இயற்கை கொடையினைக்காப்போம் -3

08 Dec 2008 · சுரேகா சுந்தர்



நிலத்திலெல்லாம் நோயே விஞ்சும்!
நீருக்கெல்லாம் உயிர்கள் கெஞ்சும்!
காற்றுக்காட்டில் கனலே மிஞ்சும்
வான் மண்டலம் வழியின்றி அஞ்சும்!
சுவாசத்தில் விஷமே துஞ்சும்!
நெருப்பு மட்டுமே உடலைக் கொஞ்சும் !

சூடு அதிகம் ஆகுமென்று
கொஞ்சம்கூடக் கலங்கவேண்டாம்.!
கடல்மட்டம் உயர்ந்துவந்து
நீருக்குள்ளே வெதுவெதுப்பாய்
மூச்சுத்திணறி மூழ்கிச்சாவோம்.!


நம் வீட்டுப்பெரியவர் 
ஒருவர் நலமாக இருக்கின்றார்
நல்வாழ்க்கை நமக்காக
நயமாகத்தருகின்றார்.
அவருக்கும் அகவைகள்
ஆக ஆக அவர் சதை பிய்த்தெடுத்து
ஆசைமகனுக்குக்கொடுப்போமா?
அவர் கண்கள் கொய்தெடுத்து
கல்லாங்காய் ஆடுவோமா?
அவர் கால்கள் கொண்டுவந்து
கட்டில் கால் ஆக்குவோமா?
அவர் கைகள் ஆய்ந்துவந்து
அரிவாள்கள் செய்வோமா?
நல்லவேளை இன்றுவரை
நாம் அதனைச்செய்யவில்லை!
என்று மட்டும் பூரிக்காதீர்கள்!

எப்போதோ அச்செயலை
செய்ய நாம் தொடங்கிவிட்டோம்.
இத்தனை கோடி ஆண்டுகளாய்
எடுத்து வளர்த்த இயற்கையை
கந்தலாக்கிக் காயவிட்டு
கண்களையும் நோண்டிவிட்டு
கர்ப்பப்பையை பொசுக்கிவிட்டு
சிந்தையில்லாம நாமும்
சில்லறைகள் சேர்க்கின்றோம் !

என்னதான் செய்வதிங்கே!
இப்படியே உலகம் நிற்க?

நிலம் காக்கும் யோசனைக்காய்
நெருடுவதைச்சொல்லுகிறேன்.
ஒரு வீடு வாங்குங்கள்!
மற்ற மனைகள் யாவற்றிலும்
மரங்கள் மட்டும் வளருங்கள் !
விவசாய நிலத்தை மட்டும்
வாங்காமல் தவிருங்கள்!


நீர் காக்கும் யோசனைக்காய்
நேர்மையாய்ச்சொல்லுகிறேன்.
ஒற்றைக்குவளை நீரெடுத்து
ஒரு நிமிடம் நில்லுங்கள்!
கையில் உள்ள காசுக்கான
கஞ்சத்தனமாய் எண்ணுங்கள்!
நீர் குறைத்து செலவிட்டு
மீண்டும் கங்கை காட்டுங்கள் !

காற்று காக்கும் சிந்தனைக்காய்
கணக்கின்றி செயல்கள் உண்டு.!
வாகனங்கள் பயன்பாட்டில்,
வீட்டின் தட்ப செயல்பாட்டில்,
எரிக்கும் குப்பைகளின்
எஞ்சுகின்ற புகைக்காட்டில்,
எல்லா இடங்களிலும்
இன்றிலிருந்து சிந்தியுங்கள்

வானம் காக்கும் யோசனையை 
காற்றுச்செயலே செய்துவிடும்!
விஞ்ஞானிக்கூட்டங்களும்
விவரமறிந்து வென்றுவிடும்.!

நெருப்பை நாம் காக்கவேண்டாம்
அது தரும் அவஸ்தை நீங்க
அசராமல் அன்புசெய்வோம்!
அங்குலமாய் மனிதர்களின்
பொன் கரங்கள் பற்றி நிற்போம்.

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →