சலூனில் விருந்து

14 Feb 2008 · சுரேகா சுந்தர்

 நான் சின்னப்புள்ளையா இருக்கும்போது எங்க குடும்பத்தில், தாத்தா, அப்பா, சித்தப்பா, பெரியப்பா பையன் ஒருத்தன், அத்தை பையன் ஒருத்தன், நான் என ஆண்கள் கூட்டம் அதிகம்.

மாசத்தில் ஒரு நாள் ஒரு முடிதிருத்துபவர் வீட்டுக்கே வந்து எல்லாருக்கும் சகட்டுமேனிக்கு போட்டுத்தள்ளிட்டு போவார். அது ஒரு திருவிழா மாதிரி நடக்கும். வரிசையா போய் அந்த பலகையில் உட்காருவது...
பெரியவுங்களுக்கு மட்டும் பிளேடு போட்டு முகச்சவரம் செய்வதை ஏக்கமா பாத்துக்கிட்டே.. எப்படா எனக்கு இந்தமாதிரி முகமெல்லாம் முடி வரும்னு அண்ணன் கிட்ட கேக்கறதுன்னு..சந்தோஷமும் சண்டையுமா நகரும் முடிவெட்டுற நாள்..

அன்னிக்கு எல்லாருக்கும் மிளகு ரசம் மட்டும் வச்சு, சுட்ட அப்பளம், கருவேப்பிலை துவையலுடன் சாப்பாடு பலமா இருக்கும்.

அப்புறம் நாட்கள் போச்சு...நானெல்லாம் சுயமா (?) சிந்திக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடம் போற வழியில் அழகான கண்ணாடி கதவு வச்சு சலூன்கள், உள்ளே பாட்டுக்கேட்கும் சலூன்கள் என பல்வேறு சலூன்கள் இருந்தது. அதில் போய் அந்த குஷன் சீட்டில் உட்கார்ந்து
முடிதிருத்திக்கொள்ளவேண்டும் என்று ஆவல் அதிகமானது.

மேலும் சில சமயங்களில்..முடி வளரும் வேகம் குறைவான தாத்தாவின் தலை நிலையைப்பொறுத்து எங்களுக்கு முடிவெட்டும் காலம் வரும்போது நாங்கள் பழைய டோனி நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.

இதில் பல்வேறு சதிகள் உள்ளடங்கி இருக்கும்..அதிகம் முடிவளர்ந்தபின் வெட்டினால்தான் கொடுக்கும் காசுக்கு அவரிடம் வேலை வாங்கிய திருப்தி இருக்கும். மேலும் வளரும் பிள்ளைகளுக்கு ஒட்ட வெட்டவேண்டும் என்று அவரை டார்ச்சர் செய்வது என்று!

ஒரு முறை அவர் ஆத்திரமும், இயலாமையுமாக சீப்பு மட்டத்துக்குக்கீழ வெட்டமுடியாதும்மா என்று புலம்பியேவிட்டார்.

இந்த நிலையில் சலூன் கோரிக்கை வைத்து நான் மெதுவா வீட்டில் பிட் போட ஆரம்பிக்கவும், எல்லோருமே இந்த சுதந்திர தாகம் எடுக்கவும் சரியாக இருந்தது.ஆகவே அவரவர் விருப்பப்படி முடி திருத்திக்கொள்ளலாம் என்று விடுதலை பிரகடனப்படுத்தப்பட்டது.நாளை முடிவெட்டிக்கொள்ளப்போகிறோம் என்றால்...சலூன் கனவுகள் இரவெல்லாம் வந்து போனது.

அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. எல்லோரும் ஒரே சலூனுக்குத்தான் போகவேண்டும் என்று.!
அதற்கும் அழுது அடம்பிடித்து பல நாட்கள் முடிவெட்டிக்கொள்ளாமல் போராடி...வேண்டுமென்றே குதறலாக வெட்ட வைத்து கெட்டபெயர் உருவாக்கி என்று
பல்வேறு டகால்டி வேலையெல்லாம் பார்த்த பிறகு..எந்த சலூனிலும் யாரும் வெட்டிக்கொள்ளலாம் என்று குடும்பத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்படியாக, சலூனுக்கு சென்று முடிதிருத்தும் அளவுக்கு தலைமுறைப்புரட்சி செய்த எனக்கு 13 வயது ஆகிவிட்டிருந்தது.

அடுத்த புரட்சியாக வந்து சேர்ந்தான்..என் பள்ளித்தோழன் ஒருவன்.

டேய்! நம்ம பரக்கத் ஸ்டோர்க்கிட்ட இருக்குல்ல..குமார் சலூன்...?

ஆமா!

அங்க இன்னிக்கு முடிவெட்டபோனேன்..

ம்

பேப்பரு..புக்கெல்லாம் கிடந்துச்சு..

சரி..அதுக்கென்ன?

அதுலதாண்டா விசயமே இருக்கு..! அதுல 'விருந்து' ன்னு ஒரு புக்கு இருந்துச்சு பாரு! ஆஹா.!

அப்படி என்னடா இருக்கும் அதுல?

எல்லாம்...மேட்டர்தான்..கதைதான்...!படமெல்லாம் சூப்பர் சூப்பரா இருக்கும்!

(உண்மையா இருக்கணுமே என்ற கவலையுடன்) ச்சீ..பொய் சொல்லாத..!

சத்தியமாடா! (இதுக்கெல்லாம் சத்தியம் வேற)

மேலும் விவரமாய் அவன் சொல்ல ஆரம்பிக்க விருந்து பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறியை கடுமையாகத் தூவிவிட்டான்..அந்த கடன்காரன்!

அன்றைக்கே முடிவுக்கு வந்துவிட்டேன்...அடுத்தமுறை குமார் சலூனில்தான் முடி வெட்டிக்கொள்வது என்று..!


அப்ப 'விருந்து'? - இருங்கப்பு! அடுத்த பாகத்துல சொல்றேன்.!

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →