ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி சொல்லுவாங்க! நட்பை பாதுகாத்துக்கணும்னா, நீ தவறு செய்தால் தயங்காமல் மன்னிப்புக்கேள் ! நண்பன் தவறு செய்தால் தயங்காமல் மறந்துவிடு! ன்னு அதாவது வார்த்தைகளைப்பிடிச்சு தொங்காம நிதானமா இருந்தாலே உறவுகளை அப்படியே வச்சுக்கலாம்.
ஏன்னா பதில் வார்த்தைகளால்தான் பிரச்னையே பெரிசாகும். நட்பு வேணும்னு நினைச்சா நல்ல சொற்களை மட்டுமே பேசினா போதும். அதேசமயம் வேறு ரெண்டுபேருக்கு இடையில் ஏற்படும் தகராறுக்கும் நாம காரணமா இருந்துடக்கூடாது. ஆனா அதுதான் நம்மிடையே அதிகமா நடக்குது. ரெண்டு பேரை சேத்துவைக்கத்தான் நமது வார்த்தைகள் பயன்படணும். அதில் கவனமா இருந்துட்டா அந்த ரெண்டுபேருக்குமே நாம கடவுளா தெரிவோம்.
பூவே உனக்காக படத்தில், நாகேஷுக்கும் நம்பியாருக்கும் குடும்பப்பகை இருக்கும். ஒருநாள் நாகேஷ் வண்டில பெட்ரோல் இல்லாம தள்ளிக்கிட்டு
வருவார். அதே சமயத்தில் நம்பியாருடைய காரும் ரிப்பேராகி நிக்கும். அங்கிருந்து ஊருக்குள்ள போகணும்னா 5 கிலோமீட்டர் நடக்கணும். அப்ப அங்க வரும் விஜய் ,ரெண்டுபேரின் கௌரவமும் கெட்டுப்போகாம நாகேஷ்கிட்ட , அவர் பெட்ரோலைக்கொடுத்து உங்க வண்டில ஏறிக் கிறேங்கிறார். கூட்டிக்கிட்டு போவோமா? ன்னு பேசி சம்மதிக்க வச்சுட்டு, நம்பியார்க்கிட்ட அவர் வண்டில உங்களைக்கூட்டிக்கிட்டு போறாராம் பெட்ரோல் மட்டும் உதவியா கேக்குறார்ன்னு சமயோஜிதமா சொல்லுவார். ரெண்டுபேரும் அந்த டீலுக்கு ஒத்துக்குவாங்க! அதேபோல், நம்பியார் காரில் இருந்து பெட்ரோலை எடுத்து நாகேஷ் வண்டிக்கு போட்டுட்டு ரெண்டுபேரையும் ஒரே வண்டியில் போக வச்சிடுவார். அந்த வண்டிப்பயணத்திலேயே அவர்கள் மீண்டும் நண்பர்களா ஆகிடுவாங்க!
இதுதான் சொல்வன்மைங்கிறது..நம்ம சொல்ற சின்னச்சின்ன பொய்களால் அடுத்தவங்களுக்கு பயன் இருந்தா கண்டிப்பா பொய் சொல்லலாம் தப்பே இல்லை. ஆனா அடுத்தவுங்களைக் கெடுக்க பொய் சொல்லக்கூடாது. இராமாயணத்தில் அனுமனை சொல்வன்மை மிக்கவன்ன்னு சொல்வாங்க ஏன்னா, சீதையைப்பாத்துட்டு வந்து, ராமனிடம் வந்து சொல்லும்போது...தகவலை இழுத்துச்சொல்லாம கண்டேன் சீதையை ன்னு ஆரம்பிச்சதுக்காக இன்று வரை இலக்கிய உலகம் அவரை ஒரு தகவல்தொடர்பு குருவாத்தான் பாத்துக்கிட்டிருக்கு!
ஆகவே பயனிலாச்சொல்லை சொல்வதைவிட, பிறருக்கு பயன்படக்கூடிய சொற்களை பேசி - வார்த்தைகளை வசப்படுத்தி வாழ்க்கையையும் வசப்படுத்துங்கள்! ஒரு நாள் வானமும் வசப்படும்! என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்!