வேலையில்லாத்
திண்டாட்டம் என்பது ஒரு காலகட்டத்தில் நம்மை அச்சுறுத்தியது. இப்போது வேலைக்கு ஆளில்லாத்
திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. அதாவது, வேலைக்குத் தகுதியான ஆட்கள் இல்லாமல், நிறுவனங்களும்
, சிறு முதலாளிகளும் தவிக்கிறார்கள்.
ஒரு
பெரிய கணிப்பொறி நிறுவன மேலதிகாரியும், ஒரு அச்சக உரிமையாளரும் ஒரே மாதிரிதான் புலம்புகிறார்கள்.
“இந்தக்காலத்துப்
பசங்களுக்கு, வேலை பாக்கணும்கிற எண்ணமே இல்லை சார்.! அதுவும் நேர்மை, நாணயம், உழைப்புல
எல்லாம் நம்பிக்கையே இல்லை. பொறுப்பே இல்லாம ஏதாவது வேலை கிடைக்குமான்னு பாக்குறாங்க!
பொறுப்புகளை எப்படி தட்டிக்கழிக்கிறதுன்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க..! நாங்கள்லாம்
எங்க மேலதிகாரிக்கும், முதலாளிக்கும் பயந்தோம். இப்போ நாங்கதான் எங்க ஊழியர்களுக்கு
பயப்படுறோம்..!
எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஆராய இப்போது நேரமே
இல்லை. நடந்த தவறை உணரும் தருணத்தில் இருக்கிறோம். ஏனெனில் இன்றைய உயர்கல்வி மாணவர்களுக்கு
அத்தகைய வேலைத்தகுதி மிகவும் குறைவாக இருக்கிறது என்பதையே அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக
இல்லை.
ஆனால், உண்மை அப்பட்டமாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளில் 17 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்குத் தகுதியானவர்கள்.
மற்ற பட்டதாரிகளில் 23 சதவீதத்தினர் மட்டும் தகுதியானவர்கள். இதுதான் நிலைமை. ஆனாலும்
, தகுதியற்ற 70-80 சதவீதத்தினரை வைத்துத்தான் நிறுவனங்கள் ஓட்டிக்கொண்டிருக்கின்றன.
இந்த
அடிப்படையில், சமீபத்தில் ஒரு பொறியியல் கல்லூரியில் வேலைத்தகுதி ஆய்வு ஒன்று நடத்தினோம்..
இளைஞர்களின் கவனிக்கும் திறன், தகவல் தொடர்பு, குழு மேலாண்மை, நேர நிர்வாகம், சூழல்
அறிவு , கற்பனைத்திறன் ஆகியவற்றில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று சோதித்ததில்..மிகவும்
அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இதில் அவர்களது கல்வி அறிவை சோதிக்கவே
இல்லை என்பது தனி !
மொத்தம் 230 மாணவர்கள் பங்கேற்ற ஆய்வில் , நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தகுதியுள்ள
மாணவர்கள் 12 பேர்தான்…!! இதுதான் இந்தியா முழுமைக்குமான நிலை…
அவர்களது
கவனிக்கும் திறன் மிகவும் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதில் ஒரு கேள்வி :
ரமேஷின்
அப்பாவுக்கு மூன்று மகன்கள். அவருக்கு கார்கள் என்றால் மிகவும் பிரியம். ஆகவே முதல்
மகனுக்கு மாருதி என்றும் இரண்டாவது மகனுக்கு ஃபியட் என்றும் பெயர் வைத்தார். மூன்றாவது
மகனுக்கு என்ன பெயர் வைத்திருப்பார்..?
96%
மாணவர்கள் ஏதாவது ஒரு கார் கம்பெனியின் பெயரைத்தான் எழுதியிருந்தார்கள்.
4%
பேர் மட்டும்தான்.. ரமேஷ் என்ற சரியான பதிலை எழுதியிருந்தார்கள். பொதுவாக, இப்படித்தான்
எல்லாக் கேள்விகளுக்கான பதில்களும் இருந்தன.
புத்திசாலித்தனத்தை விட , பொறியியல் கல்வியின் மதிப்பெண்கள் மேல்தான் அவர்களது கவனம் அதிகமாகியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் திறமையை நிரூபிக்க, அந்தப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஒரு ஏரோநாட்டிக்கல் மாணவனிடம் கைரோஸ்கோப் என்றால் என்ன ? அது எப்படி வேலை செய்கிறது என்று கேட்டேன். மூன்றாம் வகுப்பு மாணவனிடம், மோர்ஸ் விதி கேட்டதுபோல் விழிக்கிறான்.
அவர்களுக்கான களம் தவறாக இருக்கிறது அல்லது சமூகச்
சூழல் அவர்களைக் கற்றலிலிருந்து தள்ளி வைக்கிறது. நட்பு, ஊடகம் என்று பல்வேறு பாதிப்புகளும்
சாதகமாக இல்லை. எது எப்படியோ, அவர்களை வேலைக்குத் தகுதியில்லாதவர்களாக நாமும் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
இது ஒரு
சோறுதான்..!! மொத்த இந்தியாவின் நிலையும் இதுதான் என்பது அடுத்த ஆபத்து.. ! ஏனெனில்,
இந்தியாவில் 2020ம் ஆண்டு, 20 கோடி வேலை வாய்ப்புகள் இருக்கப்போகிறது. அப்போது இதேபோல்
இளைஞர்கள் இருந்தால், நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து வேலையாட்களைக் கொண்டுவரப்போவது
நிச்சயம்.
இப்போதே ஒரு கட்டிட நிறுவனம், பிலிப்பைன்ஸிலிருந்து 300 தொழிலாளர்கள், பொறியாளர்களை இறக்குமதி செய்திருக்கிறது.
முன்னால்..
வேலை
இல்லாதவந்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைக்காரன்..
ஆனால்
இப்போது
வேலை
உள்ளவந்தான், வேலை தெரியாதவந்தான் விவகாரமான வேலைக்காரன்.!
கல்லூரிகளும், பெற்றோரும் விழித்துக்கொள்ளவேண்டிய
நேரம் இது..!!
