அதுக்காக இப்புடியா சுருங்கணும்?

19 Aug 2008 · சுரேகா சுந்தர்


அன்னிக்கு ஒரு வேலையா அந்த மாநகரத்தின் பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டிருந்தேன். எல்லாரும் ஆளுக்கொரு செல்போன வச்சுக்கிட்டு அப்புடி என்னத்தத்தான் பேசுவாங்களோ.....பேசிக்கிட்டே இருந்தாங்க!

ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு புக்குல படிச்ச விஷயம் ஞாபகத்துக்கு வந்தது..!

அதாவது நாம பேசுற எல்லா ஒலிகளும் காத்துலதான் அலைஞ்சுக்கிட்டிருக்கு.. அந்த ஒலி அலைகளைத் தேடினா...ஏசுநாதர் பேசின விஷயங்களைக்கூட கண்டுபிடிச்சுடலாம்ன்னு போட்டிருந்தது.  ஆனா இப்ப காலம் போற போக்கப்பாத்தா...இந்த செல்போன் வந்தப்புறம் மக்கள் ஓவரா பேசித்தள்ளி...இந்த பிரபஞ்சம் , வான்வெளி...சூரியக்குடும்பம்ன்னு எங்கெல்லாம் ஒலி போகமுடியுமோ அங்கெல்லாமே போய் நம்ம பேசின பேச்செல்லாம் போய் அடைச்சுத்தள்ளியிருக்கும்.

அதிலயும்,   அந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணினா... அப்புறம்.... அப்புறம். ங்கிற வார்த்தை மட்டுமே எல்லாத்தையும் விட ஜாஸ்தியா இருக்கும்.  நம்மகிட்டயும் செல்போன் வச்சிருக்கோமே...! அதுவும் ஒரு நம்பருக்கு ரெண்டு நம்பரா...நாமளும் ஓவராத்தான் பேசித்தள்றோம்.. ரோட்டுக்கு அந்தப்பக்கம் இருக்குறவன்கிட்ட கூட இந்தப்பக்கத்திலேருந்து பத்து பைசா கால் தைரியத்துல எவ்வளவு பேசுறோம்ன்னெல்லாம் நினைச்சுக்கிட்டிருந்தேன்...(யாருக்காவது காத்துக்கிட்டு நிக்கிம்போதுதான் இந்தமாதிரி கொனட்டலா நெனைக்கத்தோணும்! )

 

ஒரு ஆள்....40 வயசிருக்கும் வேகமா எப்பவும்போல ஒரு செல்போனை காதுல வச்சிக்கிட்டு பேசிக்கிட்டே வந்துக்கிட்டிருந்தாரு! ‘ஹலோ..ஹலோ...ஸாரிப்பா...பேட்டரி சார்ஜ் தீந்துருச்சு போல இருக்கு! நானே ஒனக்கு கால் பண்றேன் ன்னு சொல்லிக்கிட்டே எனக்குப் பின்னாடி வந்தாரு..!

என்னமா லந்தக்குடுக்குறாங்கப்பா..! லைன்ல அந்தப்பக்கம் எந்தக்கடன்காரனோ..உடனே  பேட்டரி வீக்குன்னு ஒரு பிட்டப்போட்டு தப்பிக்கப்பாக்குறானேன்னு ஒரு எளக்காரப்பார்வை பாத்துக்கிட்டிருக்கும்போதே அந்த ஆள்...காயின் பூத்துக்கிட்ட போனார். அது எனக்கு நேர் பின்னாடி  5 அடி தள்ளி இருந்தது. அட... நல்லவரா இருப்பாரு போல இருக்கே...! ன்னு நினைச்சுக்கிட்டிருக்கும்போதே...அவர் நம்பரை அழுத்திப் பேச ஆரம்பிச்சுட்டாரு..!

 

“ஆமாம்ப்பா ஸாரி...போன் ஆF  ஆகிடுச்சு! அதான் காயின் போன்லேருந்து கூப்புடுறேன். சொல்லுப்பா அவரை இன்னிக்கே போய் பாத்துடவா?

 

அந்தப்பக்கம் என்ன பதில் வந்துச்சுன்னு தெரியலை!

 

“சரிப்பா ! அவர் நம்பரைக்குடு..! இரு இரு எழுதிக்கிறேன்...

 

இந்த பேச்செல்லாம் ஓரக்கண்ணால நானும் கவனிச்சுக்கிட்டே இருந்தேன். 

( வேற வேலை?)


திடீர்ன்னு என் முதுகைத்தட்டினார்...சார்...பேனா குடுங்களேன்..!

 

இவ்வளவு நேரம் நமக்கு காலம் கடத்த உதவினாரேன்னு நானும் குடுத்தேன்...அப்புறம் அவரை நல்லா திரும்பிப்பாக்குற உரிமையை நானே எடுத்துக்கிட்டு...அவர் என்ன செய்யுறாருன்னு கையைக்கட்டிக்கிட்டு பாக்க ஆரம்பிச்சேன்.

 

சட்டைப்பையிலேருந்து ஒரு பேப்பரை எடுத்து ம்...சொல்லுங்க...! நைன்...செவன்...

ச்சை....எழுதமாட்டேங்குது...இருப்பா...! (என்னைப்பாத்து) ....சார்...! ஒரு பேப்பர் இருக்குமா..? என்கிட்ட இருக்குற பேப்பர் அழுக்கா இருக்கு..! அதான் உங்க பேனா எழுத மாட்டேங்குது...ப்ளீஸ்ன்னார்....சரின்னு நானும் ஒரு துண்டுப்பேப்பரை என் சட்டைப்பையிலேருந்து எடுத்துக்கொடுத்தேன்...!

 

இப்ப சொல்லுப்பா...! என்னவோ தெரியலை...! தடங்கலாவே இருக்குன்னார்!

அய்யோ பாவம்..ஒரு நம்பரை வாங்க இவ்வளவு பிரயத்தனப்படுறாரே...! ன்னு நினைச்சுக்கிட்டே பாத்தேன். மறுபடியும் நம்பரைச்சொல்ல ஆரம்பிச்சார்...

(தொடரும்)

 

 

 

 

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →