இது வேறு..இதிகாசம்..

13 Jan 2008 · சுரேகா சுந்தர்



தமிழில் திரைப்படக்கலை இன்னும் அதிகப்படிகள் முன்னேறும் என்று பறைசாற்றும்வகையில், இப்போது ஆவண, குறும்படங்கள் நன்கு அமைகின்றன.அப்படி ஒரு வரிசையில் இன்று நாங்கள் பார்த்த ஒரு அற்புத ஆவணப்படம்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தலித்களுக்கு நடந்த கொடுமைகளைத்தொட்டுவிட்டு,தமிழகத்தில் மாஞ்சோலை மரணங்களைக்காட்டிவிட்டு நேரடியாக.பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊர்களில் நடத்த முடியாத தேர்தல்களையும், அதன் விளைவுகளையும், முழுக்க முழுக்க உண்மைச்சம்பவத்தை , யார் மனதும் நோகாமல் நடுநிலையோடு எடுக்கப்பட்டிருக்கும் இதன் தலைப்பு...

இது வேறு...இதிகாசம்!


1996முதல் அந்த ஊருக்குள் தேர்தலே நடத்தமுடியாமல் திணறும் அரசு,
வேட்பு மனு தாக்கல் செய்வதையே ஏற்றுக்கொள்ளாத சமூகம்,
துணிந்தவர்கள் கொலைசெய்யப்பட்ட நிலை!
அந்த மக்களின் இயல்பான வாழ்க்கை அவலங்கள்!
சர்வசாதாரணமாக கொலைகளுக்கு சாட்சியாக இருக்கும் ஆலமரம்,!
ஒப்புக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தி அடுத்த நாளே அவரை ராஜினாமா செய்யச்சொல்லும் கயமைத்தனம்,
பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள்!
மாவட்ட ஆட்சியர் உதயசந்திரனின் முயற்சிகள், அதன் மூலம் நடக்கும் தேர்தல்!
வெற்றி பெறும் வேட்பாளர்கள்!
காவல்துறை துப்பாக்கிப்பாதுகாப்பு!
என்று அது தொடர்பான செய்திகளைத்தொட்டு
பல்வேறு துறை வல்லுநர்கள், இருதரப்பு மக்கள், அரசியல் வாதிகள் அனைவரது கருத்துக்களுடன் ஒருவழியாக தேர்தல் முடிந்தது என்று நினைக்கும்போது 2006ல் நக்கலமுத்தன்பட்டியில் நடந்த ஊரட்சி மன்றத்தலைவர் ஜக்கனின் கொலையைச்சொல்லி, அவரது மகளின் கண்ணீரோடு படம் நிறைவடைகிறது...THIS IS NOT END என்ற எழுத்துக்களோடு.! 

குழப்பமில்லாத நேர்த்தியான தொகுப்பு! இத்திரைப்படத்தைப்பார்த்தபின், அந்த கிராமங்களின் 10 ஆண்டுகால சரித்திரத்தை படித்த உணர்வு! பின்னணி குரலே இல்லாமல் முழுப்படத்தையும் பேட்டிகளாலேயே நிரப்பி, அந்த வித்தியாசம் தெரியாமலேயே கொண்டுசென்ற நுட்பம் என்று ஒரு நல்ல ஆய்வுப்புத்தகம் படித்த திருப்தியை அளித்தது.  

அதில் ஒரு கவிதை வருகிறது... அது.

என் தாய் கருவுற்றிருந்தபோது
தெள்ளித்தின்ற மண்ணைத்தவிர
இந்த பரந்த தேசத்தில்
எங்கள் மண் எது?

தடித்த உங்கள் இதிகாசங்களில்
எந்தப்பக்கத்தில்
எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும்
ஒளியையும் தராமல்
சூரியச் சந்திர சுழற்சிகள்
எதுவரை?


இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் திரு.ஜா.மாதவராஜ் அவர் கூறும்போது...(ஆம்..அவர் முன்னிலையில்தான் திரையிடப்பட்டது)

"1996ல் நடந்த கொலைக்குக்காரணம் ஒரு தலித் பதவிக்கு வர ஆசைப்பட்டது, 2006ல் நடந்த கொலைக்குக்காரணம் பதவிக்கு வந்த தலித் கணக்குக்கேட்டது.!

10ஆண்டுகளுக்கு முன்னால் பதவிக்கு வருவதைப்பொறுத்துக்கொள்ளாத மக்கள், இப்போது பதவிக்கு வந்தாலும் அதனைப்பயன்படுத்துவதை பொறுத்துக்கொள்ளாத நிலைக்கு வந்திருக்கிறார்கள்! இதைத்தான் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.!


சுமார் 75 மணிநேர காட்சிக்கோர்வைகளிலிருந்து 65 நிமிடப்படமாக தொகுக்கப்பட்டிருக்கிறது!

இதைப்படமாக்கும்போது பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது." என்றார்.

ஒளிப்பதிவாளர் ப்ரியா கார்த்தி ,இணை இயக்குநர் சு.காமராஜ் ஆகியோரும் வந்திருந்தார்கள்!

கடைசிச்செய்தி : இயக்குநர் ஜா.மாதவராஜின் மாமனார்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள்!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →