இதோ இந்த விஷயத்தை எழுதிடலாம்னு யோசிச்சு திரும்பிப்பாத்தா ரொம்ப நாளா ஆயிருக்கு!
மனசுல ஒரு விஷயம் தோணும்போதோ, ஒரு நிகழ்வு நம்மை எழுதத்தூண்டும்போதோ உடனே பதிவா எழுதிடலாம். அப்படியும் சில
வேலைகள் நம்மை எழுத விடாமல் செய்துவிடுகின்றன.
அப்படித்தான், சென்றமாதம் முதல் , இந்த வாரம் வரை CRY (Child Rights and You) நடத்திய போட்டிக்காக , இருபது நிமிட ஆவணப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து, அதற்காக அலைந்து திரிந்து , காட்சிகள் சுட்டு, எடிட்டிங் முடித்து, அதை சமர்ப்பித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் இத்தனை நாள் ஓடியிருக்கிறது.
இதில் இன்னொரு சேதியும் இருக்கு! அந்தப்போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்த மத்த படங்கள் நம்ம படத்துக்கு போனா போகுதுன்னு விட்டுக்கொடுத்துட்டாங்களா, இல்லை அந்த குலோப்ஜாமூன் விளம்பரம் மாதிரி கலந்துக்கிட்டதே ரெண்டுபேரான்னு தெரியலை! நம்மை முதல் தகுதிக்கு தேர்வு பண்ணியிருக்காங்க!
அது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் செய்திருந்ததால், எனக்கே முழுத்திருப்தி இல்லை. தமிழ்ல இன்னும் ஆழமா செய்திருக்கலாமோன்னு தோணிச்சு!
இந்தியாவால் நமது குழந்தைகளுக்கு கல்வியளிக்க இயலுமா? ன்னுதான் கேள்வி.! நேரமிருந்திருந்தா பதிவில் ஒரு விவாதம் வச்சு முடிவெடுத்திருக் கலாம். நிறைய பேரை பேட்டியெடுத்து, குழந்தைகளின் தரத்தை சோதிச்சு, அவுங்க மனநிலையையும் கேட்டுக்கிட்டு , ஒரு முடிவுக்கு வந்து படத்தை எடுத்து முடிச்சோம்.
அதுக்கு, நீண்ட யோசனைக்குப்பிறகு ஒரு தலைப்பு வச்சேன். 'EDU-CAN-DIA' ங்கிறதுதான் அது.. ! வேற ஒண்ணும் இல்லை! தலைப்பிலேருந்தே மேட்டரை எடுத்து , முடிவு என்னங்கிறதையும் சூசகமா சொல்றமாதிரி இருக்கணும்னுதான் இப்படி வச்சது..!
தலைப்பு நடுவர்களுக்கு பிடிச்சுப்போச்சாம். (தலைப்புக்கும் அவுங்களுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்திருக்கும்போல! ) :)
இப்படியே இவ்வளவு நாள் ஓடிக்கிட்டிருக்கும்போதே,
மகனுக்கு பள்ளிக்கூடத்தில் மாறுவேடப்போட்டிக்கு சர்தார்ஜி வேடம்தான் போடணும்னு தங்கமணி அடம் பிடிச்சதால, ஒரு பியூட்டி பார்லரில் போய் நின்னா, சுத்தி சர்தார்ஜியா திரியுது...! இந்த வேஷம்தாங்க யாரும் போடமாட்டாங்க...- இது , கூட்டிச்செல்வதற்கு முன்னால்,தங்கமணி அடித்த டயலாக். நான் சொன்னேன். ' இதே டயலாக்கை இவ்வளவு அம்மாக்கள் சொல்லியிருப்பாங்க போல' :)
பைக்கில் போய்க்கிட்டிருக்கும்போது, எதிர் சாரியில் வந்த பஸ் ஒண்ணு மெதுவா வரும் லாரியை ஓவர் ட்டேக் செய்ய என் வழி முழுசையும் அடைச்சிக்கிட்டு வர, என்னால் இடது புறம் திடீர்ன்னு இறங்கமுடியாது. இரண்டடி பள்ளம்...! நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி இறங்கி நின்னுட்டேன். வேகமா வந்த பஸ் என்னை இடிப்பதுபோல் வந்து நிற்க, டிரைவர் அவருக்குத்தெரிந்த எல்லா தகாத வார்த்தைகளையும் பிரயோகிக்க, உன் ஓவர் டேக் ஆசைக்கு யார் உயிர் போனாலும் பரவாயில்லையா? ன்னு கேட்டு விட்டேன் ஒண்ணு செவுட்டுல! ஹைவே பேட்ரோலுக்கு தகவல் கொடுத்து , அவர்கள் டிரைவரை திட்டி அனுப்பும் வரை நான் வண்டியை நகர்த்தவில்லை! அன்னிக்கு நிம்மதியா தூங்கினேன்..! :)
முத்துக்குமரன் தீக்குளிப்பு, தமிழினத்தலைவரின் டகால்ட்டித்தனங்கள், மற்ற தலைவர்களின் டுபாக்கூர்த்தனங்கள், மத்திய அரசின் மரண மௌனம், ஒற்றைக்குரலெடுத்து ஓங்கிக்கத்த முடியாத நாம் என்று உலகம் அமைதிக்காக கதறிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் சூத்திரதாரியாக இருக்கும் ஆளைக்கொல்லப்போகும் தோட்டாவாகவாவது பிறந்திருக்கலாம்...! :(