வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் # 2

30 Sep 2012 · சுரேகா சுந்தர்




பதிவர் சந்திப்பு நடந்தேறி, அதைப்பற்றிய நேர், எதிர் விவாதங்களும் சூடேறி, கொதித்து, அடங்கி் மீண்டும் அவரவர்கள் அடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கும் இந்நேரத்தில்..எனது அடுத்த பாகம்…

இந்தப் பதிவர் சமூகத்தை சமூகமும், ஊடகங்களும் ஒரு ஓரப்பார்வை பார்த்தபடிதான் உள்ளன. பதிவுலகத்துக்கென்று ஒரு சில பக்கங்களை ஒதுக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு புத்திசாலிகளின் ஒருங்கிணைப்பாகத்தான் பார்க்கின்றன. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை கணிப்பொறியில் வேலை பார்த்துக்கொண்டே , அதிலேயே கருத்துக்களையும், படைப்புகளையும் எழுதுபவர்கள் மிகவும் அறிவாளிகளாகவும், சமூக சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது அவர்களது கணிப்பு..!! பாவம்! J

உண்மையில் நம்மில் பலர், அப்படித்தான் இருக்கிறார்கள். சமூக அக்கறையுடனும், நியாயமான படைப்புகளுடனும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், எதிர்வினைகளாலும், எதிரிவினைகளாலுமே காலம் கடத்தும் பதிவுகளையும் மற்றவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட பதிவுகளை விலக்கிவிட்டுப் பார்த்தால், வலைப்பூக்கள் மிகப்பெரிய ஊடகமாக மிளிர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் எனக்குத்தெரிந்து கிட்டத்தட்ட  4500 பதிவுகள் வந்திருப்பதை கவனித்தேன். சராசரியாக தினசரி 150 பதிவுகள் ! ஒரு சிலர் தினம் எழுதுகிறார்கள். சிலர் ஒரு நாளிலேயே 2 பதிவுகள்!  சிலர் வாராவாரம் ! இதில் மாதம் 3,4 பதிவுகள் மட்டுமே எழுதும் என் போன்றவர்களும் அடக்கம்.! கண்டிப்பாக இது இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். ஆக ஒரே நாளில் 150 தனிக் கட்டுரைகள். அதில், அரசியல், சினிமா, நூல், சமூகம், அனுபவம் , சரித்திரம், ஆன்மீகம், குடும்பம், சமையல், தொழில்நுட்பம், இலக்கியம், படைப்புகள் என்று எல்லாமே அடக்கம். ஆக ஒரு பதிவுக்கு 2 பக்கங்கள் என்று ஒதுக்கினாலும், ஒவ்வொரு நாளும் சுமார் 300 பக்கங்கள் கொண்ட ஒரு இணைய இதழை நாமெல்லாம் சேர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்த இணைய இதழை எத்தனை பேர் புரட்டிப்பார்க்கிறார்கள் என்ற கணக்கு வழக்குக்குள் எல்லாம் நான் போகவில்லை. ஆனால், நம்மில் ஒவ்வொரு நாளும் 150 எழுத்தாளர்கள் வேலை பார்த்து இந்த கட்டமைப்பின் சுழற்சியை மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம்.


இதில் பல்வேறு விதமான துறை வல்லுநர்கள் சர்வசாதாரணமாக எழுதிக் குவிக்கிறார்கள். சில சிறப்பான தகவல்கள் நம்மிடையே அநாயாசமாகக் கடந்துபோகின்றன. ஆக மொத்தத்தில், இதுபோன்ற ஒரு அற்புத உலகம் கிடைத்திருப்பது நமது தலைமுறைக்கு ஒரு வரமென்றே திண்ணமாக எண்ணுகிறேன்.


அதையும் ஒரு குழுமமாக்க முயற்சித்து ஓரளவுக்கு வெற்றியும் பெற்றாகிவிட்டது. எந்தவொரு தனிமனிதனும் செய்யமுடியாததை ஒரு குழுமம் செய்யலாம் என்றுதான் சமூகம் என்ற கட்டமைப்பிலேயே சங்கங்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று வளர்ந்து அது அரசியலில் சங்கமித்து ஒரு தேசத்தையே நிர்வகிக்கும் நிலையை அடைந்திருக்கிறது. ஆகவே இந்தப் பதிவர் சமூகமும் குழுமமாக உருவெடுப்பது நன்மை பயக்கக்கூடியதுதான். ஆனால், யாருக்கு? எதற்கு? என்பதில்தான் ஆழமாக சிந்திக்கவேண்டியுள்ளது. அதை சிறப்பாகப் புரிந்துகொண்டால், இந்தப் பதிவர் குழுமம் மிகச்சிறப்பாகச் செயல்பட எல்லா வாய்ப்புகளும் வாசற்படியில் நிற்கின்றன.


நமது பதிவர் சமூகமும் என்னன்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்தித்தபோது கிடைத்த யோசனைகள் இவை : இவை தவிர , இதைவிட சிறந்த யோசனைகள் எல்லா வலைப்பதிவரிடமும் கிடைக்கும் என்பதிலும் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. முதலில்.. என்னமாதிரியான விஷயங்களைக் கையில் எடுத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.


தனிமனித வளர்ச்சி, சமூக வளர்ச்சி, இவை இரண்டுதான் இந்தக்குழுமத்தால் சாதிக்க முடிந்ததாக அமையும்.


முதலில்.. தனிமனித வளர்ச்சி:


ஒவ்வொரு பதிவரும் ஏதாவது ஒரு வேலையில் இருக்கலாம். தொழில் செய்யலாம். கலை வல்லுநராக இருக்கலாம். அவர்கள் தங்கள் வேலையில் என்னன்ன வளர்ச்சியை எட்டலாம் என்று முறையாக ஏற்பாடு செய்து பயிலரங்கங்கள் வைக்கவேண்டும்.

பதிவர்களின் Database ஒன்று தெளிவாக உருவாக்கி, அவர்களில் முகம்காட்ட விரும்புபவர்களிடம் முழுத்தகவல்களும் வாங்கி ஒரு கேள்வி பதில் தளம் உருவாக்கவேண்டும். எனக்கு ஒரு மைக்ரோவேவ் அவன் அல்லது நீர் சுத்திகரிப்பான் வாங்கவேண்டும் என்ற எண்ணம் வரும்போது அதைப்பற்றி விபரம் சொல்ல ஒரு பதிவரை நான் அணுகும் வகையில் குழுமத்திடம் தகவல்கள் இருக்கவேண்டும். அந்தத்தளத்தில் என் கேள்விக்கு அந்தப் பதிவரிடம் பதில் வாங்கிப் போடவேண்டும். இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு மிகவும் பயனுள்ள தளமாக மாற 100 சதவீத வாய்ப்பு உள்ளது.

கேள்விகளை ஒரு வலைப்பூவுக்கு அனுப்பினால், பதிலை குழுமமே வாங்கிப்போடவேண்டும். அல்லது புதிய வல்லுநர் ஒருவர் தன்னார்வத்துடன் வந்து பதில் போடவேண்டும்.

தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் பதிவர் சந்திப்புகளை குழுமம் ஊக்குவிக்கவேண்டும். அப்போது எந்தந்த ஊரில் எத்தனை பதிவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். (அதுவே தீர்மானமான தகவல் அல்ல! ) அதன்மூலம் அந்தந்த ஊர்களுக்குச் செல்லும்போது பதிவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளலாம். அந்த ஊரில் தனக்கு நடைபெற வேண்டிய வேலையில் உதவிகள் பெற்றுக்கொள்ளலாம். இது இப்போது தனித்தனியாக பழகிய பதிவர்களுக்கிடையே நடந்துகொண்டிருக்கிறது. இதுவே ஒரு குழுமத்தின் குடையின் கீழ் வந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்படும். (இதில் கடன், கொடுக்கல் வாங்கல்களுக்கு கம்பெனி பொறுப்பாகாது எனக்கொள்க!)

இன்னும் தனிமனித வளர்ச்சியில் சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது.. அடுத்த பாகத்தில் பார்ப்போமே..

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →