அகவை 70ல் அப்பா!

26 Sep 2012 · சுரேகா சுந்தர்


    



     எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் அவரை நான் பார்த்துவருகிறேன். ஒரு சாதாரணக் குடும்பத்தில் இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பியுடன் பிறந்து ஒரு அரிசி மில்லில் வேலைபார்த்துக்கொண்டே படித்து, பின்னர் பள்ளிக்கல்வியை மிகுந்த சிரமத்துக்கிடையே முடித்து, ஆசிரியக்கல்வியும் கற்று, ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத்தொடங்கி, பின்னர் மாநில அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் கிராமசேவக் எனப்படும் பணியில் நிலைபெற்று வாழத்துவங்கி ஊராட்சி ஆணையராக பணி ஓய்வு பெற்றவர் அவர்.!

     என்னிடம் அதிகம் பேசுபவரில்லை. நிறைய அறிவுரைகளும் சொல்பவரில்லை. நான் என்ன செய்யக்கூடாtது என்று பட்டும் படாமல் சொல்லிச் செல்வார். சிறுவயதில் இவர் எனக்கு சிம்ம சொப்பனம்.

அரசாங்க ஊழியராய் இருந்துகொண்டு லஞ்சம் வாங்காமல் இருந்தவர். ஒருமுறை லஞ்சம் கொடுக்க வந்த ஆளை அடிக்கச்சென்றவர்.

அந்த மனிதரிடமிருந்த நேர்மைதான் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியது. எந்தக்காலகட்டத்திலும் அவர் நேர்மையை விட்டுக்கொடுத்து நான் பார்த்ததே இல்லை. தவறு யார் செய்திருந்தாலும், தைரியமாக தட்டிக்கேட்கும் உறுதி கொண்ட மனிதர்!

எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதன் ஆழம் வரை சென்று நன்கு கற்றறிந்து , பின்னர் விவாதிக்க ஆரம்பித்தால், மாற்றுக்கருத்துச் சொன்னவரை மண்டியிட வைத்துவிடுவார்.

பிறருக்கு உதவுவதில் இவரைப் பார்த்து அதிசயித்திருக்கிறேன்.

“எந்த வீட்டு சந்தோஷத்துல கலந்துக்கலைன்னாலும் பிரச்னை இல்லை. அவங்க சங்கடத்துல கட்டாயம் கலந்துக்கணும்! அவங்களுக்கு கஷ்டம்னு வந்தா உதவ நாம் இருக்கோம்னு நினைக்கணும்!” என்று சொல்லி அதன்படியே செய்து காட்டியவர்!

அவரது சகோதர, சகோதரிகளும் அவரிடம் அதீத அன்புகாட்டுபவர்களாக அமைந்ததுதான் இன்னும் சிறப்பு ! இன்றுவரை அவர்கள் 6 பேரின் அன்பு மாறாமல், மிகவும் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டு வியந்துகொண்டிருக்கிறேன்.

தனது பெற்றோரிடம் மிகவும் அன்புகாட்டினார். பெற்றோருக்காக தனது 10 ஆண்டுகால பணிமூப்பை விட்டுக்கொடுத்துவிட்டு வந்தார்.

இரவு  9 மணிக்கு வீடு திரும்புவார். தந்தைக்கு அன்றிரவு உண்ண வாழைப்பழம் இல்லையென்றால், உடனே சென்று வாங்கித்தந்துவிட்டுத்தான் தனக்கான உணவை உண்ணுவார்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, நடமாட இயலாமல் இருந்த 85 வயதான தாய்க்கு , தானே ஒரு தாயாக மாறி எல்லா உதவிகளையும் ஒரு குழந்தைக்குச் செய்வதுபோல் செய்தவர்.


செல்வம் பெரிதாக இல்லையென்றாலும், செல்வந்தர் மனநிலை என்னவென்று செயலில் காட்டியவர். வீட்டில் சில்லறைக்கென்று ஒரு சின்ன டப்பா, பணத்துக்கென்று ஒரு பெரிய டப்பா வைத்து யார் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கான கணக்கு மட்டும் எழுதினால் போதும் என்று, பொருளாதார சுதந்திரத்தை மிகவும் அற்புதமாக உணர்த்திக்காட்டியவர்.! இன்றுவரை தான் செய்த செலவுகளுக்குக் கணக்கு எழுதிக்கொண்டிருப்பவர். 88ம் வருடம் திருச்சியிலிருந்து சென்னை வர எவ்வளவு செலவானதென்றும், மற்ற அத்தியாவசியப்பொருட்களின் விலைவாசி பற்றியும் இவரது கணக்குப்புத்தககம் கதைகளாய்ச் சொல்லும்.

50 ரூபாய் செலவாகும் இடத்துக்கு 100 ரூபாய் எடுத்துச்சென்றால் தவறில்லை. 49 ரூபாய் எடுத்துச்செல்வது முட்டாள்தனம் என்று தெளிவாகச் சொல்லுவார். அவர் செலவுக்கு அஞ்சி நான் பார்த்ததே இல்லை. தனக்காகப் பிறர் செலவழிப்பதை ஏற்றுக்கொள்ளாதவர்.

அவரது எழுத்து மிகவும் அழகாக இருக்கும். தன்னுடைய அலுவலகக் குறிப்பை , ஒரு சிற்பியின் நேர்த்தியுடன் கையாள்வதைப்பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். அவரது அலுவல் நாட்களில் அதிகாலை 6 மணிக்குக் கிளம்பிச்சென்று, இரவு  11 மணிக்குத்தான் வீடு திரும்புவார்.

மிகுந்த கவனம் வாய்ந்தவர். ’
பொருட்களை நேர்த்தியாக வைத்துக்கொள்ளத்தெரிந்தவர்
காலத்தை சிறப்பாக நிர்வகிப்பவர்.
ஓவியம் தெரிந்தவர்!
நாடக நடிகர்!
வேலை பார்த்த ஊரில் சிறியதாக மெஸ் நடத்தியவர்
நிறைய பயணம் செய்திருக்கிறார். தமிழகத்தின் அனைத்து ஊர்களைப்பற்றியும் நிறைய தகவல் தெரிந்தவர்.
சகோதர, சகோதரிகளை மிகவும்  நேசிப்பவர்!
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புபவர்


தனது கருத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும், கொஞ்சம் ஆக்ரோஷமாகவும் வைக்கத்தெரிந்தவர்..

மகனை எந்த வயதுவரை கட்டுப்படுத்தலாம். எந்த வயதுக்குமே சுதந்திரமாக விடலாம் என்று தெளிவாகத் தெரிந்தவர்

இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அத்தனைக்கும் அவர்தான் காரணம்.!

நான் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு வந்து வீட்டில் சொன்னபோது, மிகவும் நிதானமாக “ இந்த வயசுல நல்லா பிரயாணம் பண்ணி நாலு எடத்தைப் பாத்துட்டு வா! “ என்று வித்தியாசமாக வாழ்த்தியவர்.

திருமண வயதில், ‘ நீ ஏதாவது பொண்ணை பாத்து வச்சிருக்கியா? சொல்லுடா! என்று காதலுக்கு மரியாதையாகக் கேட்டவர்.

நான் எது செய்வதாக இருந்தாலும். தடை சொல்லாமல், ‘மகன் செய்தால் சரியாகத்தான் இருக்கும்’ என்று என்னை நம்பி அப்படியே என்னை ஏற்றுக்கொண்டிருப்பவர்..!!

என் குழந்தைகளிடம் பேரன்பு கொண்டிருப்பவர்..! தாத்தாவிடம் சொன்னால் கிடைத்துவிடும் என்று அவர்களை நம்பவைத்திருப்பவர்!


இன்று என்னிடம் இருக்கும் அத்துனை நற்குணங்களுக்கும் அவர்தான் பொறுப்பு!

அவருக்கு நேற்று அகவை 70 நிறைவடைந்து 71ல் அடியெடுத்துவைத்தார்.
என்னால் முடிந்த வரையில், சிறியதும் பெரியதுமாக 70 பொருட்கள் வாங்கி அவருக்குப் பரிசளித்தேன். பெருமையாக அனைவருக்கும் தொலைபேசிச் சொன்னார் !!


சிறுவயதில் அதிக கண்டிப்பு…!
கொஞ்சம் வளர்ந்த பருவத்த்தில் மிதமான கண்டிப்பு!
கல்லூரிக்குச் செல்லும்போது லேசான மேற்பார்வை!
வேலைக்குச் சென்றபின் தூரத்திலிருந்து ரசிப்பு!
நிறுவனம் நடத்தும்போது உற்றாரிடம் பெருமை!
இப்போது செய்யும் ஒவ்வொரு செயலிலும் தனது வாழ்த்துக்களைச் சொல்லி ஊக்குவித்தல் என..
ஒரு சிறப்பான ஊட்டச்சத்து உணவுபோல் இருக்கும் இந்த அற்புத மனிதரைத்  தந்தையாகப் பெற்றதுதான்  என் பேறு!





← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →