சின்ன காட்சிகள் கவனம் கவர்கின்றன.
காட்சியமைப்புகளில், மிஷ்கின் டச் இருந்தாலும், வித்தியாசமான கோணம் என்ற பெயரில் அதிகமாக காலைமட்டும் காட்டும் காட்சிகள் வருவது அயர்ச்சி ஏற்படுகிறது. அதேபோல் சேரனை ஒரு சில இடங்களில் தலை குனிந்து நிற்க வைத்திருப்பது மிஷ்கினின் அடிப்படைக்காட்சியாக எண்ண வைக்கிறது. முதல் பாதியில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வைத் தவிர்த்திருக்கலாம். இவையெல்லாம் மீறி, அந்த கிளைமாக்ஸ் காட்சிகளிலும், கொலைகாரர்கள் யார் என்பதிலும் நல்ல வித்யாசம் காட்டி, காமெடி, டூயட்,காதல், சென்ட்டிமெண்ட் என்று எந்த மாவையும் தொடாமல், புதிய விதத்தில் படம் கொடுத்ததற்காகவே இந்தப்படத்தை இன்னொருமுறை பார்க்கலாம்.
