இயற்கை கொடையினைக்காப்போம் -2

08 Dec 2008 · சுரேகா சுந்தர்



வளரும் வரை இவனும்
வானம் பார்த்து மகிழ்ந்தான்
மழையைக்கண்டு முகிழ்ந்தான்.
கிடைத்த உணவை பயிரிட்டு
காட்டுக்குள்ளே திரிந்தான்.
வயிற்றுக்குஎல்லாம் கிடைக்கும் 
இவனுக்கு
மூளைக்குக் கிடைக்காமல்
மோதி மோதித் திமிர்ந்தான்.

ஆரம்பமானது வேட்டை!
தேவைகள் போக இவன்
சேர்க்க நினைத்த பண்டங்கள்
இயற்கையின் உறுப்புக்கள்!

வேட்டையாடும் விலங்கினத்தின்
தோலுக்கும், கொம்புக்கும்,
தோற்றத்தில் பொலிவு கொண்ட
மேல் கடைவாய்ப்பல்லுக்கும்
ஆசைகள் அதிகமாகி,
அளவுக்கும் மீறி வந்து
அறுத்தெரிந்தான்
இவன் வளர்ந்த பரிணாமத்தின்
சங்கிலியை!
இயற்கைக்கு அப்போதே
இதயவலி கண்டது.

நிலத்தின் ஆழம் தோண்டி,
கனிமங்கள் கண்டெடுத்து,
ஆயுதம் செய்து, வீடுகட்டி, 
ஆபரணம் அழகுறப்பூட்டி,
எரிபொருளும் கண்டெடுத்து
எடுப்பாக ஊர்வலம் போய்
பூமியின் உடலெங்கும் 
பொறுப்பின்றிப் பொத்தலாக்கி 
உவகையுடன் மெத்தையிட்டான்.

நீரினில் கழிவு சேர்த்து,
நெடுந்தூரம் ஓடவிட்டு
பாரெங்கும் அதனை ஆறென்று
சொல்லவைத்து
மீன்கள் செத்து மிதந்ததை மட்டும்
மிச்சமின்றி துடைத்துவிட்டான்.
மரங்களைக் கொன்றுவிட்டு
மழையில்லை என்று வேண்டி
பெரும்பொருள் செலவு செய்து
வேள்விகள் மூலம் மட்டும் 
புகைக்கூட்டம் கூடச்செய்து
மேகமென்று கூச்சலிட்டான்.

காற்று மட்டும் என்ன
கடவுளா - இவனிடம் மீள?
வேகத்தின் வியாதிவந்து 
வாகனங்கள் பெருகப்பெருக,
தட்பம் மட்டும் தேடித்தேடி
தனிமனிதன் உருக உருக
காற்று மண்டலம் தன்
கற்பிழந்து போனதிங்கே !
மூச்சுக்காற்று தந்த பூமி
நச்சுக்காற்றும் தருகிறது
நாலுக்கொன்று இலவசமாய் !



அவசரத்தின் நிறைவிளைவாய்
அறிவியலின் துணைவிளைவாய்
ஆகாயப்பந்தலில்
ஆயிரமாய் செயற்கைக்கோள்கள்
இவற்றிலிருந்து பிரிந்து சென்ற
எச்சங்கள் மட்டுமே கொண்டு
இன்னொரு உலகம் செய்யலாமாம்  !
வேடிக்கை மனிதனின், 
அண்டை நில நிகழ்ச்சிகளை
வேடிக்கை பார்க்கும் ஆசைக்கு
வானமும் தன் மானத்தை
வழங்கிவிட்டுதான் நிற்கிறது.

நெருப்பு மட்டும் இவனிடம்
நிரந்தரமாய்த்தப்பித்தாலும்
அதனையும் இவனது
அழிக்கும் ஆசை 
நாயகியாக்க்கினான்.
அழிக்கும் ஆசைநாயகியாக்கினான்.
எல்லா இடங்களிலும்
இவன்போட்ட குண்டுகளில்
பூமிக்கு ஏற்பட்ட கொப்புளங்கள்
ஏராளம்.
எரிமலையாய்க்குமுறித்தான்
ஏறிவந்து பார்க்கிறது!
யாரடா இவன் நம்மைவிட
மேலாய் என்று!

இப்படித்தான் இயற்கையும்
சீரழிந்து போகிறது.
அதுவும் தன் பங்குக்கு
அடிக்கடி நோகிறது
கொந்தளிப்பாய்,
புவி வெடிப்பாய்,
கடும் வெயிலாய்
கொடும் குளிராய்
பெருமழையாய்
சுழற்காற்றாய்
தான் படைத்த மனிதனுக்கு
தண்டனைகள் கொடுக்கிறது!
கொடுக்கிற தண்டனையை
கொசுவைப்போல் துச்சம் செய்து
விசுவாசம் இல்லாமல் 
வெறி பிடித்து அலைகின்றான்.!


இப்படியே போனால்
என்னதான் ஆகும்?

(மீண்டும் தொடரும்..! )
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →