புத்தகக் காட்சி – நேற்று அப்படம் கடைசி

18 Jan 2012 · சுரேகா சுந்தர்






     நேற்று (ஜனவரி 17) மதியம் சென்னை வந்து சேர்ந்ததால், புத்தகக் காட்சியின் கடைசி நாளை தரிசிக்கலாம் என்று முடிவெடுத்து, மாலை சென்று, பச்சையப்பன் கல்லூரி வாசலில் இருந்த பழைய புத்தகக் கடைகளை நோண்ட ஆரம்பித்தேன். முன்னரே நிறையபேர் நோண்டியிருப்பார்கள் போலிருக்கிறது. பெரிதாக ஒன்றும் சிக்கவில்லை. இருந்தாலும், முயற்சியைக் கைவிடாமல் தேடியதில்,
குஷ்வந்த்சிங் ஜோக்ஸ் – Rs.10
One Night @ call Center – Rs.20
பொதுக் கட்டுரைகள் – Rs.10
Tamil Nadu – A photographical Journey (Raghubir Singh) – Rs.150
அப்பாலுக்கு அப்பால் (நாவல்) – Rs.10
ஆகியவற்றை அள்ளிக்கொண்டு பு.காட்சிக்குள் நுழைந்தேன்.

நிறைவு நாள் என்ற பிரக்ஞையுடன் கூட்டம் அதிகமாக வந்திருந்தது. தமிழினியில் சிறிது நேரம் மேய்ந்துவிட்டு, ஞானபானு சென்றேன். அங்கு ஞானி அமர்ந்திருந்தார். அரைநிமிடப் பேச்சுக்குப்பின் அங்கிருந்த கூடங்குளம் பற்றிய புத்தகத்தை வாங்கிக்கொண்டு, பாதை பதிப்பகத்தின், ரணம் சுகம், நியான் நகரம் ஆகிய ஒலி நாவல்களைப் பார்த்து, கேட்டுவிட்டு அப்படியே நமது பதிவர் பஸ் ஸ்டாண்டான டிஸ்கவரி புக் பேலஸ் - 334ஐ அடைந்தேன்.

     கேபிள் ,கே.ஆர்.பி, ஷங்கர் ,அவரது நண்பர் ஆகியோருடன் அரட்டை ஆரம்பித்தது. பின்னர் ஷங்கர் & கோ விடைபெற, பேசிக்கொண்டே சில காட்சியரங்குகளுக்கு (ஸ்டால் என்பதன் நல்ல தமிழ்ப்பதம் இதுதானாம்) சென்றோம்.

     பாஸ்கர் சக்தி கடந்து சென்றார். தேனம்மை லட்சுமணன் அவர்கள் வந்திருந்தார். சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர், புத்தக விற்பனை  மற்றும் அதனைச் சந்தைப்படுத்துதல் பற்றி கேபிள் விளக்கம் தந்தார். எட்டரை மணிக்கெல்லாம் சந்தை களையிழக்க ஆரம்பித்தது. ஒரு ஆள் அவசர அவசரமாக எல்லா அரங்குகளையும் அலசிக்கொண்டிருந்தார். அம்மாவுடன் வந்திருந்த ஒரு பெண், கடைசி நிமிடத்தில் புத்தகங்களை அள்ளிக்கொண்டிருந்தாள். ஒரு பாட்டி தமிழ்ப்புத்தகம் பற்றி ஆங்கிலத்தில் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்படியே நாங்களும் ஒரு டீயைக் குடித்துவிட்டு வெளியேற எத்தனித்தோம். சென்ற வாரம் படப்பிடிப்புத் தளத்தில் தொலைந்து போன எனது ‘யூதர்கள்’ புத்தகத்தை மீண்டும் வாங்க கிழக்கு சென்றோம். அப்படியே இந்த ஆண்டு புத்தகக் காட்சியை இனிதே நிறைவு செய்து அரங்கிலிருந்து வெளியேறினோம்.

     அரங்குக்கு வெளியில், லக்கி, அதிஷா, மாமல்லன், காமிக்ஸ் விஷ்வா என ஜமாவில் ஐக்கியமாகி, பேசிக்கொண்டிருந்தோம். காமிக்ஸ் வேட்கை அதிகரித்திருப்பதாக விஷ்வா சொன்னார். கண்காட்சியின் இடையில் அச்சிடப்பட்ட அனைத்து காமிக்ஸுகளும் விற்றுவிட்டதாகச் சொன்னார். நான் எனக்கான லயன் காமிக்ஸ் COME BACK ஐ அவரிடம் கேட்டிருக்கிறேன். சிலபல சிரிப்பு வெடிகளுடன் சங்கத்தைக் கலைத்து கிளம்பினோம்.

சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்

புத்தகக் காட்சியில் சுமார் 6.5 லட்சம் புத்தகங்கள் விற்றிருக்கின்றன.

4 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்றிருக்கிறார்கள்.

முதல்முறையாக, ஒரு முன்னாள் குடியரசுத்தலைவர் வந்துசென்றிருக்கிறார்.

வெளியூரிலிருந்து குறைந்தபட்சம் 1 லட்சம் வாசகர்கள் வந்து சென்றிருக்கிறார்கள்.

சிறுவர் புத்தகங்கள் அதிகம் விற்றிருக்கின்றன.

எப்போதும்போல், சுயமுன்னேற்றம், சுஜாதா சூடான விற்பனை

கவிதைப் புத்தகங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. நா. முத்துக்குமாரின் கவிதைகள் மட்டும் விதிவிலக்கு.!அவரது புத்தகங்கள் சென்ற ஆண்டைவிட அதிகம் விற்றிருக்கிறது.

புதிதாக 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரங்கிலேயே வெளியிடப்பட்டிருக்கின்றன.


காமிக்ஸ் உலகம் விரிவடைந்திருக்கிறது. முதல்முறையாக அரங்கு வைக்கப்பட்டாலும், காமிக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் விற்று கல்லாப்பெட்டியை மட்டும் திரும்பக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இப்படியாக புத்தகக் காட்சி 2012 குதூகலமாக நிறைவடைந்திருக்கிறது.
     
         இரவு உணவை வெளியில் சாப்பிட்டுவிடலாம் என்று கே ஆர் பி உசுப்பேத்த, நானும் பொறுப்பாக தங்கமணியிடம் போன்செய்து , ‘நான் சாப்பிட வரலை! என்று சொல்லிவிட்டு உணவகம் நோக்கிக் கிளம்பினோம். பொங்கல் சார்ந்த விடுமுறை என்பதால் அந்த நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் கூட திறக்கவில்லை. ஆற்காடு மெஸ் அழுத்தமாகப் பூட்டியிருந்தது. மீண்டும் அவரவர் வீட்டுக்கே சென்று சாப்பிடுவது என்று சங்கம் தீர்மானித்தது. ’இது என்னடா சோதனை?’ என்ற ரீதியில் மேலதிகாரியிடம் பாட்டுவாங்கும் பவ்யத்தோடு , தங்கமணிக்கு மீண்டும் போன் அடித்தேன்.

     ’தூங்கிட்டியாம்மா..! இல்லை! வெளில சாப்பிடலை! வீட்டுக்கே வந்துடுறேன்..!

     ’ஏன்…கடையெல்லாம் மூடியிருக்கா?

     ஹி..ஹி.. ஆமா!

     அதான் தெரியுமே! சவுடாலா வெளில சாப்புடுறேன்னு சொல்லும்போதே நினைச்சேன்.! சரி தானா வரும்னு விட்டுட்டேன்..!

     இப்ப என்னம்மா பண்றது!

     என்ன பண்றது..? வாங்க! உங்க லச்சணம் தெரிஞ்சு ஏற்கனவே தோசை செஞ்சு வச்சிருக்கேன்.

     ரொம்ப தேங்க்ஸ்ம்மா!

     ம்க்கும்!

இவ்ளோ புத்தகம் படிக்கிறோம்.. இந்த ஒரு ம்க்கும்க்கு அர்த்தம் தெரியலையே?






← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →