அழிக்கப்பிறந்தவன் - இப்படியா பண்றது?

05 Jan 2012 · சுரேகா சுந்தர்




      யுவகிருஷ்ணாவின் அழிக்கப்பிறந்தவன் நாவல் நேற்று மாலை ’உ’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டவுடன் உடனே படிக்கவேண்டுமென்ற ஆவல் எனக்கிருந்தது. ஏனெனில், அவரது வலைப்பூவில் முதல் 6 அத்தியாயங்களை எழுதியிருந்தார். அந்த சுவாரஸ்யம் என்னை, புதிதாக வாங்கிய சட்டையை உடனே அணிய ஆர்வம் காட்டும் சிறுவனைப்போல் ஆக்கியிருந்தது. அதற்கேற்றார்ப்போல் இரவே எனக்கு வானொலி ஒலிபரப்பு இருந்தது. அது இரவு 11 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை இருக்கும். அந்த நான்கு மணி நேரங்களும், திரைப்படப்பாடல்களை ஒரு சிறு முன் ஜோடனையுடன் ஒலிபரப்புவது என் வழக்கம்.!

       பாடல்களை வரிசையாக முன்னரே எடுத்துவைத்துவிட்டால், பின்னர் ஒவ்வொரு பாடலுக்கிடையிலும் பேசினால்மட்டும் போதும். ஆக..ஒவ்வொரு பாடல் இடைவெளியிலும் ‘அழிக்கப்பிறந்தவனைப் படித்துவிடலாம் என்று எடுத்துச்சென்றேன்.
     ஏற்கனவே படித்த ஆறு அத்தியாயங்களிலும் வேறு ஏதாவது சேர்த்திருக்கிறாரா என்ற ஐயம் இருந்ததால், முதலிலிருந்து ஆரம்பித்தேன். 

     இயக்குநர் ஷங்கரின் ‘நண்பன்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ஆனால் அதன் திருட்டு டிவிடி 15 நாட்களுக்கு முன்னரே பஜாரில் வந்துவிட்டதாக ஒரு தகவல். உடனே ஷங்கர் , கமிஷ்னரை வந்து சந்தித்து விபரம் சொல்கிறார். அதை ரகசியமாக விசாரிக்க ஆரம்பிக்கிறார் கமிஷ்னர்.
     அதேசமயத்தில், சென்னை பர்மா பஜாரின் மிகப்பெரிய வியாபாரியான வாப்பா கொலைசெய்யப்படுகிறார். தொடர்ச்சியாக பஜாரின் சிலர் கொல்லப்படுகிறார்கள்.
     இந்த கேஸும், நண்பன் பட திருட்டு டிவிடி கேஸும் வெவ்வேறானதா, அல்லது ஒன்றுதானா என்பதை சுவாரஸ்யமான சம்பவங்களால், விறுவிறுப்பாக கதையை நகர்த்தி, ஒரு அட்டகாசமான க்ரைம் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் யுவகிருஷ்ணா.! அனேகமாய் ஷங்கர் சாருக்குக் கூட இந்தப் புத்தகம் கூடியவிரைவில் சென்று சேரும்!

     என் மூளை முழுவீச்சில் இயங்கியது நேற்றாகத்தான் இருக்கும் ஐந்து நிமிடத்துக்கொருமுறை அறிவிப்பு…மீண்டும் கதை.. ,மீண்டும் அறிவிப்பு..கதை..விரட்டி விரட்டிப் படித்துவிட்டுத்தான் ஓய்ந்தேன். இப்படியா பண்றது?...மனுஷன் கிறுக்குப் பிடிச்சுப் படிச்சு கெறங்கிப்போனேன் மக்கா!

     நாங்கள் சினிமாவில் பேசிக்கொள்ளும் வார்த்தை..டீட்டெய்லிங்..! ஒரு கதைப்பின்னணியை எடுத்துக்கொண்டால், அதன் நுணுக்கங்களைக் காட்சிகளில் வைக்கவேண்டும்.போகிறபோக்கில் அது வந்து செல்லவேண்டும். அப்போதுதான் காட்சியின் சுவாரஸ்யம் அதிகரிக்கும். அதேபோல், பாலகுமாரன், சுஜாதா ஆகியோரது நாவல்களில் ஒரு துறையின் பின்னணி  இருந்தால், அதன் நுணுக்கங்கள் கதையில் நிரவலாகத் தூவப்பட்டிருக்கும் அதேபோல், இந்த நாவலில், பர்மா பஜாரின் தொழில் விபரங்களை மிகவும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் யுவகிருஷ்ணா! இதற்கும் மேல், இன்னும் ஆழமாகச் சொன்னால், கண்டிப்பாக பஜார் வியாபாரிகளுக்கே பிரச்னை வரக்கூடிய அளவு கத்திமேல் நடப்பு! அதுவும் அந்த மீன் பிடிக்கப்போதல், கரைக்குக் கொண்டுவரும் தந்திரம் என்று உண்மையில் பஜார் சென்று விபரம் விசாரித்திருக்கிறார்.

     இதில் விஜய்ஷங்கர் என்றொரு பாத்திரம் வருகிறது. அனேகமாய் விஜயும் ஷங்கரும் இணைந்த படத்திற்கான கதைக்கள அடிப்படை  என்பதால் அந்தப் பெயர் வைத்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பும் மிகவும் அருமை.! அதுவும் அவன் ஊரிலுள்ள சொத்தெல்லாம் விற்று படம் விநியோகிக்க வந்து, ஒரு சந்தர்ப்பத்தில், புரோக்கர் முருகன்  அவனுக்கு போன் செய்யும்போது உண்மையில் என் சொத்தே போகும் நிலைபோலப் பதறினேன்.

     கதையின், நடை நம்மை உள்ளிழுத்துக்கொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விலைமாது வரும் காட்சிகளிலும் அத்துமீறாமல் அடுத்த காட்சிக்குத்தாவும் சந்தர்ப்பங்களில் கதையின் போக்கில் நம்மை கவனப்படுத்தி விளையாடுகிறார் யுவா!  மிகச் சாதாரணமான வார்த்தைகள். சம்பவங்களின் அனாயாசமான வேகம்.! ஏதோ ஒரு இடத்தில் இது உண்மையிலேயே நடந்துகொண்டிருக்கிறதோ என்று எண்ணவைக்கும் காட்சிக்கோர்வைகள் என நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் நாவலைப் படித்த உணர்வு எழுந்தது.

    தலைப்புதான் அழிக்கப்பிறந்தவன்...!! ஆனால்..கதை ஆளப்பிறந்ததாகத் தான் இருக்கிறது.

    ஒரு மசாலாப்படத்துக்குரிய அனைத்து அம்சங்கள் இருந்தாலும், அது எல்லோருக்கும் பிடித்திருக்கவேண்டும். அப்போதுதான் அது வெற்றிப்படம்! அப்படிப்பட்ட வெற்றிப்படம் பார்த்த திருப்தி தனிதான்..!!

அந்தவகையில்…..இது சூப்பர் டூப்பர் வெற்றிப்படம்!!


வெளியீடு - உ பதிப்பகம்
விலை - ரூ. 50.00
புத்தகக் கண்காட்சியில் கடை எண்; 334 டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.



← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →