முதல் பாகம் இங்கே!
உடனே ஓடி இரத்தவங்கிக்குள் நுழைய முயன்றேன். இரத்தவங்கி மூடப்பட்டிருந்தது. மீண்டும் தடுத்து நிறுத்தினார் டாக்டர். முத்துக்கிருஷ்ணன்.
வேற ஒரு பிரச்னை சார்!
என்ன பிரச்னை!
நீங்க ப்ளீட் பண்ணிறலாம்.! ஆனா நாளைக்குத்தான் கையில் தருவாங்க போலிருக்கு!
ஏன்?
டெஸ்ட் கிட் இல்லையாம்! ( கொடுக்கப்பட்ட இரத்தத்தை எல்லா வியாதிகளுக்காகவும் பரிசோதித்து அறியும் கருவிகள் - வேதிப்பொருட்கள் அடங்கியது )
அதைச்சொல்ல இவ்வளவு நேரமா? ஏன் சார்! நாமளாவது திருச்சி போய் இன்னேரம் குடுத்திருக்கலாமுல்ல? இதுகூடத் தெரியாமலா இவ்ளோ நேரம் வேலை பாக்குறானுங்க! கொஞ்சம் குரலை உயர்த்தினேன். ஆனால், அங்கு பதில் சொல்ல யாரும் இல்லை! அந்த மருத்துவமனை தலைமை மருத்துவரை நன்கு அறிவேன் என்பதால் அவருக்கு அழைத்தேன். நீண்ட நேரம் பிஸியாக இருந்தது. அப்போது மணி 10:30
பின்னர் அவசரமாக திருச்சி சென்று நள்ளிரவில் ஒரு தனியார் ரத்தவங்கியில் ரத்தம் கொடுத்துவிட்டு வீட்டுக்குத்திரும்பும்போது நள்ளிரவு மணி 1. இதற்கிடையில் திரு.பிரகாஷுக்கு ஒரு அறுவை சிகிச்சை முடிந்து அபாயகட்டத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, இரத்த இழப்பு மணிக்கு 50 மிலியாகக் குறைந்திருக்கிறது. 19வது யூனிட்டாக கொடுக்கப்பட்ட எனது இரத்தம் அவருக்கு செலுத்தப்படும்போது மறுநாள் காலை ஆகிவிட்டிருந்தது.
எப்போதும் அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் முடியும் எனது இரத்த தானம், பயனாளியை அடையும்வரை முழுமையாக 12 மணிநேரங்களை விழுங்கியிருந்தது. நான் எனது 35வது இரத்த தானத்தை முடித்திருந்தேன்.
இந்த அனுபவத்தில் எனக்கு சில கேள்விகளும், வருத்தங்களும்..!
1. மாவட்ட தலைமை மருத்துவமனையின் இரத்தவங்கியை மக்கள் நம்பியிருக்கும்போது, 24 மணிநேரம் என்று போட்டுக்கொண்டு யாருடைய நலனையும் கருத்தில்கொள்ளாமல் மூடிவிட்டுச்செல்வது அந்த இரத்தவங்கி பொறுப்பு மருத்துவருக்குத் தெரியுமா?
2. இரவு 10 மணிக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அமராமல் இருபது நிமிடம் எங்கு சென்றார் மருத்துவர்? அப்புறம் என்ன அவசர சிகிச்சை....வெங்காயமெல்லாம்?
3. இரத்தவங்கியில் டெஸ்ட் கிட் இல்லை என்று அப்போதுதான் தெரியும் என்றால், தலைமை மருத்துவரின் மனைவிக்கு அவசரமாக இரத்தம் தேவை என்றால் அவரிடமும் இப்படித்தான் கைவிரிப்பார்களா?
4. ஆனால், அவசரத்தேவைக்காக ஒன்றிரண்டு கிட் வைத்திருப்பார்கள் என்று மருத்துவர் கூறினார். அப்ப நான் போனது என்ன பொழுதுபோக்குத்தேவைக்கா? சாதாரணின் உயிர்.......எதற்குச் சமம்?
5. மாவட்டத்தின் ஒரே இரத்தவங்கி இந்த லட்சணத்தில் இருந்தால், பின்னர் ஏன் தனியார் இரத்தவங்கிகள் தோன்றி கொள்ளையடிக்கமாட்டார்கள்.? Obviously, தனியார் இரத்தவங்கி ஆரம்பித்து கொள்ளையடிக்கத்தான் இரத்தவங்கியை , இரத்த சொங்கியாக்கினார்களா?
உள்ளூரில் அன்று இரவு இன்னொரு நண்பரும் இரத்தம் கொடுக்க வந்திருந்தார். ஆனால் அவருக்கு வீட்டில் நிறை மாத கர்ப்பிணியான மனைவி வீட்டில் தனியாக இருப்பதால், எங்களுடன் திருச்சிக்கு வர இயலாது என்று கூறிவிட்டார். புதுக்கோட்டையிலேயே இரத்தம் கொடுக்க முடிந்திருந்தால், அவர் கண்டிப்பாக கொடுத்திருப்பார்.
இந்த மாதிரி எத்தனை அநியாயங்களை சொரணையில்லாமல் பொறுத்துக்கொண்டு போகப்போகிறோம்?
ஆனா நமக்கு இதெல்லாம் சகஜம்....இலங்கையில் கண் முன்னாடி காவு கொடுத்தோமே...அதையே வெக்கமில்லாமல் பொறுத்துக்கொள்ளவில்லையா?
விடுங்க பாஸ்!
