’தலைவரே! நான் BLOGல் எழுதின சிறுகதைகள் ’உ’ பதிப்பகம் மூலம் தொகுப்பா வருது! அந்த ராஜி, ஜெயா அதெல்லாம்…
கதைகளின் தலைப்பையே புத்தகத்தலைப்பா வைக்காம, புதுசா ஒரு தலைப்பு வைக்கணும்..!! ஒரு
டைட்டில் பிடிங்க! ‘
இதுதான்
அன்பு நண்பர் கேபிள் சங்கர் என்னிடம் போனில் சொன்னது..!
சில தலைப்புகளைச் சொல்ல ஆரம்பித்தேன்..!
அவர்
போக்குவரத்தில் இருக்கும்போது, வண்டியை நிறுத்திவிட்டு கேட்க ஆரம்பித்தார்.
மெழுகுப்
பாறைகள்
ம்ஹூம்..
தாழம்பூத்
தாரகைகள்
ம்ஹூம்..
பாதரசப்
பறவைகள்
ம்ஹூம்
மகரந்தச் சாட்டைகள்
ம்ஹூம்..
தீக்குச்சி
தேவதைகள்
ம்ஹூம்..
தெர்மகோல்
தீபங்கள்!
ம்…இதுல
ஏதோ இருக்கே..! இதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்க?
தீக்குச்சி
தேவதைகள்!
கரெக்ட்…அப்ப
அதுல இருக்குற தேவதைகளைத் தூக்கி…இதுல போடுங்க…!
எதுல
தெர்மக்கோலிலயா?
ஆமா..
தெர்மக்கோல்
தேவதைகள்!
இதான்..இதான்
ஜி..! என் அடுத்த புக்கோட டைட்டில்!
என்று
சடுதியில் முடிவெடுத்துவிட்டார்..!!
அப்படி
உருவான தெர்மக்கோல் தேவதைகள் , சுகுமார் சுவாமிநாதனின் அற்புதமான வடிவமைப்பில் புத்தகமாக
என் கையில் தவழ்ந்தபோது மிக மிக அழகாக ஆகியிருந்தார்கள்.
சரி..
உள்ளே
என்ன எழுதியிருக்கிறார்..? அதில் சில கதைகளை பதிவில் படித்தாகிவிட்டது என்றாலும் மீதமிருக்கும்
கதைகளைப் படிக்கும் ஆர்வத்தில் ஆரம்பித்தேன்.
முதல்
கதை ஜன்னல்! இதை எப்படி வலைப்பூவில் படிக்க விட்டேன் என்று தெரியவில்லை..!
ஒரு உதவி இயக்குநன், தன் வீட்டிற்கு எதிரில் இருக்கும்
ஜன்னல் நிகழ்வுகளை வைத்து அந்தவீட்டுப் பெண்களைப்பற்றி ஒரு விஷயத்தைக் கணிக்கிறான்.
அது சரியானதா என்று முடிவு சொல்கிறது…! மிகவும் யதார்த்தமாக, கேபிளின் வர்ணனைகளும்,
சிறு நக்கல்களும் கதையை நகர்த்துகின்றன. முடிவை நான் அப்படி எதிர்பார்க்கவே இல்லை!
ஆரம்பமே அமர்க்களம்..!!
அடுத்து..பொறுப்பு…! நேரடியாகச் சொல்லாமல் சில
விஷயங்களை சம்பவங்கள் மூலம் சொல்லும் யுக்தி மிக அழகாக வந்திருக்கிறது. அந்த
மெக்கானிக் பையன் கதாபாத்திரம் மனதில் பதிகிறது.
அடுத்தடுத்த கதைகள்,
கப்பல் ராக்கையா – பெயர்க்காரணத்தில் என்ன வேண்டுமானாலும்.
ஒளிந்திருக்கும் .
சுந்தர் கடை – சொல்லாமல் சொல்லும் நம்பிக்கை
ரோடு ராஷ் -
விளையாட்டாய் நாம் உணரும் உண்மைகள்
காளிதாஸ் – கானமும், கடவுளும் விளையாடிய வாழ்க்கை
நேற்றுவரை – மனவிகாரத்தின் மௌன நீதி
மீனாட்சி சாமான் நிக்காலோ – ஆண்டுக்கணக்கில் தெரியாத
அடிவாங்கிய காரணம் ! (தலைப்பு ஒட்டவில்லை)
மகாநதி – காட்சியும், கண்ணீரும்
கருணை – வாகனம் தவறிய வார்த்தைகளின் ஆழம்!
வன்மம் – அதனினும் மிலமே!
ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை – வைத்தவனை விட எடுப்பவனிடமிருந்து
தப்பிக்கும் தந்திரம்.!
பிரியாணி – ஒரு சொட்டுக்கண்ணீருக்கு உத்திரவாதம்
சேச்சு பாட்டி –தேவதைப் பாட்டி!- கடைசி வரியின் அதிர்ச்சி – ஜெயமோகனின்
ஆயிரங்கால் மண்டபம் சிறுகதைத்தொகுப்பில் ‘ஒன்றுமில்லை’ என்ற கதையை நினைவுபடுத்தியது.
ஜெயா, ராஜலட்சுமி, ராஜி, ப்ரியா…. உண்மையான தெர்மகோல்
தேவதைகள்! ….தேவதைகள் என்றால் நல்லவர்களாக மட்டும்தான் இருக்கவேண்டும் என்று அர்த்தமில்லை. துர்தேவதைகளும் இருப்பார்கள். தெர்மகோலைப்போல…. வெப்பத்தையும் பாதுகாக்கும்…! தட்பத்தையும்
பாதுகாக்கும்! இந்த தேவதைகளும், தான் செய்வது நியாயம் என்பது போலவே எண்ணிக்கொண்டு ஓரிரு
இதயங்களை ஏறி மிதித்துவிட்டுச் செல்கிறார்கள்.
கதைகள் பெரும்பாலும், நிதர்சனத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பது
வாசகனை தன்னுடன் நெருக்கமாக உணரச்செய்கிறது. பெண்களின் சில அணுக்க உணர்வுகள் கதைகளின்
ஊடே பாய்ந்து செல்கிறது. திடீரென காண்டேகரின் கதாநாயகிகள் கண்முன்னே வந்து செல்கிறார்கள்.
ஆண்களையும் ஒரு கை பார்க்கிறது ! அதுவும் ‘நேற்றுவரை’ படித்துவிட்டு…..வெலவெலத்துப்போனேன்.
வார்த்தை
விளையாட்டுகள் கிடையாது. பின், முன், நடு நவீனத்துவங்கள் கிடையாது. சந்தோஷமாக ரஜினி
படம் பார்த்த திருப்தி இருக்கும். அதேபோல், இந்தப்புத்தகமும் படிக்க எடுத்தால், பையில்
வைத்துக்கொண்டே திரியவேண்டியதில்லை.
இதையேத்தான்
எல்லா புக்குக்கும் சொல்றீங்க! என்பவர்களுக்கு…. நாங்கள் எடுக்கும் புத்தகம் அப்படி
அமைந்துவிடுகிறது. அல்லது…அப்படி இல்லாத புத்தகத்தைப் பற்றி நாங்கள் எழுதுவதில்லை..!
நண்பர் மீது அன்பு இருக்கலாம். படைப்புக்கான பார்வைகளில் சமரசங்கள் இருப்பதில்லை.
வேண்டுமானால்,ஒரு காஃபி டேயில் சென்று ஒரு கேப்பச்சினோ
லார்ஜ் ஆர்டர் செய்துவிட்டு இந்த நூலை ஆரம்பியுங்கள். 80 பக்கங்களையும், வெவ்வேறு மனிதர்களின் வாழ்வையும் , ஒரு சுவையான காஃபியையும்
அருந்தியிருப்பீர்கள்.!
எல்லாக் கதைகளிலும் சங்கர் நாராயண் என்ற எழுத்தாளர் தெரிகிறார். பல இடங்களில் நம்மை தலைதடவி அமரவைத்து, தட்டிக்கொடுத்து, தோள்தட்டி,
கன்னம்தொட்டு கதை சொல்கிறார். சில இடங்களில் இப்படியெல்லாம் இருக்கு தெரியுமா? என்று
இயம்புகிறார். மீச்சிறு இடங்களில் அது நான் தான் என்று உண்மைக்குள் சென்று வருகிறார். கொஞ்சம் கிச்சு மூட்டுகிறார். பொதுவாக எல்லாக் கதைகளும் நம்மை சடுதியில் ஈர்க்கின்றன. நான் இணையத்தில் படித்திருந்த கதைகளே புத்தக வடிவில் படிக்கும்போது வேறு சிந்தனை, வேறு
காட்சிகள் விரிகின்றன. முக்கியமாய், எல்லாக் கதைகளிலும் உணர்வுகளுடன் தான் விளையாடியிருகிறார். தர்க்கம், சட்டம், குற்றம் , விசாரணை என்று எதையுமே தொடாமல் தனது பாதை எது என்பதை நமக்குக் காட்டியிருக்கிறார்.
இந்த ஆளுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதை
நான் பல இடங்களில், பல தருணங்களில் கண்டு வியந்திருக்கிறேன். அதன் உண்மை இந்த தொகுப்பில்
உறுதியாகிறது. கதை சொல்லும் நேர்த்தி, கதையில் தெரியும் நியாயம், காமத்தைத் தூவும்
லாவகம், எங்கு முடிக்கவேண்டுமோ அங்கு முடிக்கும் தணிக்கை, வளவளப்பு இல்லாத வார்த்தைகள்
என்று வெகுஜன எழுத்தாளராக ஒரு இடத்தைத் தக்கவைத்திருக்கிறார்.
தெர்மக்கோல் தேவதைகள் - இதுக்கு ஒரு... ‘ஓ’ போடுங்க!!
வெளியிட்ட ’உ’ பதிப்பகத்துக்கு ரெண்டு ’ஓ’ போடலாம்!! (அழிக்கப்பிறந்தவனுக்கும் சேர்த்து)
