8ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்துவிட்டு... 9ம் வகுப்பில் தனியார் பள்ளியில் சேர்ந்த அந்த இரண்டு பெண்களும் தாங்கள் அரசுப்பள்ளியிலிருந்து வருகிறோம் என்பதால் ஏற்பட்ட அவமானத்துடன் சென்ற இடம்..
தங்களது அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீடு..! அவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைச் சொல்லி..
நம்ம பள்ளியோடம்னா ரொம்ப பெருமையா நெனச்சுக்கிட்டு போனோம் சார்! ஆனா கவருமெண்ட் பள்ளியோடம்னா அவ்ளோ மட்டமா? ன்னு கேட்டு அழுக ஆரம்பித்துவிட்டார்கள்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட.. அந்த தலைமை ஆசிரியர்..
நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு போங்க! நான் பாத்துக்குறேன் என்றார்.
அடுத்தநாள் நேராக அந்தத் தனியார் பள்ளிக்குச்சென்றார்.
தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று ..
'நான் ஒரு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்..தயவு செஞ்சு 9ம் வகுப்புக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு எடுக்கும் டீச்சர்களை வரச்சொல்லுங்க சார்..ஒரு பிரச்னை இருக்கு !' என்றார்.
அந்தத் தலைமை ஆசிரியர் கொஞ்சம் விவாதிக்க நினைத்தாலும்....என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் அவர்களை அழைத்துவரச்செய்தார்.
அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரம்பித்தார்.
மேடம்..! நீங்க அந்த ரெண்டு பிள்ளைங்களையும் அரசுப்பள்ளில படிச்சதுக்காக அவமானப்படுத்தினீங்களாம். அரசுப்பள்ளிகளைப்பத்தி நீங்க என்ன அபிப்ராயம் வச்சிருக்கீங்க? அதுவும் எங்க ஊரில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளி பத்தி என்ன அபிப்பிராயம் வச்சிருக்கீங்க?
ஆசிரியையகள்...ஏதோ விவகாரம் இருக்கிறது என்று உணர்ந்தாலும்..தன் தவறை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய்...
எல்லா அரசுப்பள்ளிகளுமே மோசம்தான்..ஆசிரியர்கள் வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்குறதில்லை.! பிள்ளைகளின் எதிர்காலத்தில் அவுங்களுக்கு அக்கறையே இல்லை ! எங்களுக்குத்தெரிஞ்சவரைக்கும் எந்த அரசுப்பள்ளியில் படிச்ச பிள்ளையும் எங்க ஸ்கூல்ல வந்து பிக்கப் பண்ணினதே இல்லை... அதுனால எங்க தனிப்பட்ட தேர்ச்சி விகிதம் காட்ட முடியாம போய்டுது...! என்றனர்.
அந்தப்பிள்ளைகளை எந்தப்பாடத்தில் வேணும்னாலும் நீங்க சோதிச்சுக்குங்க! அவுங்க ஜெயிப்பாங்க! ஏன்னா நான் அந்தப்பள்ளிக்கூடத்தை...ஜெயிக்கிற பிள்ளைங்களை உருவாக்குறதாத்தான் நடத்திக்கிட்டிருக்கேன். வேணும்னா ஒரு சவால் விடுறேன். இந்த வருஷம்னு இல்லை. 10வது, 12வது பொதுத்தேர்விலயும் உங்க பள்ளியின் முதல் ரெண்டு இடங்களை அவங்கதான் எடுப்பாங்க! முடிஞ்சா நியாயமா க்ளாஸ் எடுத்துப்பாருங்க! என்றார்.
இல்லை சார் ! நாங்க அதுக்காகச் சொல்ல வரலை!
எதுக்காகச்சொல்லியிருந்தாலும் சரி மேடம்! நீங்கல்லாம் கண்டிப்பா தனியார் பள்ளில படிச்சுட்டு வந்திருக்க வாய்ப்பே இல்லை. அரசுப்பள்ளில படிச்சிருக்கணும். அப்படிப் படிச்சு முன்னேறி..இப்ப ஒரு தனியார் பள்ளில டீச்சரா இருக்கீங்கங்கிற காரணத்துக்காக....அவுங்களை அவமானப்படுத்துறதை நிறுத்துங்க! எல்லாரையும் சமமா பாவிச்சு..சொல்லிக்குடுங்க! யாரு ஜெயிக்கிறாங்கன்னு பாப்போம்..! என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் அந்த தலைமை ஆசிரியர்.
அதேபோல்...10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் அந்த இரு மாணவிகளும்தான் முதல் இரண்டு இடங்களைப்பிடித்தார்கள்.
சத்தமில்லாமல் இந்தச்சாதனையைச் செய்துவிட்டு இன்னும் இது போன்ற அற்புத மாணவர்களை அனுப்பிக்கொண்டே பள்ளியை முன்னேற்ற சிந்தித்துக்கொண்டிருக்கிறார் அந்தத் தலைமை ஆசிரியர்..
திருச்சி மாவட்டம்...மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆ. டேனியல் ஜான் கென்னடிதான் அவர்!
அவர் பள்ளிக்குச் செய்திருக்கும் சாதனைகள்! ....
(தொடரும்..)