சாமி காட்டிய தங்கசாமி!

11 Feb 2008 · சுரேகா சுந்தர்

மரம் தங்கசாமி அய்யா வீட்டுக்குள் போனபோது...
அது ஒரு சாதாரண ஓட்டு வீடு.!
சுற்றிலும் மரங்கள்...அந்த தோப்புக்குள்தான் அவரது வாசம்!
நான் சென்ற நாள் தீபாவளி!      பலகாரம் எல்லாம் கொடுத்து நன்கு கவனித்தார்.
அவர் மனைவிக்கு காது கேட்பதில் கொஞ்சம் சவால், ஆகவே சத்தமாகவும், சைகையுடனும் பேசி..அவரையும் அன்பாக நடத்தி உணவு வழங்கினார்.
(எவ்வளவு பெரிய முறுக்கு..சீயம்..அடேயப்பா!)

தேக்கு..செஞ்சந்தனம், சந்தனம், வேம்பு என்று பல மரங்களைப்பற்றி நிறைய தகவல்கள் சொன்னார்.
சாலமன் தீவுகளில் மரங்களைத்திட்டித்தான் பட்டுப்போகவைத்துவிட்டு வெட்டுவார்கள் என்றும் சொன்னார்.பயமாக இருந்தது...வாக்கின் வலிமை பற்றி யாரோ எழுதியது நினைவுக்கு வந்தது...
இப்போது தாரே சமீன் பர் படத்திலும் அதே தகவலை ஆமீர்கான் சொன்னதும் அடேயப்பா நம்ம ஆள் சாதாரணமானவரில்லை என்றிருந்தது.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நல்ல நண்பர் என்றார்.!

இப்படி பேசிக்கொண்டே,
வாங்க சாமி ரூமுக்கு போலாம் என்றார்..!

அது ஒரு சின்ன தடுப்பு இடப்பட்ட அறை! இந்தப்பக்கம் நாம்! அந்தப்பக்கம் கடவுள்! இடையில் திரை.!
நான் தங்கமணியுடன் போயிருந்ததால், அவர் தங்கமணியைப்பார்த்து நீங்க இதுவரைக்கும் பாக்காத கடவுளை பாக்கப்போறீங்க! நல்லா கண்ணை மூடி தியானம் பண்ணுங்க! என்றார். தங்கமணியும், 'எப்பயும் லொள்ளு பேசிக்கிட்டே இருப்பீங்களே..! இங்கயாவது ஒழுங்கா என் கிட்ட வந்து நில்லுங்க.. நான் வேண்டிக்கிறேன்' என்றார்..சரி ..! விதி வலியதுன்னு நானும் தங்கமணி பக்கத்தில் போய் நின்றுகொண்டேன்.

நல்லா கண்ணை மூடி தியானியுங்க! - தங்கசாமி அய்யா!

சரிங்கய்யா ! - தங்கமணி

என்னமோ வித்யாசமா மரம் தான் கடவுள்னு சொல்லப்போறார்ன்னு நினைத்துக்கொண்டே நான் நின்றுகொண்டிருந்தேன்.சில வினாடிகளுக்குப்பிறகு, திரையை அகற்றினார். (தங்கமணி இன்னும் ஆழ்ந்த வேண்டுதல்களோடு..கண்கள் மூடியபடி...)

எனக்கு உண்மையிலேயே ஒரு வினாடி அதிர்ச்சியாய் இருந்தது.. ஆனாலும் மகிழ்ச்சியாய் இருந்தது.

பக்கத்தில் தங்கமணியை 'பாரு' என்று நான் சொல்ல,
அவர் விழித்துப்பார்த்தபோது.....

அங்கே திரைக்குப்பின்னால் இருந்தது..

ஆளுயர நிலைக்கண்ணாடி.!
கைகளைக்கூப்பியபடி...தன்னைத்தானே பார்த்தபடி..தங்கமணி!

'உங்களைவிட கடவுள் யார் இருக்கா?'
என்று மென்மேலும் அதிர்ச்சியூட்டினார் (தங்கமணிக்கு)

'அய்யா..நீர் மரம் மட்டும் வளர்ப்பதில்லை! மனிதமும் வளர்க்கிறீர்கள்' என்று வாழ்த்துக்களை பதிந்துவிட்டு வந்தோம்.

வரும்போது தங்கமணி கேட்டார்..' முழுசா மனசார வேண்டிட்டு..திடீர்னு நம்ம உருவத்தையே பாத்தவுடனே நாம நினைச்சதெல்லாம் நடந்துரும்னு ஒரு நம்பிக்கை திடீர்ன்னு வந்ததுங்க..! என்னை நான் இதுவரைக்கும் வணங்கிருக்கேனான்னே தெரியலைங்க! ஒருவேளை நாமதான் கடவுளோ?'

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →