அறந்தாங்கி

21 Feb 2010 · சுரேகா சுந்தர்

என் பட்டியலில் உள்ள ஊர்களைப்பற்றி நட்சத்திர வாரம் தாண்டியும் எழுதலாம் போலிருக்கிறது. :)

என் வாழ்வில் கல்லூரி ஆண்டுகளைக்கழித்த ஊர். அறந்தாங்கி! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம்! (இந்த ஊர் மட்டும் நான் போகும்போதே தாலுக்கா) சிறிதாகத்தெரியும் பெரிய ஊர்!

காரைக்குடியிலிருந்து ஒரு சாலையும், புதுக்கோட்டையிலிருந்து மற்றொன்றும் வந்து செக்போஸ்டில் சந்தித்து வி.எஸ் தியேட்டர் , எம் ஜி ஆர் சிலை வழியாக ஊருக்குள் போகும்.
அடுத்த சாலை ஆவுடையார்கோவிலிலிருந்து வந்து கோட்டை வழியாக எம் ஜி ஆர் சிலை வரும். அது இரண்டும் சேர்ந்து கட்டுமாவடியிலிருந்து வரும் சாலையோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் பஸ்ஸ்டாண்ட் நோக்கி பயணிக்கும். மற்றபடி எதிர்த்திசையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலைகளும் பேருந்து நிலையத்தில் முட்டும்.

நான் இருந்தது கோட்டைப்பகுதி! அந்தக்கோட்டையின் ஒரு பகுதியில் உயரத்தில் ஒரே ஒரு சிற்பம் இருக்கும். அதுவும் படு அடல்ட்ஸ் ஒன்லி ஐட்டம்! வெளியூரிலிருந்து நம்மைப்பார்க்க வரும் நண்பர்களிடத்தில் அதைக்காட்டி டெம்ப்ட் ஆக்குவதில் அலாதி மகிழ்ச்சி!

வாணி தியேட்டர் - காலைக்காட்சிகளும், டிவி டெக்கெடுத்துப்பார்த்த படங்களும், நண்பர்களின் காதல்களும், பல்வேறு மோதல்களும் என சூப்பராகப்போன வாழ்க்கை அது! வாழ்க்கை பற்றிய பயத்துடன் படித்ததால், ஆழமாக ஆட்டம் போட முடியவில்லை. ஆனாலும் எங்கள் ரூமில் இரண்டு பேருக்கு வாடகை கொடுத்துவிட்டு தினமும் பத்து பேர் நெருக்கியடித்துத்தூங்கிய சுகம்...ஆஹா..!

பாண்டியன், முருகேஷ்குமார், அப்துல்லா, கருணாநிதி, பார்த்திபன், எழிலரசு, ரெங்கராஜன்,பேரின்பநாதன்...என ஒரு ஜமா! இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியலை! எழிலரசு மட்டும் இன்னும் தொடர்பில் இருக்கிறான்.

எங்களுக்கு ஒரு சீனியர் இருந்தார். அமைதியாக இருப்பார். தஞ்சாவூர்க்காரர் என்பார்கள். கவிதைகளெல்லாம் எழுதுவார். ராகிங் பண்ணமாட்டார். ஜூனியர்களைப்பார்த்து சினேகமாகச்சிரிப்பார்.
பல ஆண்டுகளுக்குப்பிறகு அவரை ஊடகத்திலும், அவர் கவிதைகளைப்பாடலாகவும் பார்த்தேன். அவர்....கவிஞர் யுகபாரதி!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →