பத்தொன்பது நிமிடங்களாக, பச்சை விளக்கே போடாமல்
பாம்புபோல் வாகனக்கூட்டத்தை நிற்கவைத்த, பச்சையப்பா கல்லூரிக்கருகிலேயே யோசித்திருக்கவேண்டும். இன்று அப்துல் கலாம் அவர்கள் வருகிறாரே உள்ளே நுழைவதற்குள் நாக்கு,பேக்கு என அனைத்து
உறுப்புகளும் தள்ளிவிடும் என்று! வாகனத்தை உறுமிக்கொண்டே நின்று, நின்று, சென்று சென்று
விருகம்பாக்கத்திலிருந்து, புத்தகச்சந்தையில் சென்று வாகனம் யதாஸ்தானத்தை அடைவதற்குள்
1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஆகியிருந்தது. மொத்த தூரம் 6.8 கிலோமீட்டர் என்று கூகிள்
சொல்கிறது. இதே நேரத்தில் பைக்கில், புதுகையிலிருந்து மதுரை (109கி.மீ)சென்று விடலாம்.!!
வாழ்க சென்னைப் போக்குவரத்து…!!
உள்ளே நுழைந்தவுடன் மீண்டும் புத்தகப் பட்டியல்
எடுக்க ஆரம்பித்தேன். நேற்று விட்ட இடத்திலிருந்து தொடங்கினேன். மீண்டும் நான்கு வரிசைகள்! அப்போது பலாபட்டரை ஷங்கர் அவர்கள் வந்து லந்தினார். நான் நேற்று எழுதியிருந்த கூடங்குளம் விழித்தெழும்
உண்மைகள் புத்தகம் வாங்கவேண்டும் என்றார். அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த
நூலின் ஆசிரியர் திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்களே எதிரில் வந்தார். நான் ஓடிச்சென்று
அவரை மனம் நிறைந்து பாராட்டினேன். ஏனெனில் அந்தப் புத்தகம் எனக்கு பல அதிர்ச்சிகளை
அளித்திருந்தது. தூத்துக்குடி மக்கள் மட்டும் பாவம் என்று நினைத்திருந்திருப்போம். அது தவறு ! நாமும் பாவம்! ஏனெனில் கூடங்குளத்தினால் நாமும் பாதிக்கப்படப்போகிறோம் என்ற
உண்மையை அந்த நூல் உணர்த்தியிருந்தது. அதை அவருடன் பகிர்ந்துகொண்டேன். அவரும் மிகவும்
ஈடுபாட்டுடன் பேசினார். பின்னர் ஷங்கரும் நானும் சென்று, அவருக்கான அந்த நூலை வாங்கினோம்.
தேனம்மை லட்சுமணன் அவர்களின் ’சாதனை அரசிகள்’
நூல் வெளியீட்டுக்கு அழைத்திருந்தார்கள். டிஸ்கவரியின் ஸ்டாலுக்குச் சென்றேன். அங்கு
பல சாதனைப் பெண்கள் அமர்ந்தும், உலவிக்கொண்டும், உரையாடிக்கொண்டும் இருந்தார்கள். நான்
இயக்குநர் நந்தினியுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களது குட்டிப்பாப்பாவுடன் விளையாடினேன்.
பின்னர் பெருந்தலைகளெல்லாம் திரளாக வர ஆர்மபித்தார்கள்.
தேனம்மை லட்சுமணன், அவர்களின் புத்தக வெளியீட்டுவிழாவுக்கான முஸ்தீபுகளில் இருந்தார். அப்போது அண்ணன் அப்துல்லா கையில் பையும், பை நிறைய காமிக்ஸுமாக வந்தார். டெல்லியில் டேரா அடித்துவிட்டு வந்திருந்தார். அரட்டையை ஆரம்பித்தோம். டிஸ்கவரி வாசலில் ஒரு மினி பொதுக்கூட்ட அளவில் நான் கேபிள், கே ஆர் பி, லக்கி, MSK,
ரோமியோ, இயக்குநர் நவீன், இன்னும் சில பதிவர்கள் என்று கச்சேரி களை கட்டியது. புத்தக
வெளியீடு தாமதமானதால் கொஞ்சம் சுற்றிவிட்டு வருவோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினோம்.
அடுத்த வரிசை செல்லும்போது, திரு.பாரதி மணி அவர்கள் எதிரில் டிஸ்கவரி ஸ்டாலை தேடிக்கொண்டு
வந்தார். நாங்கள் அவரைப்பார்த்து வரவேற்று, கடையை நோக்கி கூட்டிச்சென்றோம். புத்தக
வெளியீட்டு விழா இனிதே நடந்தது. இந்திகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சிக்குழு ஒளிப்பதிவு
செய்து, பேட்டிகளெல்லாம் எடுத்தது.
பின்னர் சங்கம் கலைக்கப்பட்டு, நான் தனியனாக
மீண்டும் என் வேட்டையைத் தொடர்ந்தேன். நண்பர் செல்வக்குமார் இணைந்தார். அவருடன் ஸ்டால்
எண்: 99 க்கு சென்றோம். அங்கு அஜயன் பாலாவின் குழந்தைகளுக்கான திரைப்பட புத்தகம் வெளியீடு
நடந்து முடிந்திருந்தது. அப்படியே மீண்டும் பிரிந்து நான் விசில் ஊதும் வரை வேட்டையைத்
தொடர்ந்தேன்.
வெளியில் வந்து கேபிள்,யுவகிருஷ்ணா,கே ஆர் பி,
அவரது நண்பர் என ஒரு ஒதுக்குப்புறத்தில் அமர்ந்து பேசிவிட்டு , பூந்தமல்லி நெடுஞ்சாலையில்
உள்ள ஆற்காடு மெஸ்ஸில்,லக்கி தவிர மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்
வாசிக்க நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்
1.
பிரமிள்
கவிதைகள் – விலை 165.00 -அடையாளம்- கடை எண்: 323
2.
கூடங்குளம்
விழித்தெழும் உண்மைகள்- அ.முத்துக்கிருஷ்ணன் – ரூ.15 – பூவுலகின் நண்பர்கள் – கடை எண்:
71
3.
வெள்ளை
மொழி – விலை 200 – அடையாளம் – 323
4.
சிந்தனைக்குரிய
சிற்றிலக்கியங்கள் – ப.முருகன் – ரூ.60 –அடையாளம் - 323
5.
நியான்
நகரம் – ஷம்மீர் - ரூ.200 - பாதை – கடை எண் 318
6.
இந்தியா
ஒரே நாடா ?-பெரியார் – ரூ. 5 – எதிர் – கடை எண்: 222
7.
மார்லன்
பிராண்டோ – அஜயன் பாலா- பரிசல் -கடை எண் – 123
8.
பூமி
மூழ்கிக்கொண்டிருக்கிறது –விஞ்ஞானி பொன்முடி –ரூ.70- நியூ செஞ்சுரி – கடை எண்: F53
9. ஒரு
தலைமுறை தெலுங்குச் சிறுகதைகள் – தொகுப்பு : டி.ராமலிங்கம் – பூ.அ. துரைராஜ் - ரூ.80
(உண்மை விலை: 160)- சாகித்ய அகாடெமி –கடை எண்: 166
10. மலையாளச் சிறுகதைகள் –புஷ்பவேணி கோவி – ரூ.35
(உ.விலை: 70)- சாகித்ய அகாடெமி
தெர்மோகோல் தேவதைகளும், கூடங்குளமும் படித்தாயிற்று…பார்வை
விரைவில்..
அனேகமாய் இனி புத்தகக்காட்சி செல்ல இயலாது
என்று எண்ணுகிறேன். பார்ப்போம்.
