சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளைக் கண்டு
கூட சீற்றம் கொள்ளாதவர்களால் , இந்த தேசத்தின் நடக்கும் எந்த ஒரு பெரிய அநியாயத்தையும்
கண்டு பொங்கவே முடியாது என்பது எனது ஆணித்தரமான
நம்பிக்கை.! இன்றைய காலகட்டத்தில் நம்மைச்சுற்றி அதிக அநியாயங்கள் நடப்பதற்கும் நாம்தான்
காரணம்.! பல்வேறு இடங்களில் நடக்கும் சிறு சிறு அநீதிகளைத் தட்டிக்கேட்கத் தொடங்கினாலே
போதும்! மாற்றம் நிச்சயம்!
கேட்டால் கிடைக்கும் என்ற முகநூல் குழுமத்தை
நானும், நண்பர் கேபிள் சங்கரும் தொடங்குவதற்குக் காரணமே அடிப்படையில் எங்களுக்கு இருந்த
தட்டிக்கேட்கும் குணம்தான்..! குழுமத்தைத் தொடங்கி, எங்கள் அனுபவங்களை எழுத ஆரம்பிக்கவும்,
ஒத்த குணம் கொண்டவர்களும், இதுபோல் நாமும் தட்டிக்கேட்க வேண்டும் என்று நினைத்தவர்களும்
சேரத்துவங்கினார்கள்.
எங்களது சொந்தப் பிரச்னைகள் தவிர, பல்வேறு
நண்பர்களின் பிரச்னைகள் எங்களிடமே வந்து, நாங்களும் அவற்றை முறையாகத் தட்டிக்கேட்டு
வெற்றி பெற்றிருக்கிறோம். குழுமத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3000த்தைத் தாண்டியிருக்கிறது. எனவே, இந்தக் குழுமத்தை முழுமையான
பதிவுசெய்யப்பட்ட இயக்கமாக மாற்றலாம் என்று முடிவுக்கு வந்து, அதற்கான முயற்சிகளை எடுக்கத்
தொடங்கியாகிவிட்டது.
இந்நிலையில் சென்ற 2.2.2013 சனிக்கிழமை அன்று
கேட்டால் கிடக்கும் குழுமத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முகநூலில் குழுமப்
பக்கத்தில் ஒரு நிலைத்தகவல் மட்டும்தான் போட்டிருந்தோம். அதை வைத்து கூட்டத்துக்கு
வந்தவர்கள் உண்மையில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.
அவர்களையே பதிவுசெய்யப்படும் இயக்கத்தில்
நிர்வாகிகளாகப் போடலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.
அன்றைய கூட்டத்தில் , மிகச்சிறப்பாக அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
டிஸ்கவ்ரி புக் பேலஸின் வேடியப்பன் , ஏர்
டெல்லில் இருந்து 4800 ரூபாயைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.
சுதர்சன் என்ற முகநூல் நண்பர், உணவகத்தில்
சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் அநியாயமாக அதிகரித்துப் போடப்பட்ட தொகையை கழிக்க வைத்திருக்கிறார்.
அவரைப் பார்த்து அருகிலிருந்த ஒரு நண்பர்கள் கூட்டமும் அதிகமான தொகையை திரும்பப்பெற்றிருக்கிறார்கள்.
நாராயணன் என்ற நண்பர், பி.எஸ்.என்.எல்லுடன்
போராடி நியாயம் கிடைத்திருக்கிறது. மேலும் சில பிரச்னைகளுக்காக, இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்.
கோபிநாத் என்ற முகநூல் நண்பர், இந்தக் குழுமத்தில்
சேர்ந்த்பிறகு தட்டிக்கேட்க வேண்டும் என்ற தைரியம் வந்திருப்பதாக அழுத்திச் சொன்னார்.
பதிவர் பிரதீப்குமார், கேட்டால் கிடைக்கும்
என்ற தைரியம் தனக்குள் வந்திருப்பது பற்றிச் சொன்னார். கேபிள் சங்கரிடம் அவர் வைத்த
வாதங்கள் சுவாரஸ்யமானவை!
பதிவர் மெட்ராஸ்பவன் சிவக்குமார், கேட்டால்
கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்தக்குழுமம் விதைத்திருப்பதையும், சத்யம் தியேட்டரில்
கோக் விற்பனையில் நடைபெறும் கோக்குமாக்கையும் விரிவாகச் சொன்னார்.
கேபிள் சங்கர், அவர் அன்றாடம் சந்திக்கும்
பிரச்னைகள் பற்றியும் அதனை அவர் அணுகும் விதம் பற்றியும் தெளிவாக எடுத்துச்சொன்னார்.
போலீஸ், உணவகங்கள், டாஸ்மாக், தியேட்டர் என்று பல்வேறு இடங்களில் நடந்த பிரச்னைகள்
பற்றி விளக்கமாகச் சொன்னார்.
கேட்டால் கிடைக்கும் குழுமம் தொடங்கியதிலிருந்து
, பிப்ரவரி 2ம் தேதிவரை, பல்வேறு நண்பர்கள் மற்றும் குழும உறுப்பினர்களிடமிருந்து வந்த
பிரச்னைகள் பலப்பல..! அவற்றில் பெரும்பான்மையானவை நேரடியாக நான் தலையிட்டுப் பேசியதன்
மூலம் தீர்வுக்கு வந்திருக்கிறது. அவ்வாறு இந்த ஒரு ஆண்டில் 53 பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன
என்று சொன்னேன்.
அதில், பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், வீட்டு
உபயோகப் பொருள் விற்பனையாளர்கள், பார்சல் நிறுவனங்கள், கார் விற்பனையாளர்கள் மற்றும்
கடன் வழங்கும் நிறுவனங்கள், வங்கிகள், உணவகங்கள், திரையரங்கங்கள், ஒரு பத்திரிக்கை
நிறுவனம், கல்வி நிறுவனங்கள், கணிப்பொறி பயிற்சி நிலையங்கள் என்று வெவ்வேறு இடங்கள்
அடக்கம். இவை அனைத்திலும் நாம் நமக்கு என்ன தேவை என்பதையும், அரசின் சட்டங்களையும்
முன்னிறுத்தி கொஞ்சம் அழுத்தமாக, தெளிவாகப் பேசியதன் மூலம் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன.
மேலும், சந்திப்பிற்கு, கே.ஆர்.பி செந்தில்,
காவேரி கணேஷ் ,சுகுமார் சுவாமிநாதன், ஜெயக்குமார்
ஆகியோர் வந்திருந்து தனது கருத்துக்களை மிகவும் தெளிவாகவும், பயனுள்ளவகையிலும் பகிர்ந்துகொண்டனர்.
விரைவில் கேட்டால் கிடைக்கும் என்ற இயக்கம்
சென்னையில் பதிவு செய்யப்பட இருக்கிறது.
செல்வேந்திரனின் ஒரு கவிதைதான் நினைவுக்கு
வருகிறது.
பொது
இடங்களில்
ஒரு ரூபாய்க்குச்
சண்டைபோட்டுக்கொண்டிருப்பவனை
ஏளனமாகப் பார்க்காதீர்கள்.
பாவம்..
உழைத்துச்
சம்பாதிப்பவனாய் இருப்பான்!
கூட்டத்துக்கு அஞ்சாமல் செயல்படத்துவங்கினாலே
போதும்…கேட்டால்.கிடைக்கும்!
