துப்பாக்கி

15 Nov 2012 · சுரேகா சுந்தர்








       தீபாவளி வெளியீடு என்றவுடன், கிராமத்தில்தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்தாயிற்று..!! அங்குதான், இரசிகர்களின் உண்மையான உணர்வுகள் தெரியவரும்.

     அதேபோல் தியேட்டருக்குள் நுழையும்போதே ஆர்ப்பாட்டம்..!! விஜயின் அறிமுகக்காட்சியில் ஐந்து நிமிடங்கள் அனைத்து இரசிகர்களும் ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுத்தார்கள்.
    
    முழுக்க முழுக்க முருகதாஸ் படமாக எடுக்க , விஜய் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரிய ஆரம்பித்தது. மிகவும் அடக்கி வாசித்து, தனக்கான இடத்தை மிகவும் அழுத்த்தமாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

       சமூகத்தில் சாதாரண மனிதர்களாக இருப்பவர்கள், தீவிரவாதிகளின் மூளைச் சலவையால், மனம் மாறி, அவர்கள் சொல்வதைச் செய்யும்படி தயார் செய்யப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் சமூகத்தில், அவரவர் வேலைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தலைவனிடமிருந்து கட்டளை வரும்போது (குண்டு வைப்பது) அதை நிறைவேற்றுகிறார்கள். இவர்களுக்கு SLEEPER CELLS என்று பெயர்.!!

   அந்தவகை மனிதர்களின் வேரைக் கண்டுபிடித்து, அதனை அழிப்பதுதான் படத்தின் மையக் கரு! அதாவது, யார் கட்டளை இடுகிறார்களோ அவர்களை அழித்துவிட்டால், தனக்கான கட்டளைக்காக காத்திருந்தே, silent cell கள், தங்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப்போய்விடுவார்கள் என்பதுதான் நோக்கம்..!!

    அப்படி ஒரு Sleeper Cell மனிதன் தன் வேலையை செய்துவிட்டுச் செல்லும்போது, எதேச்சையாக, இராணுவத்திலிருந்து, மும்பைக்கு விடுமுறைக்கு வந்த விஜய், தன் போலீஸ் நண்பன் சத்யனுடன் பஸ்ஸில் செல்ல நேர்கிறது. அங்கு ஒருவரது பர்ஸ் அடிக்கப்பட, அனைவரையும் சோதிக்க விழைகிறார்கள். இதில் அச்சப்பட்ட அந்த Sleeper Cell, ஓட ஆரம்பிக்க, அவனை விஜய் விரட்டிப்பிடிக்க,  அப்போது பஸ்ஸில் குண்டு வெடிக்கிறது. அதற்குள் அவனும் தப்ப முயற்சித்து ஓட, விஜய் துரத்த ஆரம்பிக்கிறார். படம் தடதடத்து வேகமெடுக்கும் இடம் இதுதான்..!!

     அவனைப் பிடித்து அவர் போலீஸில் கொடுக்க, அவன் அடுத்த நாளே தப்பிவிக்கப் படுகிறான். அதனை சத்யன் விஜயிடம் மிகவும் பதட்டத்துடன் சொல்ல, மிகவும் நிதானமாக விஜய், தனது வீட்டின் மாடியறைக்கு வருகிறார். அங்கு அந்த ஆள் அவராலேயே கட்டிவைக்கப்பட்டிருக்கிறான்.
அங்கிருந்து, பலப்பல சாகசங்கள்.. அத்தனையும் வீரமும், விவேகமும் சரிசமமாய்க் கலந்தவை..!! தனது ஆழ்ந்த புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு கண்ணியாகக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் கட்டளையிடும் தலைவனை வெளிவர வைத்து, பல்வேறு பூனை, எலி விளையாட்டுகளுக்குப் பிறகு, ‘சஸ்பென்ஸுலேயே சாவுடா!’ என்று சொல்லி அவனைச் சுட்டுத்தள்ளுகிறார்.

     படம் முழுக்க, சாகசங்கள், அதுவும் இயக்குநர் முருகதாஸுக்கு மூளையில்தான் உடலே செய்திருக்கிறார்கள் என்பதைப்போல் விளையாடியிருக்கிறார் மனிதர்..!! (நண்பர் என்பதையும் மீறி உண்மையிலேயே நிறைய நுணுக்கமாகச் சிந்தித்திருப்பதால், இந்தப் பாராட்டு!)

     அதுவும் 12 பேர் பிரித்து ஒவ்வொருவராகப் பின் தொடரும் இடங்கள், சாத்தியங்களை மீறி அற்புதமான திரைக்கதையால் நம்பவைத்துவிடுகிறது. அதுவும் அந்த ஒரே வினாடியில் அனைவரும் வெவ்வேறு இடங்களில் சுடும்போது, ஒரு ’வாவ்’ நம் வாய் வழியே இயல்பாக வந்துசெல்கிறது. அந்த நேரத்தில், துப்பாக்கிச் சத்தத்தை விட விசில் சத்தம் அதிகம் கேட்டது.

  சந்தோஷ் சிவன் இந்தப்படத்தின் மூன்றாவது ஹீரோ எனும் அளவுக்கு கலக்கியிருக்கிறார். சேஸிங் காட்சிகளாகட்டும், பாடல்களாகட்டும், விஜயை சமீபகாலத்தில் இவ்வளவு அழகாக யாரும் காட்டவில்லை என்று நினைக்கிறேன். சூரியனுக்கு எதற்கு டார்ச்…?

  விஜய்…! அந்த அழுத்தமும், லேசான குறும்பும் இப்போதுதான் சரியான கலவையாய் வெளிவந்திருக்கிறது. தன் தங்கையிடம் மிகச்சாதாரணமாய் ‘உயிர் போயிருக்கும்’ என்று சொல்லும்போது – இராணுவ வீரனின் உயிர் பற்றிய எண்ணம் அப்படியே பார்க்கமுடிகிறது. அவரது அழுத்தமான பார்வையையும், இரண்டு வார்த்தை பதில்களையும் பார்த்து, இரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் கும்மாளமிடுகிறார்கள். அதுவும் இடைவேளையில் ‘ஐ அம் வெய்ட்டிங்’ என்று சொன்னதற்கு.. இரண்டு நிமிடம் தொடர்ந்து கூச்சலும், விசிலும் பறந்தது. படம் முடியும்போது, ‘ இதுமாதிரியே நடி தலைவா! ’ என்று உளம் நிறைந்து கோரிக்கை வைக்கிறார்கள். 

      கண்ணுக்கு மை அழகு.! மை என்றால் காஜல்..!!  கண்ணுக்கு அழகாக வருகிறார். பேசுகிறார். ஆடுகிறார். நிறைய காஃபி சாப்பிடுகிறார். ஆனால், அவர்தான் கதையின் முக்கிய ஓட்டத்தை மாற்றுகிறார் என்பது சிறப்பு..!! அவர் சத்யனின் பைக் சாவியை எடுத்துச் செல்லாவிட்டால், விஜய் பஸ்ஸில் செல்லவேண்டிய அவசியமே இருந்திருக்காது.




ஏ.ஆர்.முருகதாஸ்… ரமணாவிலிருந்து எனது உள்ளம் கவர்ந்தவர்..விஜயகாந்துக்கு ஒரு வாழ்நாள் சாதனைப் படத்தை அளித்தவர். விஜய்க்கும் அது பொருந்தும்படிச் செய்திருக்கிறார். படம் பார்த்து முடித்தவுடன் குறுஞ்செய்தியில் வாழ்த்திவிட்டேன். அன்பான நண்பர்!, பணிவான மனிதர்..!  நிதானமாக அடி எடுத்துவைக்கிறார். அடுத்த பிரம்மாண்டத்துக்குத் தகுதியானவர் என்று நிரூபித்திருக்கிறார்.

    துப்பாக்கி என்ற பெயர் மட்டுமல்ல..!! சிறப்பான திரைக்கதை, வேகம் நிறை காட்சிகள் மூலம் தீபாவளி ரிலீஸுக்குத் தகுதியான படமாய் அமைந்துவிட்டது.

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →