கல்விக்கடன்..ஒரு பின்னூட்டமே.. பதிவாக...

30 Dec 2009 · சுரேகா சுந்தர்


கல்விக்கடன் குறித்த...என் முந்தைய பதிவுகளைப்படித்துவிட்டு..திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பின்னூட்டமாக எழுதியிருந்த கருத்துக்களே இந்தப் பதிவாகிறது.....! ஒரு முன்னாள் வங்கியாளராக தனது கருத்துக்களை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ! இடையிடையே எனது விளக்கம் மட்டும்....

ஒரு முன்னாள் வங்கியாளனாக இந்த மூன்று பதிவுகளையும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன்.

முதலில், இந்த மூன்றாம் பகுதியில் இருக்கும் சில விஷயங்களைப் பற்றி....

என்ன வரையறைக்கு உட்பட்டு , கடன் கொடுக்கலாம் என்பதை யாரும் சொல்லவே இல்லை என்று சொல்லியிருப்பது சரியல்ல.

வரையறைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அன்று நிதியமைச்சராக இருந்த பானா சீனா என்ன செய்தார்? கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள்! கொஞ்ச நாட்களில், அதுவும் அலுத்து விட்டது.

இதைத்தான் வாய்மொழி என்று நாசூக்காகச்சொன்னேன்...! :) நீங்கள் போட்டு உடைத்துவிட்டீர்கள்.

கல்விக் கடன் என்பது ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகத் தான் ஆரம்பித்தது!

அடுத்ததாக, நம்முடைய மக்களுக்கும் சரி, அரசியல்வாதிகளுக்கும் சரி, ஒரு அடிப்படை விஷயம் எப்போதுமே புரிவதில்லை.

கடன் என்பது திருப்பிச் செலுத்தவேண்டிய ஒன்று. தர்மம், இலவசம் என்பது வேறு! வங்கிகள், கடன் கொடுப்பதை, ஒரு தொழிலாகச் செய்கின்றன. அதுவும் தவிர, அப்படிக் கொடுக்கப் படும் பணம், வங்கியுடையதோ அல்லது அரசின் சொத்து ஒன்றும் இல்லை. அது வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருக்கும் முதலீட்டாளர்களுடையது.


ஆம்.. இதுவும் முதல்பாகத்திலேயே...தள்ளுபடி என்ற கோணத்தில் சொன்னேன்..ஆனால் உங்கள் வரிகளில் நிறைய உண்மை தெறிக்கிறது.


இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள் தெளிவுபடச் சொல்லப்பட வேண்டும்.

இப்படி சமூகப் பொறுப்புடன், வழங்கப்படும் கடன்களுக்கு, இந்திய அரசு, உத்தரவாதம் எதையாவது அளித்திருக்கிறதா?

இல்லை!

கடன் வாங்கும்போது ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து வாங்கும் அத்தனைபேருமே, தங்களுடைய கடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டியது என்ற உணர்வோடும் பொறுப்போடும் இருக்கிறார்களா?

இல்லை!

ஆக, வங்கிகள் தட்டிக் கழிக்கின்றன என்ற குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்னால், கல்விக்கடன் என்பது, வங்கித் தொழிலின் மற்ற கடன்களைப் போலத் தானா, அல்லது அரசினால் மறைமுகமாக, எவருடைய பணத்தையோ எடுத்து, அரசியல் ஆதாயத்திற்காகச் சூறை விடப்படும் தேங்காய் தானா?

வங்கிகள் செய்வது ஒன்று வியாபாரமாக இருக்க வேண்டும் அல்லது வங்கித் தொழிலை விட்டு விட்டு அரசு நடத்தும் தர்ம சத்திரமாக இருக்க வேண்டும். இந்த ஒன்று தான் அரசினால் வரையறை செய்யப் படாமல் இருப்பது!

கல்விக் கடன் என்று மட்டுமில்லை, எந்தக் கடனாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தும் சக்தி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பொதுத்துறை வங்கிகள் பாவம்!

அப்புறம் கடைசிப்பாராவில் சொல்லியிருப்பது,அதற்கும் மாற்று இருக்கிறதே!

எண்பது சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுப் பொருளாதார ரீதியாக அதாவது பெற்றோரின் வருமான அடிப்படையை வைத்து, கல்வி நிறுவனங்கள் குறைந்தது இருபத்தைந்து சதவீத இடங்களையாவது இலவசமாகத் தான் ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கலாமே!

அதுவும் சரிதான்..என் கோணமே அதுதான்..! நல்லாப்படிக்கிறியா? ஏழையா? எங்கவேணும்னாலும் சேந்து படி...பணம் கட்டவேணாம்னு சொல்லும் அளவுக்கு அரசுக்கு திராணி இல்லை!

இங்கே மாற்றம் நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது!

கண்டிப்பா சார்...!


← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →