தமிழில் , பழிவாங்கும் கதைகளில்,அடிதடியை விட்டால் வேறு ஒன்றுமே திரைக்கதையாக இல்லையா என்று அடிக்கடி நாங்கள் விவாதித்துக்கொள்வோம்.
அதில் பெரும்பகுதியை நிவர்த்தி செய்ய வந்துள்ளது நியூட்டனின் 3ம் விதி!
எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு சிறந்த படம் அமைந்தது அவர் செய்த புண்ணியம்!
முழுக்க முழுக்க புத்திசாலித்தனத்தை மட்டும் பயன்படுத்தி, ஒரு திருப்தியான படத்திற்கு அடிகோலியிருக்கிறார் இயக்குநர் தாய்முத்துச்செல்வன்
குரு(எஸ் ஜே சூர்யா) , ஈகிள் டிவி காம்பியரான ப்ரியாவை(ஷாயாலி பாகத்) க்காதலிக்கிறான். ஒரு சில கலாட்டாக்களுக்குப்பிறகு காதல் கைகூடி திருமணம் செய்யலாமென்று முடிவெடுத்த தினத்தன்று ஓரிரு சம்பவங்களுக்குப்பிறகு...ப்ரியா தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறார்.
ஏன் என்று அவன் அலையத்தேவையே இல்லாமல், ஒரு ஆதாரத்தை ப்ரியா விட்டுச்செல்கிறாள்.
அடுத்த ஆண்டு அவள் இறந்த அதே நாளில், காலை 10 மணிக்கு , குரு பிரம்மாண்டமான மீடியா சாம்ராஜ்ய மன்னன் ஈகிள் டிவியின் ஜேப்பி(ராஜீவ் கிருஷ்ணா)க்கு ஒரு போன் செய்கிறான் ! இன்று பகல் சரியாக 12 மணிக்கு உன்னைக்கொல்கிறேன் என்று !
அதை முதலில் நம்பாத ஜேப்பியை நம்பவைக்க, அடுத்த 3 நிமிடங்களுக்கு சேனல்களை நிறுத்திக்காட்டுகிறான். ஜேப்பி போலீஸின் உதவியை நாட,
அவர்கள் செல் நம்பர் மூலம் ஆளைக் கண்டுபிடிக்க, அது ஜேப்பியின் சின்னவீடான தாரிகாவை அடைகிறது. போலீஸ் விபரம் தெரியாமல் அவள் மீது கைவைக்க, விஷயம் குரு மூலமாக மீடியாவுக்குப்போய் மானம்
கப்பலேறுகிறது.
ஜேப்பியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிக்கும் குரு , அவனது அலுவலக பாத்ரூமிற்கு வரச்சொல்லி அங்கும் ஒரு விளையாட்டு காட்டி - முழுமையாக பயமுறுத்துகிறான். பின்னர் தனியாக ஒரு ஏரியாவுக்கு
வரச்சொல்லி, அங்கு போக்குக்காட்டி அவனைவிட்டு ஒரு காரை எடுக்கச்சொல்ல, ஜேப்பிக்கு திக் என்கிறது. ஏனெனில் அது அவனது கள்ளப்பணம் வைத்திருக்கும் கார். அதை எடுத்துக்கொண்டு கோயம்பேடு
பஸ்டாண்டுக்கு வரச்சொல்கிறான். அங்கு -குருவைத்தாக்க -தேவா (யுகேந்திரன் ) என்ற ரவுடியின் ஆட்களையும் ஜேப்பி வரவழைத்திருக்க, அதைக்கண்டுபிடித்து, அவர்களுக்கு தர்ம அடி வாங்கிக்கொடுத்து, அதிலிருந்து ஜேப்பியை
காப்பாற்றுவதுபோல் நடித்து, தன்னைப்பற்றி ஒரு பெரிய பயத்தை உருவாக்கி தப்புகிறான்.
ஆனால் பஸ்டாண்டில் , வருமான வரி அதிகாரிகள் காரில் உள்ள கள்ளப்பணத்தை கைப்பற்றுகிறார்கள்.
இப்படியே ஒவ்வொன்றாகச்செய்து ஜேப்பியின் எல்லா கருப்புப்பக்கங்களையும் வெளிக்கொண்டுவந்து , அலற அடிக்க, தன்னை மிரட்டுவது யார் என்றே தெரியாமல் ஜேப்பி தடுமாற, தேவா மூலம் ஐடியா கிடைக்க , குரு ,ஜேப்பி கையில் சிக்கி சின்னாபின்னமாகி, கடைசியில் 12 மணிக்கு ஜேப்பியைக் கொன்றானா இல்லையா என்பதுதான் கதை..!
ஒரு சில லாஜிக் மீறல்களை நீக்கிவிட்டுப்பார்த்தால், காட்சிகளை வீணாக்காததற்கு டைரக்டருக்கு ஒரு பெரிய பூங்கொத்து!
சூர்யாவும் மிகவும் அடக்கி வாசித்து, கதாபாத்திரத்தின் பழிவாங்கும் உணர்ச்சியை மிகவும் அற்புதமாக நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.
போலிசாக வரும் தலைவாசல் விஜய் " Sir ! This is my phone ! " என்பது மிகச்சரியான யதார்த்தம்!
யுகேந்திரன் , தேவா என்ற ரௌடியாக வந்தாலும் ரசிக்க வைக்கிறார். யார் இதைச்செய்திருக்க முடியும் என்று அவரை விட்டு விளக்க வைத்திருப்பது மிகச்சரியான காட்சி! 'அவன் இந்த ஒரு நாளுக்காக 365 நாள் வேலை பாத்திருக்கான் ' என்று உணர்ந்து சொல்லும்போது அவருக்கே கைதட்டல் விழுகிறது.
மற்றபடி எல்லாக்கதாபாத்திரங்களும் தன் பங்களிப்பை சீராக வழங்கி தமிழுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தைத்தந்திருக்கிறார்கள்.
ஹீரோவை விட்டு ஒரு சண்டைகூடப்போடச்சொல்லாமல், ஆனால் வில்லனுக்கு அடி மேல் அடி விழ வைத்திருக்கிறார்கள்.
கடைசிக்காட்சியில் மட்டும்தான் எஸ் ஜே சூர்யா 1 நிமிடம் சண்டை போடுகிறார். மற்றபடி எல்லாமே புத்திசாலித்தனமான காட்சிகள்தான்.!
நியூட்டனின் மூன்றாம் விதியில் - அட போட வைத்திருக்கிறார் இயக்குநர்!
வாழ்த்துக்கள் சார்!