என் இனிய அந்தோணி முத்து..!

01 Aug 2008 · சுரேகா சுந்தர்

நீங்கள் சாதாரணமாகச் சொல்லிப்போன
இந்தப்பதிவை என்னால் 
இவ்வளவு நேரமாகியும்
மறக்கமுடியவில்லை..!

உங்கள் வலிகள் வாங்கவில்லை நான்!
உங்கள் வரிகளை வாங்கி 
அமர்ந்திருக்கிறேன்.!

இந்தச்சிந்தனைக்கு எத்தனை மனிதம் 
வேண்டுமென்று.. எண்ணி எண்ணி 
மாய்ந்திருக்கிறேன்.
இவ்வளவு ஆழமாக வாழ்க்கை பார்த்த 
உங்களுக்கு வாழ்வியல் 
உதவிகளைச்செய்யவைத்து 
மனிதம் வளர்க்கும் பெரியவர்களை 
மனதில் வாங்கிக் கசிந்திருக்கிறேன்.

எறும்புகள் இப்படி ஒரு மனிதரை
எப்போதும் சந்திக்கப்போவதில்லை!
இனிமேலும் அவை கடிக்கும் இடம்
அதற்கு கோவிலென்றுதான் வந்துபோகும்!
வலிக்காக வலிகொடுக்கும் வாழ்க்கையை
வலியற்ற வலியாக மாற்றிவிட்டீர்கள் அய்யா!


யார் சொன்னார்கள் நீங்கள் 
வாங்கப்பிறந்தவர் என்று...!
நிறைய அள்ளிக் 
கொடுக்கப்பிறந்தவர் நீங்கள் !

எறும்புகளுக்கு உணவையும்...

எங்களுக்கு  தன்னம்பிக்கையையும்!

நாங்கள்தான் வாங்கப்பிறந்திருக்கிறோம்..!
வாழ்வின் நிதர்சனத்தையும்
வலிகளின் ஏற்றலையும்,
எதிர்காலப்பிரகாசத்தையும்
இதயமெல்லாம் உறுதியையும்
அள்ளி அள்ளிக்கொடுங்கள் !
அசராமல் கொடுங்கள் !

வாங்கப்பிறந்தவர்கள் நாங்களென்று
மார்தட்டிச்சொல்லுகிறோம்
கொடுப்பது அந்தோணிமுத்து என்பதால்!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →