தீவிரவாத(த்துக்கு) மருத்துவம்- பாகம் 3

11 Jan 2009 · சுரேகா சுந்தர்

சென்ற ஆண்டின் இறுதியில் எழுதி.....நீண்ட இடைவெளிக்குப்பிறகு...இதைத்தொடர்கிறேன்.


அரசு என்பது அதிகாரிகளால் ஆனது !
இன்று அதிகாரிகளால்தான் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதின் சூட்சுமத்தை உணர்ந்துள்ளார்கள் என்பது சர்வநிச்சயம்.

அதிகாரிகள் ஒரு விதமான தீவிரவாதத்தை நம்மீது பிரயோகித்துக்கொண்டே இருக்கிறார்கள்.அரசாங்கம் (மேல்மட்டம்) வெளியிடும் எந்த ஒரு நலத்திட்டமும் மக்களை வந்து அடையாமல் பார்த்துக்கொள்வதில் அவர்களின் பங்கு மேலோங்கி நிற்கிறது.

லஞ்சம்...- இந்தப்பதத்தை கண்டும் பிடித்து, கட்டவிழ்த்தும் விட்டு இப்போது அது நம்மை விழுங்குமளவுக்குச்செய்திருக்கிறார்கள்.
முன்னெல்லாம் சட்டத்தை மீறிய செயல்களுக்கு லஞ்சம் வாங்கினார்கள். பின்னர் தங்கள் வேலையைச்செய்வதற்கே லஞ்சம்...! இப்போது கொஞ்சம் முன்னேறி...அரசு அலுவலகங்களில் அடிக்கடி கேட்கும் வசனம்...அவரு ரொம்ப தங்கமான அதிகாரி..கைநீட்டி காசு வாங்கிட்டாருன்னா கண்டிப்பா செஞ்சு குடுத்துருவாரு! - அப்படியெனில் காசு வாங்கியும் செய்துகொடுக்காத நிலையில்தான் இன்றைய லஞ்சம் இருக்கிறது. இது எந்தவகை மிதவாதம்?

எல்லா மட்ட அரசு ஊழியர்களும் தன் நலம் மட்டுமே பெரிதென்று சிறிய - பேசித்தீர்க்கக்கூடிய - பிரச்னைகளுக்குக்கூட ஒரு நகரத்தின் செயல்பாட்டையே ஸ்தம்பிக்க முயற்சிப்பது எந்தவிதமான அஹிம்ஸாவாதம்.?


மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று முதலமைச்சர் அறிவித்த அடுத்தநாள் டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்கு என்று போர்க்கொடி பிடிப்பதற்குப்பின்னால் எந்தவிதமான சமூக அக்கறை உள்ளது?

உளவுத்துறையின் மெத்தனப்போக்கினால்தான் இந்த தாக்குதல் நிகழ்ந்தது என்று ஊருக்கு ஊர் வாய்கிழிய, காகிதம் கிழிய சொல்லப்படுகிறதே..அப்படி அது உண்மையெனில் அது அதிகாரிகளின் குறைபாடுதானே! கார்கரே மாதிரி துணிச்சல் மிக்க மிகச்சிலரையும் இது போன்ற சம்பவங்களில் பலிகொடுக்க வைத்தது எது?

தன் சொற்ப படிக்காசுக்காக, ஒரு தொலைதூரப்பேருந்தில், கடைசி நிறுத்தப்பயணிகள் மட்டும்தான் முதலில் ஏறலாம். அவர்களைத்தவிர வேறு யாருக்கும் ஏறும் உரிமை இல்லை என்று ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் அராஜகம் செய்யும் நடத்துனர்களை எந்தவிதத் தீவிரவாதிகள் என்பது?

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிவிட்டு, அவர்களையே அடிமைகளைப்போல் நடத்தும், (அ)நியாய விலைக்கடைகள், மின்வாரிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பொதுமருத்துவமனைகள், வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், தாசில்தார் மற்றும் இன்ன பிற அலுவலகங்களில் இருப்பவர்களை எந்தவித மனிதர்கள் பட்டியலில் சேர்ப்பது?

எத்தனையோ கேடுகெட்ட ஒப்பந்தக்காரர்களை வளர்த்துவிட்டு, அவர்களிடம் பிச்சையெடுத்து வாழ்ந்து, இப்போது மாட்டிக்கொண்டு, நாளை வெளிவந்துவிடப்போகும் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியின் செயல்பாட்டில் எந்தவிதமான மிதவாதம் இருந்திருக்கமுடியும்?

கடைமட்ட ஊழியர் முதல் மேல் மேல் மேல் அதிகாரி வரை - சம்பளம் பத்தவில்லை - என்ற சப்பைக்காரணத்துடன் ஊரையே கொள்ளையடிப்பது எந்தவிதமான அணுகுமுறை?, இவர்கள் விலைவாசி உயர்வுக்காக என்றாவது ரோட்டுக்கு வந்திருக்கிறார்களா என்றால் ...ஹி ஹி என்று சொறிவார்கள்..!

ஒரு சராசரிக்கணக்குப்பார்த்தீர்கள் என்றால், ஏழைகளிடம் எந்த அரசியல்வாதியும் லஞ்சம் வாங்குவதில்லை. அவர்களுக்குக்கொடுக்க
வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள் . அவ்வளவுதான்..! ஆனால் 
அதிகாரிகள்தான் ஏழைகளிடமும் ஐந்து , பத்து என்று பிச்சையெடுத்து உழைப்பையும் சேர்த்துச்சுரண்டும் அசிங்கம் பிடித்தவர்கள்..!
இவர்கள் நசுக்கிய குடும்பங்கள் எத்தனை என்று கணக்கெடுத்தால்தான் தெரியும். தீவிரவாதத்தில் நாம் இழந்த உயிர்களைவிட இவர்களால் நொந்து இறந்தவர்கள் அதிகம் என்பது !

அதிகாரிகள் நேர்மையாகவும், எந்த அரசியல்வாதிக்கும் தலையாட்டாமல் இருந்தால், அவர்கள் உயிருக்கு ஓரிரு இடங்களில் ஆபத்து நேரும்போது கண்டிப்பாக கடைநிலை மனிதன் அவர்களைக்காக்க துணிந்து இறங்குவான். ஏனெனில் அவனுக்கு முதலில் அரசாங்கத்தின் வாசல் கதவாகத்தெரிவது அதிகாரிகள்தான்.! நல்ல அதிகாரியை இடமாற்றம் செய்யாதே என்று போராடிய 
வரலாறுகள் நிறைய உண்டு!

அதிகாரிகள் மனதுவைத்தால் அவர்களது தீவிரவாதத்திலிருந்து உலகம் தப்பும் என்பது சர்வ நிச்சயம்...அடுத்து தனிமனிதனுக்கு வருவோம்.

(தொடரும்)
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →