இயற்கை கொடையினைக் காப்போம் !

07 Dec 2008 · சுரேகா சுந்தர்



இயற்கையில் இழந்ததையும்

இழந்ததில் இருப்பதையும்

இருப்பதில் காப்பதையும்

காப்பதில் வாழ்வதையும்,

வாழ்வதில் மடிவதையும்

மடிவதில் முடிவதையும்

பயத்துடன் பகிர்கின்றேன்.



அண்டத்தின் பெருவெடிப்பும்

பூகோளப்பிறப்பெடுப்பும்

புவியியல் புத்தகத்தில்

எப்போதோ கண்டதுண்டு!


பிறந்தபின் பூமியும் 

தன்னைத்தானே செதுக்கியது.

நெருப்புடனே பிறந்துவந்து

காற்று கண்டு

நிலத்தைக் கண்டு

காலம் கடந்து நீரைக்கண்டு

உயிரினங்கள் ஒன்றிரண்டை

ஓடியாட வைப்பதற்குள்

களைத்துப்போன 

இயற்கைக்கு அப்போதே

வயது எழுபது கோடி!


வாழ்வியல் ஓட்டத்தில்

இருப்பியலின் தாக்கத்தில்

தேவைகளின் மாற்றத்தில்

ஒன்றையொன்று சார்ந்துவந்து

உயிரினங்கள் பெருகின!


பெருகிய உயிரினங்களில்

நடந்து வந்து

பேசி நின்று

மூளையெனும் ஆயுதத்தை

முழுமையாகக் கண்டுணர்ந்து

சிந்தித்து செயல்புரிந்து

சிறப்பாக நம்மைக்காப்பான்

என்றெண்ணி இயற்கையும்

மனிதனென்ற உயிரினத்தை

மமதையுடன் படைத்துவிட்டு

மார்தட்டி நின்றது!



வந்திறங்கியவன்

வஞ்சகன் என்றறியா

பித்துமனம் கொண்ட

பேதைத்தாய் இயற்கையும்

பெருஞ்செல்வம் அவனுக்கு

பூமியெங்கும் தந்துவிட்டு

பொறுமை காத்து வந்தது  !



(வழக்கம்போல தொடரும்..!)


← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →