மூன்றாம் நாள் புத்தகக் காட்சி

08 Jan 2012 · சுரேகா சுந்தர்




உண்மைத் தமிழன் அண்ணாச்சியுடன் உள்ளே நுழையும்போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. முரட்டுக் கூட்டம்..! உள்ளே சென்றதும் ,நேராக கிழக்கில் கால்கள் நின்றன. அப்புறம்தான் தெரிந்தது. பாரா இருக்கிறார். அவருடன் பேச ஆரம்பித்தால், பல்வேறு தகவல்கள் தந்தார். அப்போது ட்விட்டர் புகழ் சுப்புடுவும் வந்தார். Samsung, iPhone தொழில்நுட்ப சுவாரஸ்யங்கள் பகிர்ந்துகொண்டோம்.

     அப்படியே ஒவ்வொரு கடையாக மேய ஆரம்பித்தேன். சில புத்தகங்களின்மீது நாட்டம் ஏற்பட்டபோது தலைப்பு-ஆசிரியர்-பதிப்பகம்-கடை எண்ணை எழுதிக்கொண்டேன். பொறுமையாக ஒரு பகல் நேரத்தில் வந்து தேவையான புத்தகங்களை வாங்க உத்தேசம்..! முன்னோட்டமாக எல்லாக்கடைகளையும் வரிசையாக பார்வையிடும் நோக்கம்! முழுமையாக பார்த்துமுடித்தபின் நாளை புத்தகப் பட்டியல் பதிவிடலாம் என்று இருக்கிறேன்.

     இந்த புத்தகக் காட்சியின் மிகப்பெரிய ஆச்சர்யமாக, தொடங்கி மூன்றே நாட்களில் , காமிக்ஸ் விற்பனைசெய்துவந்த கடையில், எல்லா காமிக்ஸும் விற்றுத்தீர்ந்துவிட்டது. விஷ்வாவும், ரகுவும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். உண்மையில் இவ்வளவு காமிக்ஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வரும் மார்ச் மாதத்தில் அச்சிடவேண்டிய காமிக்ஸ்களை, இப்போதே அச்சிடுவதற்காக லயன்ஸ் காமிக்ஸின் திரு.அசோகன் இரவே சிவகாசிக்கு ரயிலேறுகிறார் என்று ரகு சொன்னார். இது ஒரு சாதனைதான்..!!

     எல்லாக் கடைகளையும் யாரையும் கூட்டுச் சேர்க்காமல், தனியனாக மேய்ந்தேன். சாகித்ய அகாதெமியில் உண்மையிலேயே மலிவுவிலையில் பல்வேறு படைப்புகள் கிடைக்கின்றன. மதி நிலையம் பாராவின் குற்றியலுலகம் என்ற கீச்சுத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. தேடலில் பொறுமையாக 50 நிமிடங்கள் கழிந்தன. மூன்று வரிசைகள்தான் முடிக்க முடிந்தது. பட்டியலில் 24 புத்தகங்கள் சேர்ந்தன. ( எதுவும் வாங்கவில்லை.!.)  

அப்புறம், பூவுலகின் நண்பர்கள் கடைக்கருகில் பதிவர் காவேரி கணேஷ், அன்பழகன் வீரப்பன் ஆகியோர் சந்தித்துப் பேச ஆரம்பித்தோம். ஒரு வார்த்தை கூட வெட்டியாகச் செலவழிக்காமல், உண்மையான சமூக, பதிவுலக அக்கறையுடன் உரையாடல் அற்புதமாக நீண்டது. அப்போது பூவுலகின் நண்பர்கள் குழுவின் திரு.ரமேஷ் கருப்பையா வந்தார்.நிறைய சுற்றுச்சூழல் தகவல்கள் சொன்னார். அவர் கொடுத்த ஒரு மரம் வளர்ப்பு விழிப்புணர்வுத் தாளில் இருந்த கீழ்க்கண்ட படம் என்னை மிகவும் கவர்ந்தது.





கூடங்குளம் அணுமின் நிலைய ஆபத்தை மக்களிடையே பரவலாக எடுத்துச்செல்லும் திரு.முத்துக்கிருஷ்ணன் வந்திருந்தார். பூவுலகின் நண்பர்கள் குழு உண்மையான அக்கறையுடன் செயல்பட்டுவருகிறார்கள்.    

அந்தக்குழுவில் அனைவரும் தன்னார்வலர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் இயங்கு பவர்கள். புவிகாக்கும் நோக்கத் துக்காக ஒன்றிணைந்திருக்கிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை பற்றி சிந்தையைத் தூண்டும் ஒரு சிறந்த 64 பக்க விளக்கப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். விலை: ரூ15.மட்டுமே! 



 
மிகக்குறைந்த விலையில், நம் அடுத்த தலைமுறைக்கு , ஓரளவு கெடாத பூமியை விட்டுச்செல்லும் அத்துனை உண்மைகளையும் சிறு சிறு நூல்களாக்கி வழங்குகிறார்கள். அவர்கள் கடைக்கு மறக்காமல் செல்லுங்கள்.!

பக்கத்திலேயே, ஆல் இந்தியா ரேடியோவின் கடை இருந்தது. என்னத்தைச் சொல்ல? போய்ப் பாருங்கள்! என்ன விற்கிறார்கள் என்று தெரியும்.

கடைசியாக, டிஸ்கவரி வாசலில்..(கடை எண்:334) கேபிள், கே.ஆர்.பி.செந்தில், ஓ.ஆர்.பி ராஜா அண்ணன், பிலாஸபி பிரபாகரன், மெட்ராஸ்பவன் சிவக்குமார், மேலும் பாண்டியிலிருந்து கேபிளைச் சந்திப்பதற்காகவே வந்திருந்த வாசகர் என்று ஜமாவில் சங்கமித்தேன். பதிவுலகின் பலம் குறித்து பேசிக்கொண்டிருந்துவிட்டு சங்கத்தைக் கலைத்தோம்.




← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →