சாராள் இல்லம்

19 Feb 2010 · சுரேகா சுந்தர்

அன்று குழந்தைகள் தினம்..! நண்பர் ஒருவர் அழைப்பு விடுத்தார்.

புதுக்கோட்டையில் இருக்கீங்களா?

ஆமாம்!

அப்ப மாலை ஒரு நிகழ்ச்சி இருக்கு வரமுடியுமா? பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஒரு தன்னம்பிக்கை நிகழ்ச்சி வழங்கணும்!

சரி! பண்ணிட்டா போச்சு!

*************************************************

தினசரி அப்பா, அம்மாவுக்கிடையில் சண்டை! அதைப்பார்த்தே வளர்ந்தார்கள் அந்த ஐந்து குழந்தைகளும்! ஒரு நாள் சண்டை முற்றி, இனிமேல் உன்னோடு வாழ்வதில்லை என்று முடிவெடுத்து அவர்கள் விவாகரத்தும் செய்துகொண்டார்கள். அப்பாவிடம் மூன்று குழந்தைகள், அம்மாவிடம் இரண்டு குழந்தைகள் என குழந்தைகள் பிரிக்கப்பட...

அம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென்று தன்னிடம் இருக்கும் இரண்டு ஆண்பிள்ளைகளையும் ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு கண்காணாமல் சென்றுவிட்டார். அந்த இருவரில் மூத்தவனுக்கு வயது நான்கு, இளையவனுக்கு வயது ஒன்று! தன்னுடன் இருக்கும் ஒரே சொந்தம் தம்பிதானென்று இவனுக்குத்தெரியும். ஆனால் தம்பிக்கு அதுவும் தெரியாது. அந்தச்சிறு பிள்ளையை எப்படித்தூக்குவது என்றுகூடத்தெரியாமல், எல்லா சொந்தங்களும் இருந்தும், அனாதை வாழ்வை ஏற்கத்தொடங்கியிருக்கிறார்கள் அந்தச்சிறுவர்கள்.

எப்படியோ பாடுபட்டு வளர்ந்து, ஒரு நிலையில் தான் தம்பியை நன்கு வளர்க்க வேண்டுமென்று நினைத்து வேலைக்குச்செல்கிறான் மூத்தவன். அது ஒரு எடுபிடி வேலை! ஒரு நாள் அந்த ஊர் தியேட்டரில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள் என்று தகவல் வர, அங்கிருந்த போலீஸ்காரர்களும், தியேட்டர் முதலாளியும் 'அனாதைதானே செத்தாலும் குற்றமில்லை' என்று வெடிகுண்டு இருப்பதைக்கண்டுபிடிக்க இவனைப்பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் 'தீ' என்று எழுதியிருக்கும் வாளியில் வெடிகுண்டு உண்மையிலேயே இருந்திருக்கிறது. அதை இவன் கண்டுபிடித்துத் தூக்கிப்போடும்போது வெடித்து, வீசப்பட்டு நினைவிழந்து போயிருக்கிறான்.

இவன் நிலை பார்த்த ஒரு பாட்டி இவனைத்தூக்கிச்சென்று சிகிச்சை அளித்து, இவன் எழும்போது மூன்று மாதங்கள் ஓடிப்போய்விட்டன. தான் வளர்த்த தம்பி எங்கிருக்கிறான் என்பதும் தெரியாமல், சூனியமான வாழ்க்கையில் சிரமப்பட்டு வேலைகள் பார்த்து, பல ஆண்டுகள் கழித்து, தன் குடும்பத்தினர் அப்பா, அம்மா, அண்ணன்கள், தம்பி என ஒவ்வொருவராய்க் கண்டுபிடித்திருக்கிறான். அவர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கும்போது, இவன் மட்டும் அன்றாடங்காய்ச்சியாய் ஆகிப்போனான். இவனைப்பார்த்த மகிழ்ச்சியில், குடும்பத்தினர் சேர்ந்து இருக்க வற்புறுத்தியபோது சொன்னான்!

'எல்லாம் இருந்த என்னையே அனாதையாக்கி அழகுபாத்தீங்களே! யாருமே இல்லாத எத்தனையோ பிள்ளைங்க உண்மையிலேயே எவ்வளவு கதறிக்கிட்டிருக்கும்! நான் அவுங்களுக்கு சொந்தமாப் போறேன். என்னைய விட்டுருங்க! இந்த எண்ணம் வரவைச்ச கடவுளுக்கும், அனாதை இல்லத்தில் சேத்த அம்மாவுக்கும் நன்றி!' என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

***************************************************************************

அன்று மாலை நாங்கள் சென்ற இடம் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் அரசு ஐடிஐ இருக்கும் பகுதிக்கு எதிரில் உள்ள ஒரு வாடகை வீடு! அதன் பெயர் 'சாராள் இல்லம்'.

அதனை நிர்வகிப்பவர் திரு.டைசன்! அவர்தான் மேலே சொன்ன வாழ்க்கைக்கு உரியவர்!

மொத்தம் ஐம்பத்திரண்டு குழந்தைகள்! ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதை! நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் எண்ணவைத்த கொடுமையான வாழ்க்கைகள்!

டைசனும், அவர் மனைவி -அவரைப்போலவே வாழ்வில் சிரமப்பட்ட ஈழத்துப்பெண் - வளர்மதியும் சேர்ந்து இந்த இல்லத்தை நடத்துகிறார்கள். குழந்தைகள் பல்வேறு வகுப்புகளில், பல்வேறு அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தன் பிள்ளைகளாகவே வளர்க்கிறார்கள் இந்தத்தம்பதியினர்! பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிப்போய் இருக்கிறார்கள். வருமானம் எதுவும் கிடையாது. நன்கொடைகள் திரட்டவும் வழியில்லை. தினம் தினம் யாராவது தரும் சிறு தொகைகளை வைத்து மிகமிகச்சிரமப்பட்டு ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம், பேனாக்கள் வாங்கக்கூட கடன் சொல்லித்தான் ஓட்டவேண்டியிருக்கிறது என்று கண்ணீர் உகுக்கிறார். முகூர்த்த நாட்களில் பல இடங்களிலிருந்து உணவுகள் அளவுக்கு மிஞ்சி வந்துவிடுகின்றன. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று மறுகுகிறார். அவருக்கு என்னால் இயன்ற உதவிகளைச்செய்துவருகிறேன்.
நான் சொன்னவுடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிப்பொறுப்பாளர் திரு.நடராஜன் (சுப்ரா என அறியப்பட்டவர்) அவர்கள் உதவிகள் செய்திருக்கிறார்.

நம் பதிவர் சமூகத்தால் முடியாதது எதுவும் இல்லை.என் நோக்கமெல்லாம்...நாம் ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவேண்டும். நம்மால் ஆன கல்வி, உணவு , உடை உதவிகளைச்செய்யவேண்டும். இது நம் நிலைக்கும் மிகச்சிறு தொகையாகத்தான் இருக்கும். இதை நாம் கூட்டாகவும் செய்யலாம். இரண்டு,மூன்று பதிவர்கள் சேர்ந்து ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவை கொடுத்துவிட்டால், ஒரு குழந்தை தன் வாழ்வை உங்கள் பெயரால் வாழும். வாருங்கள் வடம் பிடிப்போம்.!

மற்ற விபரங்களுக்கு...

97894 97531 - சுரேகா

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →