தாயாதாரம்..!

18 Dec 2007 · சுரேகா சுந்தர்

இதோ பாருங்க...ஒண்ணு நான் இந்த வீட்டில இருக்கணும்..!
இல்லன்னா உங்க அம்மா இருக்கணும். நீங்களே முடிவுக்கு
வாங்க.!

கல்யாணி இப்படி அதிரடியாய்பேசியதும், நான் கொஞ்சம் கலங்கித்தான் போனேன்.

-ஏன் அம்மா எந்த தப்பும் பண்ணலயே ! அவுங்க உன்னிடமும்
பாசமாத்தானே இருக்காங்க.! அப்புறம் ஏன் பிடிக்கலைங்கிற?

-பிடிக்கறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்..! ஆனா பிடிக்காம போறதுக்கு காரணமே தேவையில்லங்க! இருந்தாலும் அவுங்க நடவடிக்கையும்.. கிராமத்து பேச்சும், ஒரு டிவி கூட
பாக்காத கொணமும்..மருதாயின்னு பேரும்..மொத்தத்துல பிடிக்கலை.. அவ்வளவுதான்.!
ரூம்ல டேபிள்ல 3 காப்பகத்துக்கான அப்ளிகேஷன்
வச்சிருக்கேன். எது நல்லதா படுதோ அதுல சேத்துவிட்டுடுங்க.!
என்னால மாரடிக்க முடியாது.
அதையும் மீறி இங்கதான் இருப்பாங்கன்னா..நான் கட்டாயமா
வீட்டைவிட்டு போயிடுவேன்.!

மிகவும் வேதனையாய் இருந்தது.
அம்மா கிராமத்துக்காரி! நானும் அங்குதான் வளர்ந்தேன். 12 வயதில அப்பா போய்விட, என்னை வளர்க்க அவள்பட்ட பாடுகொஞ்சம் அதிகம்தான்.! ஏதோ ஒரு வெறியில் நானும் படித்து
ஒரு கவுரவமான நிலைக்கு வந்து, நகரவாசியாகும் வரை நன்றாகத்தான் இருந்தது, கல்யாணியை காதலித்து கரம்பிடிக்கும்வரை..
அதற்குக்கூட அம்மா ஒரு வார்த்தை எதிர்ப்பு
தெரிவிக்கவில்லை.! மிகவும் சாந்தமாக 'உனக்கு நல்லதுன்னு பட்டா செஞ்சுக்கப்பா 'என்றாள்!

ஆனால் ஆரம்பம் முதலே கல்யாணிக்கு அம்மாவின் எளிமை
ஏளனத்துக்குள்ளாகி.. இன்று இப்படி வந்து நிற்கிறது!

நான் அமைதியாக வெளியே வந்தேன்.வாசலில் அம்மா , நேற்று போய்விட்டு வந்த கோவிலில் சாத்திய மாலையிலிருந்து நூலை எடுத்துக்கொண்டிருந்தாள்.

அம்மா!

என்ன கணேசு.!

உனக்கு இங்க கஷ்டமா இருக்காம்மா?

அதெல்லாம் இல்லப்பா..ஆனா வயசான என்னய வச்சுக்கிட்டு
நீங்கதான் கஷ்டப்படுறீங்க! நான் ஒரு யோசனை சொல்றேன்.கேக்குறியா..?


சொல்லும்மா!

இப்பதான் நல்ல நல்ல முதியோர் இல்லமெல்லாம் வந்துருச்சாமுல்ல! அதுல ஏதாவது ஒன்னுல என்ன சேத்துவிட்டுடு. ! ஆனா உனக்கு செலவு அதிகமாகாம பாத்துக்க..

கல்யாணி சத்தமாக சொன்னது கேட்டும், எப்படி நாசூக்காக வெளிப்படுத்துகிறாள் ! ..இவளைப்போய்...!

கலங்கிய கண்களுடன் ..சரிம்மா ! ஒரு ஏற்பாடு பண்றேன் என்றேன் முடிவாக..!

கல்யாணி ஆசையாய் வாங்கி வைத்திருந்த 3 விண்ணப்பங்களையும் பார்த்தேன்.

ஒன்றைத்தேர்வு செய்தேன். பூர்த்தி செய்து எடுத்துக்கொண்டேன்.

அன்று கல்யாணி மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.
என் செல்லம்டா நீ! என்றெல்லாம் கொஞ்சினாள்.
அம்மா சலனமே இல்லாம கிளம்பிக்கொண்டிருந்தாள்!

-ஏங்க நானும் வரேங்க! அத்தையை கொண்டு விட எனக்கு

ஆசையா இருக்கு!

- கண்டிப்பா..நீ இல்லாமலா?

'முருகானந்தர் ஆதரவற்றோர் இல்லம்' என்ற பெயர்ப்பலகை போட்டிருந்த வாசலுக்குள் கார் நுழைந்தது.

சாலையின் இருபக்கமும் மரங்கள் செடிகள் என ரம்மியமான சூழல்.

- ரொம்ப நல்லா இருக்குல்லங்க..அத்த! நீங்க குடுத்து வச்சவங்க! கல்யாணி பெருமைப்பட்டாள்.

ஒரு மையமான கட்டிடத்தில்..மேலாளர் அறைக்குள்
நுழைந்தோம். கல்யாணி புன்முறுவலுடன் பின் தொடர்ந்தாள்.
அம்மா வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள்.

மேலாளர்
எங்கள் மூவரையும் அமரச்சொன்னார்.
நான் விண்ணப்பத்தை எடுத்து நீட்டினேன்.

பார்த்துவிட்டு மேலாளர் கேட்டார்..

இங்க சேரப்போற 'கல்யாணி'ங்கறது ....?

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →