காவல்துறையின் மீது வெவ்வேறு விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், நல்லவர்கள் இருந்துகொண்டும் , நல்லவைகளை நிகழ்த்திக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறாகள்!
புதுக்கோட்டை காவல் துறைத்தலைமை அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருக்கும். தினம் ஒரு திருக்குறள் என்ற பலகை, தினம் ஒரு தமிழ் வார்த்தை என்ற பலகை, பொதுமக்கள் குறைதீர் கணிணி மையம் - மனுதாரர்கள் தங்கள் குறைகளின் அவசியத்திற்கேற்ப நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரு ரசீது! முறையே 15 நாட்கள், 7 நாட்கள், 24 மணிநேரம் என கெடு வைத்து பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன! உண்மையிலேயே எல்லோருக்கும் திருப்தியான நடைமுறை ! காரணம் அப்படிப்பட்ட தலைமை !
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக திரு.பா.மூர்த்தி அவர்கள் பதவிவகிக்கிறார் ! மிகவும் எளிமையான மனிதர். சிறந்த சிந்தனாவாதி! பிரச்னைகளை அதன் ஆணிவேருக்கு சென்று அறுக்கவேண்டுமென்று நினைப்பவர்! சகமனிதர்களுக்கு மதிப்பளிப்பவர்! இவரைப்போன்ற நேர்மையாளர் இருப்பதால், உண்மையில் மாவட்டத்தில் உள்ள லஞ்சம் விரும்பும் காவலர்களுக்கு சிரமம்தான்! முக்கியமாக - நல்ல படிப்பாளி!
அவர் இப்போது 'அறிந்து கொள்க' என்ற தலைப்பில் -அரசாங்க அனுமதியோடு - ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.

தமிழகக்காவல்துறையின் அறிமுகம், காவல்துறையின் செயல்பாடுகள், அதன் அதிகார வரம்பு,தெரிந்துகொள்ளவேண்டிய குற்றவியல் சட்டங்கள், விதிமுறைகள், குற்றத்தடுப்புமுறைகள், ஆகியவற்றை மிகவும் எளிய முறையில், நல்ல தமிழில் எழுதியிருக்கிறார்.அது தவிர, மகளிருக்கெதிரான குற்றங்களும் தண்டனைகளும், சாலைவிபத்து, தீ விபத்தைத் தடுக்கும் முறைகள், சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத்தடுக்க என்ன செய்யலாம்? என்றும் விளக்கியிருக்கிறார்.
கிராமங்களில்- நகரங்களில் கூட - காவல்நிலையத்துக்குச்சென்று, அங்கு அமர்ந்திருக்கும் எல்லாக்காவலரையுமே 'ஏட்டய்யா' என்றழைக்கும் கலாச்சாரம் இன்று இருக்கிறது. ஆனால் ஒரு காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்களின் உடையை வைத்தே அவர்கள் எந்தப்பதவியில் இருக்கிறார்கள் என்பதை அறியமுடியும். அதை மிகத்தெளிவாக, உடையிலும், இலச்சினையிலும் உள்ள மாற்றங்களை வைத்து, ஆய்வாளர், தலைமைக்காவலர், காவலர் என தெரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டால், அவரது உரிமைகள் என்னென்ன என்று விளக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டை சோதனை செய்யும்போது என்னனென்ன விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு அடிப்படைத் தகவல்கள் நறுக்குத்தெரித்தாற்போல் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற தகவல்கள் தெரியாமல்தான் பொதுமக்கள் ஒரு சில காவல்துறை அதிகாரிகளை தட்டிக்கேட்க முடியாமல் திணறுகிறார்கள். அதற்கு அவர்கள் தரப்பிலிருந்தே ஒரு அஸ்திரம், இந்தப்புத்தகம் !
ஒரு காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு உள்ள பணிச்சுமைக்கிடையில், இத்தகைய புத்தகம் எழுதுவது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.! அதற்கு பணி மீறிய ஈடுபாடு வேண்டும். அது அவரிடம் நிறையவே இருந்திருக்கிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதற்கு முன் ' பெண்மை வாழ்க' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். மனிதர் படிப்பிலும் கலக்கியிருப்பார் போல, புள்ளியியலில் முதுகலைப்பட்டம், பின்னர் அதில் எம்.பில். , மேலும், பி.எல் முடித்து, இப்போது சட்டத்தில் எம்.பில் படித்துவருகிறார்.
கிழக்கு பதிப்பகத்தின், தரமான கட்டமைப்பைப்போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த 64 பக்க புத்தகத்தின் விலை எவ்வளவு தெரியுமா? - இலவசம்!
எல்லா இடத்திலும் நல்லவங்க இருக்காங்கப்பா , நாமதான் தேடித்தெரிஞ்சுக்கணும் !