கல்வியை
வியாபாரமாக்கியது இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு. ஆனால் சாபத்திலும் லாபம் பார்க்கும்
கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நகரங்களில், நல்ல பள்ளிகள் என்று பெருமையாக
சொல்லிக்கொள்ளும் பத்து பள்ளிகளில்தான் தன் குழந்தைகள் சேரவேண்டும் என்று எல்லோரும்
போராடுகிறார்கள்.(றோம்.) (றேன்). அந்தப் பள்ளிகள் எந்த அளவுக்கு கல்வியைக் கொடுக்கிறார்கள்
என்று தெரியவில்லை.
ஆனால்,
ஐ.ஐ.டி கனவுடன் வளர்க்கப்பட்டு, அதற்கு மட்டுமே தயாரிக்கப்பட்டதாய் நினைத்துக்கொண்டு,
அடுத்த தெரு போஸ்ட் ஆபீஸில் மணி ஆர்டர் அனுப்பத்தெரியாதவனாய் வளர்கிறான். அமிஞ்சிக்கரைக்கு
ஆட்டோக்காரரிடம் பேரம் பேசி போகத்தெரியாதவனாய் வளர்கிறான். வெண்டைக்காயை தரம்பார்த்து
வாங்கத்தெரியாதவனாய், உறவினர்களில், யாரை என்ன சொந்தம் சொல்லி அழைப்பது என்பது தெரியாதவனாய்
வளர்கிறான். இதெல்லாம் தேவையே இல்லை. அவன் படிப்பான், பணம் சம்பாதிப்பான். அவன் எதற்கு
வெண்டைக்காயை உடைத்துப்பார்க்கவேண்டும் என்று நினைத்தால், அது இன்னும் ஈனம்.! அவன்
வீட்டு வேலைக்காரன் வாங்கிவரும் முற்றல் வெண்டைக்காயைக் கூட கண்டுபிடிக்கமுடியாத வெண்டைக்காய்
ஆகிவிடுவான் பையன்!
ஆக
மொத்தம் அப்படிப்பட்ட வெண்டைக்காய்களை உருவாக்குவதையே சிரமேற்கொண்டு செய்துவரும் நிறைய பள்ளிகளில் , பாரம்பரியம், படிப்பு, கௌரவம் என்று பல பெயர்களை எடுத்துவரும் ஒரு பள்ளியில் தன் குழந்தையைச் சேர்ப்பதற்கு, சாம,தான முறைகளைக் கையாண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். பேத,
தண்ட முறைகள் இங்கு செல்லாது எனக்கொள்க!
சரி..
விஷயத்துக்கு வருவோம்.
அப்படிப்பட்ட,
ரொம்ம்ம்ம்பப் பெரிய பெயரெடுத்த பள்ளியான பத்மா சேஷாத்ரியில் தன் பையனை ஒன்பதாம் வகுப்பில்
சேர்ப்பது என்று எனது நெருங்கிய நண்பரும், திரையுலகப் பிரபலமும் ஆன ஒருவர், தீவிர முயற்சியை
மேற்கொண்டார். நானும் அவரும் அந்தப்பள்ளியின் தலைமை அலுவலகம் சென்றோம். அங்கு மிகவும்
பொறுப்பாக பதில் சொன்னார்கள். ‘கட்டாயம் சீட் கிடைக்காது.’ என்று!
இருந்தாலும்
ஏதாவது ஆற்றல்வாய்ந்த சிபாரிசு இருந்தால், கட்டாயம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று ஒரு
பாதுகாவல் தெய்வம் சொன்னது. அப்படி யாரிடம் சிபாரிசு வாங்குவது என்று நினைத்தபோது,
நம் திரையுலக நண்பருக்கு, அந்தப்பள்ளியின் மிகநெருங்கிய சொந்தமான, வாரிசான ஒரு பிரபலம் நினைவுக்கு
வர, அவரை அணுகுவது என்று முடிவெடுத்தோம். அதே நாளன்று , அந்த பிரபலத்தின் ஊழியர் ஒருவரைச்
சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பழம்
நழுவிப் பாலில் விழுந்தது.
‘இம்புட்டுதானே
சார்! நான் அய்யாக்கிட்ட பேசுறேன். உடனே வாங்கிக்குடுத்துருவார். கவலைப்படாதீங்க! என்றார்.
அன்று
இரவே தொலைபேசினார்.
‘சார்!
அய்யா உங்க பையனுக்கு சீட்டு வாங்கித்தர ஒத்துக்கிட்டாங்க!
’ரொம்ப
நன்றிங்க!’
பரவாயில்ல
சார்!..மத்தவங்ககிட்ட ஒரு லட்சம் வாங்குவாரு! நீங்க 75000 தந்தா போதும்னுட்டாரு!
‘திக்’
என்றது எங்களுக்கு! இருந்தாலும், பையனை அந்தப்பள்ளியில் சேர்த்துவிடும் மோகமும், வேகமும்
– சிந்திக்கவிடாததால், ‘சரி’ என்று சொல்லிவிட்டோம். இதைத்தவிர பள்ளியின் ஃபீஸ் வேறு
கட்டவேண்டும்.
அடுத்த
நாள் காலையே அந்த ஊழியரின் உதவியுடன், பிரபலத்தின் வீட்டலுவலகத்துக்குச் சென்று அவரது
மேனேஜரைச் சந்தித்து, சீட் வாங்கித்தருவதற்கு முன்னரே 75000 கொடுத்தாயிற்று. (இதைவிட, எனக்கு சீட் வாங்கிக்கொடுத்த ஆட்டோக்காரர் நியாயவான்! அவர் வேலை முடிந்தபின்தான் பணம் வாங்கிக்கொண்டார்! ) அப்போது மேனேஜரிடம்..
‘எப்ப
சார் சீட் கிடைக்கும்?’
அதை
நான் சார்க்கிட்ட கேட்டுத்தான் சொல்லமுடியும்! நீங்க அப்ளிக்கேஷன் வாங்கி, பையனை என்ட்ரன்ஸ்
எழுதச்சொல்லுங்க! என்று நிதானமாகச் சொல்லிவிட்டு பணக்கட்டுகளை எடுத்துக்கொண்டு அய்யாவைப்
பார்க்கச் சென்றுவிட்டார்.
உடனே
பையனுக்கு, அப்ளிக்கேஷன் வாங்கி, நுழைவுத்தேர்வும் எழுதினான். நமக்குத்தான் கட்டாயம்
சீட் கிடைக்கப்போகிறதே என்ற நம்பிக்கையில், அவன் படிக்கவே இல்லை.
ஆகவே நுழைவுத்தேர்வு
அவுட்..!!
அப்புறம்தான்
தெரியவந்தது இந்தத்துறையின் மற்றும் அந்தத் தொரையின் கோரமுகம்.!
நுழைவுத்தேர்வில்
ஃபெயில் ஆகிவிட்டான் என்று நண்பர் அந்த மேனேஜரிடம் போய்ச் சொல்ல, ‘ஓ! அப்படியா? அப்ப
ஒண்ணும் செய்யமுடியாது! சீட் இல்லை.! கிளம்புங்க! என்று சாவதானமாக பதில் கொடுக்கிறார்.
அடுத்த
திக் ஆரம்பித்துவிட்டது.
’அப்ப,
நாங்க கொடுத்த 75000 பணம்?’
’அது
எப்படி திருப்பிக் கொடுப்பாங்க? நாந்தான் முன்னாடியே சொன்னேனே… எக்ஸாம் எழுதி பாஸ்
பண்ணினாத்தான் சீட்டு வாங்கித்தரமுடியும். அப்படி எக்ஸாம் ஃபெயில் ஆகிட்டா பைசா திரும்பத்தரமுடியாதுன்னு…’
நண்பர்
கத்த ஆரம்பித்துவிட்டார்.
‘நானும்
சினிமாத்துறைலதான் இருக்கேன். என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க? சீட்டே வாங்கித்தரலை…என்
பணத்தை கொள்ளையடிக்கப்பாக்குறீங்களா? பிரஸ்மீட் போட்டு நாற அடிச்சுருவேன்’ என்று சொல்லவும்..
மீண்டும்
மேனேஜர் அய்யாவைப் பார்க்கச் செல்கிறார். திரும்ப வந்து,
’யாருக்கும்
அப்படி பணத்தை திருப்பித்தர்றதில்லை. இருந்தாலும் நீங்க சொன்னதால், உங்க பையனுக்காக
போன் செஞ்சதுக்காக மட்டும், ஒரு குறிப்பிட்ட தொகையைக் கழிச்சுக்கிட்டு மிச்சத்தை வியாழக்கிழமை
வந்து வாங்கிக்குங்க!’ என்கிறார்.
அதேபோல்
வியாழக்கிழமை மீண்டும் போய் நின்றால், ’அய்யா ரொம்ப டென்ஷனாயிட்டாரு! நான் சமாதானப்படுத்தி
வாங்கித்தந்திருக்கேன். இந்தாங்க என்று அவர் கொடுத்த தொகை 69000.’
’ஏன்?
பாக்கி என்னாச்சு?’ என்று கேட்டால்..
’சும்மா
போங்க.. அதான் போனதடவையே சொன்னேனே? போன் பண்ணினதுக்கு காசு எடுத்துக்குவோம்னு!’
’அடப்பாவிகளா?
எந்த நெட்வொர்க்குலடா ஒரு போன் பண்ணினா 6000 ரூபாய் பில் வருது?’
ஆக
மொத்தத்தில்..
எந்த
வேலையும் ஆகாமல், அந்த பள்ளியின்மீது ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக ஆறாயிரம் ரூபாயை
இழந்துவிட்டு நின்றார் நண்பர்!
ஒரு
பிரபலமான பள்ளியின் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக, செய்யாத வேலைக்கும் சம்பாதிக்க
நினைக்கும் இவர்களெல்லாம் இந்த சமூகத்தை என்ன நிமிர்த்திவிடப்போகிறார்கள்?
மேலும்,
அந்தப்பள்ளிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டதே?
இப்படியெல்லாம்
சம்பாதித்துதான் வாழ்க்கை நடத்துகிறீர்களா?
உங்கள்
குடும்பப்பள்ளி என்று ஊருக்கே தெரியும். அதில் சீட் வாங்கித்தர நீங்களே பணம் வாங்குகிறீர்கள்
என்றால் அது எந்தவிதமான நிர்வாகம்?
கல்வியை
வியாபாரமாக்கி, அதில் மக்களை அடிமட்ட நுகர்வோராக்கும் இந்தக் கலாச்சாரத்துக்கு துணை
போகும் நீங்கள் எப்படி சமூகத்துக்கு நல்லது செய்துவிடமுடியும்?
இதுபோல்
எத்தனை ஆறாயிரம் ரூபாய்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்?
Why ஜி?

