நீண்ட நாட்களாகவே
நண்பர்கள் கேபிள் சங்கர், கே ஆர் பி செந்தில் ஆகியோர், நீங்கதான் சாவிக்குப் பிறகு,
அடுத்து மேலாண்மை சம்பந்தமாக மிகவும் எளிமையான நடையில் ஒரு புத்தகம் எழுதுங்கள் என்று
வலியுறுத்தினார்கள். சரியான விஷயம் கிடைக்காமல் தேடிக்கொண்டே இருந்தேன்.
சென்ற மார்ச் மாதம்,
என் விகடனில் எனது வலைப்பூ பற்றி வந்த அன்று, அன்பு எழுத்தாளரும், இளைஞர்களை ஊக்குவிக்கக்கூடிய
ஆசானுமான பா.ராகவன் அவர்கள் ‘லீடர்ஷிப் பற்றி ஒரு புத்தகம் எழுது! ஒரு மாசம் டைம் தரேன்
என்று ஆணையிட்டார். சில குறிப்புகளும் கொடுத்தார்.
தலைவனுக்குரிய
தகுதிகளை பல்வேறு புத்தகங்கள் பிரித்து மேய்ந்து விட்டிருந்தாலும், ஆங்கிலத்தில் வெளிவந்த
சில புத்தகங்கள் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அவற்றிலிருந்து
அடி நாதத்தை எடுத்துக்கொண்டு, நம் சூழலுக்கேற்ப ஒரு கதையாக வடிவமைத்து மெதுவாக ஆனால்
சீரியஸாக எழுத ஆரம்பித்தேன். தலைமைப்பண்புகளை தனித்தனி கட்டுரைகளாகப் படிக்காமல், ஒரு
கதையாக, நாவலாகப் படிக்கும் அனுபவத்தைக் கொடுக்க விழைந்திருக்கிறேன். ஆங்கிலத்தில்
இதனை Business Novel என்பார்கள். முழு ஈடுபாட்டுடன் செதுக்கி, எளிமையாகக் கொண்டுவர
முயற்சித்து… ஒரு வழியாய் முடித்துவிட்டேன்.
அந்தப்
புத்தகம் ’தலைவா, வா! என்ற பெயரில், பிரபல பதிப்பகமான மதி நிலையத்தால், நெய்வேலி புத்தகக்
கண்காட்சியில் வெளியிடப்படுகிறது.
புத்தகத்திலிருந்து…
”எல்லா ஊழியர்களுக்கும் திறமை இருக்கு, ! எல்லோரும் மூளையோடத்தான் நிறுவனத்தில்
வேலைக்கு சேருவாங்க! ஆனால், நம்ப மேலதிகாரிகள்தான், “நோ நோ! உன் மூளையை வெளிலயே வச்சுட்டு
வந்துரு..! எனக்கு உன் கைகள்தான் வேணும்ங்கிற நினைப்பில், தான் சொல்வதை மட்டும் அவர்கள்
கேட்டால் போதும்கிற வகையில் பயன்படுத்துவாங்க! அப்ப எப்படி நிறுவனத்துக்கு அந்த அலுவலர்
தன் பங்களிப்பைத் தருவார்.? அவர் சிந்தனை பயன்படாமலேயே போயிடும். அதுக்கு பதிலா இப்படி
வாசல்லயே எழுதிப்போட்டுடலாம்.
உங்கள் மூளைகளை வாசலிலேயே வைத்துவிட்டு வரவும். இங்கிருந்து வெளியேறும்போது
பத்திரமாக எடுத்துச்செல்லலாம்.
விக்னேஷ் சிரித்தான். சிரிப்பை மீறி இன்னொரு உண்மையும் உறைத்தது. அவனும்
அதே தவறைத்தான் செய்துகொண்டிருக்கிறான் என்பதுதான் அது!
ஆமாம். விக்னேஷ்..! நல்ல திறமைசாலிகளை வேலைக்கு வைத்துக்கொண்டு அவர்களைப்
பயன்படுத்தாமல் இருக்கும் ஆட்கள் தலைவனாகவே இருக்கமுடியாது.
சச்சின் டெண்டுல்கரை ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக கற்பனை செய்து பார்க்கமுடியுமா?
அப்படிச் செய்துவிட்டு, அவர் பெர்ஃபார்மென்ஸ் சரியில்லை என்று சொல்வது மிகவும் அநியாயம்
இல்லையா?
இதனை இவன் முடிப்பானென்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
ன்னு வள்ளுவரே சொல்லியிருக்கார். யாருக்கு எந்த வேலை செய்யத் திறமை
இருக்கோ அவர்களுக்கு அந்த வேலையைக் கொடுத்தால்தான் அந்த வேலைல ஜெயிக்கலாம்.
என்றாய்ந்து –ங்கிற வார்த்தைதான் நமக்கு ரொம்ப தேவையானது. யாரு எந்த
வேலைக்கு சரியா இருப்பாங்கன்னு ஆய்வு செய்தால்தான் வேலையை பிரிச்சுக்கொடுக்கமுடியும்.
அதுதான் ஒரு தலைவனுக்குரிய மிகவும் தேவையான குணம்..!”
ஆர்வமிருந்தால் வாங்கிப் படிக்கவும். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.! :)
புத்தகம் பற்றி நண்பர் கேபிள் சங்கரின் வலைப்பதிவு!
அன்புநிறை திரு.பா.ரா அவர்களுக்கும், மதி நிலையம் திரு.பார்த்தசாரதி அவர்களுக்கும், மேலும் என்னை
ஊக்கப்படுத்திய அத்துனை உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி!
