அவனில்லாத வேளைகளில் மின்விளக்கே சூரியன் மின்சாரம் இல்லையென்றால் மெழுகுவர்த்தி சூரியன் நெருப்பொளியும் இல்லையென்றால் சந்திரனே சூரியன் அன்று அமாவாசையென்றால் இருள்தானே நிரந்தரம்! இதுதான் நமதுவாழ்வும்...
துன்பம்தான் நிரந்தரம்! இன்பம் நிரப்பிக்கொள்ளத்தான் எத்தனை எத்தனை உறவுகள் நட்பு, பெற்றோர்,துணைக்கெல்லாம் நான்கே பெயர்தான் உள்ளது! உறவினம் மட்டும் உங்களுக்கு எத்தனை பெயரில் உள்ளது?
அன்பான அண்ணன், தம்பி ஆசையான அக்காள் தங்கை மானம் காக்கும் மாமன்,மச்சான் ஒத்துப்போகும் ஓரகத்தி சொன்னது கேட்கும் கொழுந்தன் சந்தோஷம் தரும் சகலை பேரன்பு கொண்ட பெரியப்பா,பெரியம்மா சீராட்டும் சித்தப்பா, சித்தி பாசம்காட்டும் பேரன் பேத்தி பக்குவம் காட்டும் மாமியார், மாமனார் அன்புக்கென்றே பிறந்த அண்ணி அதற்கும் மேல் அத்தான் என்று ஆயிரமாயிரம் உறவுகள் ! பட்டியலை நீட்டலாம் பகலவனின் கதிர்களாக..!
அண்ணன் தம்பியென்ற அற்புதம் தரும் சுகம் என்னவென்று கண்ட இராமனைக்கேளுங்கள்! இராமாயணமே சொல்லுவான். துன்பமான நேரத்தில் தூக்கிவிட்டு உதவிய பக்த நண்பர்களையே தம்பியாக்கிய அண்ணன் அவன்!
மாமனின் உறவை மகத்தானதாக்கியவன் மகாபாரதத்தின் மாமன் கண்ணன் ! அவன் சொன்ன போதனைதான் கீதையாய் தென்றல் வீசி மனம் மலர வைக்கிறது..!
புராணகாலம் வேண்டாமென்றால் இந்தக்காலம் வருகிறேன் !
தேசத்தில் பாசம் கொண்ட மாபெரும் காந்தியை தேசத் தந்தை என்கிறோம்!
நேசம் கொண்ட தலைவரை நேரு மாமா என்கிறோம்!
அறிவுரை சொன்ன கிழவியை அவ்வைப் பாட்டி என்கிறோம்!
அன்பே உருவான மாதரசியை அன்னை தெரசா என்கிறோம்!
அருள் போதிக்கும் போதகரை "அப்பா", "சகோதரன்" என்கிறோம்!
பணிவிடை செய்யும் தாதியரை சகோதரி என்கிறோம்
இதைப்படிக்கும் இந்நேரம் உங்கள் கண்களுக்குள் உறவுகளின் நற்செயல்கள் ஒவ்வொன்றாய் விரியட்டும்! கண நேரம் கண்மூடி கனமாகச் சிந்தியுங்கள்!
எத்தனை அற்புதத் தருணங்கள்!? திருவிழா திருமணம் காதுகுத்து வளைகாப்பு சடங்கு என்று..! உறவுகள் உங்களை உயிர்ப்பித்த நேரங்கள்!
உரசல்களைத்தள்ளிவிட்டு உறவுகளை அள்ளுங்கள்! உங்கள் இன்ப வாழ்க்கைக்கு வாழ்நாள் உத்தரவாதம் நான் தந்து மகிழ்கிறேன்.
உலகில் உங்களைத் தொலைத்தால் உறவுகள் கைகொடுக்கும்.! உறவுகளில் உங்களைத் தொலைத்துப்பாருங்கள்! உலகமே கைகொடுக்கும்..!
(அப்பாடி...முடிச்சாச்சு..)
இந்த 7 நிமிட ..............யை (கவிதைன்னு போட பயம்மா இருக்கு) ஒரு தனியார் தொலைக்காட்சியின் தீபாவளி கவியரங்கத்துல நான் படிச்சேன்.
தீபாவளியின் திரைப்பட சிறப்பு நிகழ்ச்சிகள் பாத்ததுல சரியா கவனிக்காமலோ தப்பித்தோ போயிருப்பீங்க!