ஒற்றை நொடி வாழ்க்கை..பாகம் 2

04 Mar 2008 · சுரேகா சுந்தர்

             நம்ம ஆளும் அலட்டிக்காம சொன்னாரு..
            'நானும் அடிக்கலாம்னுதான் கிட்டக்க போனேன். தண்டவாளத்தை விட்டு எறங்கி ஓட ஆரம்பிச்சுட்டான்.. தொரத்தி அடிக்கறதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சு' ன்னாராம்.
             ஒரு விஷயத்தை தப்பா புரிஞ்சிக்கிட்டோம்னா அதை எவ்வளவுதான் கவனமா செஞ்சாலும் ரிஸல்ட் தப்பாத்தான் ஆகும். நம்ப புத்திசாலித்தனம் அந்த நொடிகளில் விவரமா பயன்படுத்தப்படணும். அதைத்தான் ஆங்கிலத்தில் அழகா சொல்லுவாங்க...Presence of Mind ன்னு.. அதாவது மனம் அந்த இடத்தில் கவனமா இருந்தால் கண்டிப்பா சிறப்பா செயல்படலாம். சில சமயங்களில் அவசரப்பட்டும் அந்த நொடி முடிவெடுத்துடக்கூடாது.

ஞாலம் கருதினும் கைகூடும்- காலம்
கருதி இடத்தாற் செயின்..னாரு வள்ளுவர்!

          அதுபோல சந்தர்ப்ப சூழலையும் பாத்துக்கணும். அப்பதான் உலகையே வெல்லமுடியும். சூழலைப்பாக்காம எது செஞ்சாலும் சொதப்பிடும்!
            நம்ம மொக்கச்சாமி செத்துப்பொயிட்டாராம். அவருக்கு நரகம் அலாட் பண்ணியிருந்தாங்களாம்.! அன்னிக்கு நரகத்தில் கடவுள் விஸிட் இருந்ததால, எமன் ரொம்ப பரபரப்பா இருந்தாராம். உன் அக்கவுண்ட்டெல்லாம் பாத்துக்கிட்டுருக்க முடியாது. இங்க வரிசையா ரூம் இருக்கு! அதில் எது உனக்கு பிடிச்சிருக்கோ அதை வந்து என்னிடம் சொல்லு..! நான் திறந்துவிடச்சொல்றேன்னுட்டாராம். மொக்கச்சாமியும் அவசரமா, ஓடிப்போய் ஒவ்வொரு ரூமா பாக்க ஆரம்பிச்சாராம். எல்லா ரூமும் கண்ணாடியால் ஆகியிருக்கு! உள்ள நடக்கறதெல்லாம் தெளிவா தெரிஞ்சுதாம். முதல் ரூமில் எல்லாரையும் கொதிக்கிற எண்ணெய்ல குளிப்பாட்டிக்கிட்டிருந்தாங்க! ஆஹா இது வேண்டாம்னு, ரெண்டாவது ரூமை பாத்தாராம். அங்க பனிக்கட்டில படுக்க வச்சு அடிச்சிக்கிட்டிருந்தாங்களாம்.! இதுவும் வேண்டாம்னுட்டு மூணாவது ரூமைப்பாத்தாராம். அங்க எல்லாரும் காபி குடிச்சிக்கிட்டிருந்தாங்களாம். அவருக்கு ஒரே சந்தேகம் ப்ளஸ் சந்தோஷம் ...அட! நரகத்தில் காபி குடிக்கிறதெல்லாம் ஒரு தண்டனையான்னுட்டு, எதுக்கும் சந்தேகத்துக்கு கேட்டுக்கலாம்னு கண்ணாடிக்கதவை தட்டி...உள்ள இருந்தவர்க்கிட்ட ' என்ன? காபியா குடிக்கிறீங்க?' ன்னு ஜாடைல கேட்டாராம். அவரும் ஆமாம்னு சொல்ல, மொக்கச்சாமிக்கு ஏக குஷி..! உடனே எமன்கிட்ட ஓடிப்போய்
'அந்த மூணாவது ரூமிலேயே போட்டுடுங்க! ன்னாராம்.

எமன் ...' கன்பார்மாத்தானே சொல்லுற..அப்புறம் மாத்தமுடியாதுன்னாராம்.

இல்லல்ல கன்பார்ம்தான்..னாராம் மொக்கச்சாமி..!

அப்ப சரி..யாரங்கே..மொக்கச்சாமிக்கு மூணாவது ரூமை திறந்து விடுங்கள்ன்னாராம் எமன் ! ரூமை திறந்துவிட்டாங்க! அவருக்கு ஒரு இடம் கொடுத்தாங்க! உக்காந்தார். ஒரு கப் காபி வந்தது. குடிக்க ஆரம்பிச்சார். அரை கப் குடிச்சிருப்பார்.

அப்ப பாத்து ஒரு எமலோக அதிகாரி வந்து...ஓகே எல்லாருக்கும் காபி டைம் முடிஞ்சிருச்சு..அவுங்கவுங்க தீச்சட்டியை எடுத்து தலையில் வச்சுக்குங்கன்னாராம்.

        ஆக..அந்த நேரத்தில் எடுக்கும் முடிவு, சூழலையும் பொறுத்து மாறணும். அது நமக்கு பயனுள்ளதா இருக்கணும். அதெல்லாம் ஒவ்வொரு நொடி வார்த்தைகளையும் கவனிச்சாத்தான் முடியும்.

         கில்லி படத்தில் ... த்ரிஷாவை காப்பாத்துறதுக்காக விஜய் ரொம்ப தூரம் ரிஸ்க் எடுத்து பயணம் பண்ணுவாரு.. ஒரு சமயத்தில் ரோட்டில் போகும் ஒரு வேனை நிறுத்தி லிப்ட் கேப்பாரு...அதுலேருந்து இறங்குறது, அவுங்களை பிடிக்க துரத்தும் பிரகாஷ்ராஜ்.! இவங்களுக்கு அதிர்ச்சி! அப்ப பாத்து நல்லா மாட்டிக்கிட்டியா? தனலெட்சுமிதான் என் உயிருன்னு ஒரு நீள டயலாக் பேசுவார் பிரகாஷ்ராஜ். அப்புறம்.. விஜயை அடிக்கச்சொல்லி அடியாட்களுக்கு உத்தரவிடுவார். அவங்களும் நெருங்குவாங்க..! சடார்ன்னு காப்பாத்த கூட்டிட்டு வந்த த்ரிஷா கழுத்திலேயே கத்தியை வச்சு மிரட்டி...அந்த கும்பலில் இருந்து சுலபமா தப்பிப்பார் விஜய். அந்த இடத்தில், தப்பிக்க அதை விட்டா வேற வழியே கிடையாது. அந்த நேரம் பயந்திருந்தா அதோ கதிதான்.! இது பேருதான் presence of Mind. இன்னிக்கு பெரிய பெரிய நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கும் ஊழியர்களுக்கான தகுதில பெரிசா நினைக்கிறது இதைத்தான்.
            நல்ல முடிவெடுக்கணும்னாலே நாம அந்த நொடியில் வேற சிந்தனை இல்லாம வாழ்ந்தா போதும்! ஏன்னா , எல்லாத்தையும் கவனிக்கிற ஆளாலத்தான் எல்லாரும் கவனிக்கிற ஆளா மாறமுடியும்.
           
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →